ஆசிய கூடைப் பந்துப் போட்டிகளில் 'ஹிஜாப்' சர்ச்சை: கத்தார் அணி விலகல்

வியாழன், 25 செப்டம்பர் 2014 (18:25 IST)
தென் கொரியாவில் நடந்து வரும் ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் கலந்துகொள்ள வந்திருந்த கத்தார் நாட்டுப் பெண்கள் கூடைப் பந்து அணியினர், போட்டிகளின் போது, இஸ்லாமிய முறைப்படி அவர்கள் அணியும் தலை அங்கிகளை அகற்றுமாறு கோரப்பட்டதை அடுத்து போட்டிகளிலிருந்து விலகிவிட்டனர்.
 
ஹிஜாப் என்ற இந்தத் தலை அங்கியை அவர்கள் மங்கோலியாவுக்கு எதிராக நடந்த போட்டியின்போது அகற்றுமாறு கோரப்பட்டனர். அவர்கள் அதைச் செய்ய மறுத்ததை அடுத்து, இந்தப் போட்டியில் கலந்துகொள்ளும் வாய்ப்பை இழந்தனர்.
 
உலகக் கூடைப் பந்து விதிகள் இதுபோன்ற தலை அங்கிகளை ஆடுகளத்தில் அணிவதைத் தடை செய்கின்றன.
 
ஆனால் இந்த விதியைத் தளர்த்த வேண்டுமா என்பது குறித்து இந்த விளையாட்டை நிர்வகிக்கும் அமைப்பு பரிசீலித்துக்கொண்டிருக்கிறது.
 
ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் விளையாடப்படும் மற்ற விளையாட்டுகளில் இந்த ஹிஜாப் அணிவது தடை செய்யப்படவில்லை.

வெப்துனியாவைப் படிக்கவும்