நியுசிலாந்தில் தவறுதலாக சுட்டுக் கொல்லப்பட்ட அரியவகை பறவைகள்

வெள்ளி, 21 ஆகஸ்ட் 2015 (17:23 IST)
நியுசிலாந்தில் கட்டுக்கடங்காமல் பெருகிவரும் பறவைகளை சுட்டுக்கொல்லும் பணியாளர்கள், அருகிவரும் ஆபத்தில் உள்ள பல பறவைகளையும் தவறுதலாக சுட்டுக் கொன்றுள்ள நிலையில், பறவைகள் பெருக்கத்தை கட்டுப்படுத்தும் திட்டத்தை அரசாங்கம் நிறுத்திவைத்துள்ளது.

உலகில் வெறும் 300 பறவைகளே எஞ்சியிருப்பாக நம்பப்படும் பறவை வகை ஒன்றும் அங்கு தவறுதலாக சுடப்பட்டுள்ளது.

ஆக்லாந்துக்கு அருகே உள்ள மொட்டுடாப்பு என்கின்ற தீவுச் சரணாலயத்தில் அதிகளவில் காணப்படும் புக்கேக்கோ (pukeko) என்ற பறவை இனத்தை சுட்டுக்கொல்வதற்கான அனுமதி உள்ளூர் வேட்டையர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.
அளவில் சிறிய புக்கேக்கோ பறவைகளை நியுசிலாந்து எங்கிலும் காணமுடியும்

ஆனால், பறக்கமுடியாத டக்காஹே (takahe) என்ற இனத்தின் 4 பறவைகளையும் அவர்கள் சுட்டுக்கொன்றுள்ளனர்.

இந்தப் பறவைகள் புக்கேக்கோ பறவைகளை ஒத்த நிறத்தில் இருந்தாலும், அளவில் அவை இரண்டு மடங்கு பெரியவை. அத்தோடு அருகிவரும் பறவையினமும் கூட.

பறந்துகொண்டிருக்கும் பறவைகளை மட்டுமே சுடவேண்டும் என்று அவர்களுககு தெளிவாக அறிவுறுத்தப்பட்டிருந்ததாக அதிகாரிகள் கூறுகின்றனர்.

குறித்த பறவைகள் கொல்லப்பட்டமை 'ஏமாற்றம்' அளிப்பதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்