தகவல்தொழில்நுட்பச் சட்டத்தின் சர்ச்சைக்குரிய பிரிவான 66ஏ பிரிவுக்கு ஒட்டுமொத்த அமைச்சரவையுமே பொறுப்பு என்றும், தன்னை மட்டுமே பொறுப்பாக்கக்கூடாது என்றும் முன்னாள் மத்திய தொலைத்தொடர்புத் துறை அமைச்சர் ஆ.ராசா கூறியுள்ளார்.
இந்த நிலையில், இந்த சட்டம் குறித்து பேசிய முன்னாள் மத்திய சட்ட அமைச்சர் பரத்வாஜ், முன்னாள் மத்தியத் தொலைத்தொடர்புத் துறை அமைச்சர் ஆ.ராசா தான் இந்த பிரிவை உருவாக்கியவர் என்று கூறியதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகின.
இதையடுத்து, இது தொடர்பாக விளக்கமளித்திருக்கும் ஆ.ராசா, இது போன்ற சட்டங்கள் உருவாகும்போது, அதனை ஒட்டுமொத்த அமைச்சரவையின் முடிவாகத்தான் கருத வேண்டுமே தவிர, தனிப்பட்ட ஒருவன் மீது பழி சொல்வது ஜனநாயக நெறிமுறைகளுக்கு ஏற்றதல்ல என்று கூறியுள்ளார்.