எல்லை தாண்டிவரும் இந்திய மீனவர்களை, அவர்களது படகுகளுடன் கைது செய்யுமாறு கடற்படையினருக்கு ஜனாதிபதி உத்தரவிட்டிருப்பதாக, இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டிருந்தவர்களில் ஒருவராகிய மன்னார் மாவட்ட மீனவர் சம்மேளனத் தலைவர் ஜஸ்டின் சொய்சா பிபிசி தமிழோசையிடம் தெரிவித்தார்.
அண்மையில் இலங்கை-இந்திய மீனவர் பிரதிநிதிகளுக்கிடையில் சென்னையில் நடைபெற்ற மூன்றாம் கட்டப் பேச்சுவார்த்தைகளின்போது, ஆண்டொன்றுக்கு 83 நாட்கள் இலங்கைக் கடற்பரப்பினுள்ளே வந்து மீன்பிடிப்பதற்கு இந்திய மீனவர்களை அனுமதிக்க வேண்டும் என தமிழக மீனவர்கள் கோரியிருந்தனர்.
இந்தக் கூட்டத்தில் யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, மன்னார் ஆகிய வடமாகாண மாவட்டங்களின் மீனவர் சங்கப் பிரதிநிதிகள் கடற்தொழில் திணைக்களத்தின் உதவிப் பணிப்பாளர்கள் மற்றும் கடற்தொழில் அமைச்சர், பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் தலைவர் ஆர்.சம்பந்தன், நாடாளுமன்ற உறுப்பினர்களான சுரேஸ் பிரேமச்சந்திரன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டிருந்ததாகவும் அவர் கூறினார்.