சவூதி மன்னர் அப்துல்லா காலமானார்

வெள்ளி, 23 ஜனவரி 2015 (13:14 IST)
சவூதி அரேபியாவின் மன்னர் அப்துல்லா பின் அப்துலஸில் தனது 90 ஆவது வயதில் காலமானார்.


 
கடந்த பல வாரங்களாக நியுமோனியாக் காய்ச்சல் காரணமாக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இன்று பிற்பகல் பிரார்த்தனைகள்க்குப் பின் அவரது இறுதிச் சடங்குகள் நடைபெறும்.
 
மன்னர் அப்துல்லாவின் மறைவுக்குப் பின்னர் அவரது சித்தப்பா மகன் சல்மான் மன்னராக அறிவிக்கப்பட்டிருக்கிறார். அவருக்கு வயது 79.


 
மறைந்த மன்னர் அப்துல்லா 2005ல் மன்னரானார். ஆனால் அவர் அதற்கு 10 ஆண்டுகளுக்கு முன்னரே சௌதி அரேபியாவின் நடைமுறை ரீதியிலான தலைவராக இருந்தார். ஏனெனின் அவருக்கு முன் மன்னராக இருந்தவர் ஸ்ட்ரோக்கினால் செயலழிந்திருந்தார்.
 
நாட்டின் மத காவல்ர்களை கட்டுக்குள் வைத்திருந்தது, மற்றும் சவூதி அரேபியாவில் நடைமுறையில் இருக்கும் சொற்ப அளவிலான தேர்தல்களில் பெண்களுக்கு வாக்குரிமை தந்தது போன்ற சீர்திருத்தங்களை மன்னர் அப்துல்லா செய்தார் என்று கருதப்படுகிறது.
 
சவூதி மன்னர் அப்துல்லாவின் மறைவையொட்டி, சவூதி மக்களுக்கு அமெரிக்க அதிபர் ஒபாமா இரங்கல் செலுத்தியிருக்கிறார். அமெரிக்காவின் முன்னாள் அதிபர் ஜார்ஜ் புஷ் (மூத்தவர்) மன்னர் அப்துல்லாவை தனது "அன்புள்ள நண்பர்" என்று வர்ணித்து, சதாம் ஹுசேன் 1990ல் குவைத்தின் மீது படையெடுத்தற்கு எதிர்ப்பு திரட்ட அவர் ஆற்றிய பங்கை தான் மறக்க இயலாது என்றார்.
 
மன்னர் அப்துல்லா சௌதி அரேபியாவுக்குச் செய்த சேவைகள், அமைதிக்கு அவர் காட்டிய உறுதிப்பாடு மற்றும் மதங்களுக்கிடையே புரிந்துணர்வை பலப்படுத்த அவர் எடுத்த நடவடிக்கைகள் ஆகியவற்றுக்காக நினைவு கூரப்படுவார் என்று பிரிட்டிஷ் பிரதமர் டேவிட் கேமரன் கூறினார்.

வெப்துனியாவைப் படிக்கவும்