அதில் செல்பேசிகளில் இந்தியாவில் பரவலாக பயன்படுத்தப்படும் வாட்ஸ்அப், ஸ்கைப், வைபர் போன்ற இணையத்தின் மூலம் பேசும் நடைமுறையும் செல்பேசிகளில் பேசுவதைப் போலவே கருதப்பட்டு செல்பேசிக்கான கட்டணங்கள் வசூலிக்கப்பட வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு பரிந்துரைகள் முன்வைக்கப்பட்டிருக்கின்றன.
இவை இணையத்தின் சமநிலையை பேணாது என்றும், செல்பேசி பயன்பாட்டாளர்களின் தேவைகள் மற்றும் சவுகரியங்களை கணக்கில் கொள்வதற்கு பதிலாக, செல்பேசி நிறுவனங்களின் வருவாயை பெருக்குவது எப்படி என்பதை மட்டுமே கணக்கில் கொண்டிருக்கிறது என்றும் விமர்சனங்கள் எழுந்துள்ளன.
மேலும் செல்பேசிகள் என்பவை, உலகமெங்கும், வெறும் வாய்ப்பேச்சுவழித் தகவலுக்கான சாதனம் என்கிற நிலைமை பத்து ஆண்டுகளுக்கு முன்பே மாறிவிட்டதாகவும், அதற்கு மாற்றாக, இன்றைய செல்பேசிகள் என்பவை கணினி, தொலைக்காட்சி இரண்டையும் இணைத்து உங்கள் உள்ளங்கையில் ஒட்டுமொத்த உலகையும் இணையம் வழியாகக் கொண்டுவந்து சேர்க்கும் தொழில்நுட்ப சாதனம் என்பதா முன்னேறியுள்ள நிலையில், இந்திய அரசின் இந்த இணைய சமநிலை பேணுவதற்கான புதிய கொள்கை, செல்பேசியை வெறும் வாய்ப்பேச்சுவழித் தகவலுக்கான சாதனம் என்பதாக சுருக்கி சுமார் 10 ஆண்டுகள் தொலைத்தொடர்புத்துறையை பின்னுக்கு கொண்டு செல்லும் பிற்போக்குத்தனமானது என்கிறார் லண்டன் பல்கலைக்கழகத்தில் சமூகம், தொலைத்தொடர்புத்துறை மற்றும் ஊடகம் குறித்து முனைவர் பட்டத்துக்கான ஆய்வு செய்துவரும் ஆய்வு மாணவர் முரளி ஷண்முகவேலன்.