மேயர் வேட்பாளர் பாலியல் காணொளி வெளியீடு: தோழி கைது

திங்கள், 17 பிப்ரவரி 2020 (15:27 IST)
பாரிஸ் மேயர் வேட்பாளரான பெஞ்சமின் இடம் பெற்றிருந்த ஆபாச காணொளியை வெளியிட்டதன் தொடர்பில் ரஷ்ய கலைஞர் மற்றும் செயற்பாட்டாளர் பீட்டரின் தோழி அலெக்ஸாண்டராவை கைது செய்தது பிரான்ஸ் போலீஸ். 
 
நேற்று பீட்டரை கைது செய்த போதே அலெக்ஸாண்டராவையும் கைது செய்திருக்கிறார்கள். ஆனால், அந்த தகவலை போலீஸ் நேற்று வெளியிடவில்லை. தனிப்பட்ட தகவல்களை ஊடுருவியது மற்றும் சங்கடப்படுத்தும் புகைப்படங்களை வெளியிட்டது ஆகிய குற்றச்சாட்டுகளின் பேரில் அலெக்ஸாண்ட்ரா கைது செய்யப்பட்டிருக்கிறார்.
 
இதுவரை நடந்தவை என்ன?
பாரிஸ் நகர மேயர் வேட்பாளராகக் களம் நின்றார் பெஞ்சமின். பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மக்ரோங்கின் முன்னாள் செய்தித் தொடர்பாளரான இவர் ஒரு பெண்ணுடன் பகிர்ந்த பாலியல் தொடர்பான காட்சிகள் மற்றும் குறுஞ்செய்திகள் வெளியாகி வைரலாக பரவியது.
 
இதனை அடுத்து அவரது அரசியல் வாழ்வு கேள்விக் குறியானது. ரஷ்யாவிலிருந்து வந்து பிரான்ஸில் தஞ்சம் புகுந்துள்ள பீட்டர் என்பவர் இந்த காணொளியைப் பதிவேற்றினார். அரசியல் வாழ்வில் இருப்பவர்கள் தூய்மையாக இருக்க வேண்டும் என்பதற்காக இதனைப் பதிவேற்றினேன் என்று அவர் கூறினார்.
 
ஆனால், யாரும் எதிர்பாராத வண்ணம் எதிர்க்கட்சிகளிடமிருந்து கூட பெஞ்சமினுக்கு ஆதரவு வந்தது. வலதுசாரிகள் மற்றும் இடதுசாரிகள் ஆகிய இருதரப்பும் பெஞ்சமினுக்கு சாதகமான கருத்தையே வெளியிட்டுள்ளனர்.
 
ஒருவரின் தனிப்பட்ட வாழ்க்கையை எப்படி இணையத்தில் பரப்பலாம்? என எதிர்க்கட்சிகளும் கேள்வி எழுப்பின. இப்படியான சூழலில் பீட்டர் ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டார். ஆனால், இந்த காணொளியை வெளியிட்டதற்காக பீட்டர் கைது செய்யப்படவில்லை. கடந்த டிசம்பர் 31ஆம் தேதி பாரிஸில் ஆயுதங்கள் கொண்டு கைகலப்பில் ஈடுபட்ட குற்றச்சாட்டின் அடிப்படையிலேயே இவர் கைது செய்யப்பட்டுள்ளார் என பிரான்ஸ் நீதித்துறை கூறுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்