இலங்கை சிறை அதிகாரிகள் வேலைநிறுத்தம் முடிவுக்கு வந்தது

புதன், 8 அக்டோபர் 2014 (08:22 IST)
சிறைச்சாலை அதிகாரிகள் மேற்கொண்ட வேலை நிறுத்தம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டதாக சிறைச்சாலைகள் திணைக்களத்தின் ஊடகப் பேச்சாளர் டி.என்.உபுல்தெனிய தெரிவித்தார்.


 
அதிகாரிகளின் பிரச்சினைகளுக்கு தீர்வுகளைப் பெற்றுக்கொடுப்பதாக சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் வழங்கிய உறுதிமொழியை அடுத்தே இந்த வேலை நிறுத்தம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
 
இலங்கையில் சிறை அதிகாரிகள் மேற்கொண்ட வேலைநிறுத்தம் காரணமாக தலைநகர் கொழும்பு மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் அமைந்துள்ள நீதிமன்ற நடவடிக்கைகள் முழுமையாக நின்றுபோயிருந்தன.
 
கொழும்பு, மகஸின் மற்றும் வெலிக்கடை சிறைச்சாலைகளில் பணிபுரியும் சிறை அதிகாரிகளே வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டிருந்தனர்.
 
“கண்மூடித்தனமான இடமாற்றங்களை ரத்து செய்யுமாறு” கோரி இந்த வேலைநிறுத்தத்தை தாங்கள் ஆரம்பித்திருப்பதாக சிறை அதிகாரிகள் தெரிவித்திருந்தனர்.
 
இந்த வேலைநிறுத்தம் காரணமாக கொழும்பு மாவட்டத்தில் அமைந்துள்ள நீதிமன்றங்களின் வழக்கு விசாரணைகள் முழுமையாக தடைபட்டிருந்தன.

வெப்துனியாவைப் படிக்கவும்