ஊக்க மருந்து பயன்பாடு குறித்த கவலைகள் களையப்படும்:சபாஸ்ட்டியன் கோ

வியாழன், 20 ஆகஸ்ட் 2015 (12:22 IST)
உலகளவில் தடகள விளையாட்டில் ஊக்க மருந்து பயன்பாடு பரந்துபட்ட அளவில் உள்ளது குறித்த கவலைகளைக் களைய சர்வதேச தடகள சம்மேளனத்தின் தலைவராகத் தேர்தெடுக்கப்பட்டுள்ள சபாஸ்டியன் கோ உறுதியளித்துள்ளார்.
 

 
பிரிட்டனைச் சேர்ந்தவரும் ஒலிம்பிக் போட்டியில் தங்கப் பதக்கம் வென்றவருமான கோ, சர்வதேச தடகள சம்மேளனத்தின் தலைவராக பீஜிங்கில் தேர்தெடுக்கப்பட்ட பின்னர் உரையாற்றும்போதே இதைத் தெரிவித்தார்.
 
தடகள விளையட்டு வீரர்கள் மற்றும் ரசிகர்களின் நம்பிக்கையை மீண்டும் பெறுவதே மிகவும் முக்கியமானது என்று, கடந்த 2012 ஆம் ஆண்டு நடைபெற்ற லண்டன் ஒலிம்பிக் போட்டிகளில் ஏற்பாட்டுக் குழுவின் தலைவராக இருந்த கோ கூறுகிறார்.
 
விளையாட்டில் ஊக்க மருந்து பயன்பாட்டைத் தடுப்பது தொடர்பில், சுயாதீனமான அமைப்பு ஒன்று தேவை என்பதை வலியுறுத்தியுள்ள அவர், தடகளப் போட்டிகளில் ஊக்க மருந்து பயன்படுத்துபவர்கள் எந்த வகையிலும் சகித்துக் கொள்ளப்பட மாட்டார்கள் எனவும் அவர் உறுதியளித்துள்ளார். எதிர்வரும் 22ஆம் தேதி பீஜிங்கில் உலகத் தடகளப் போட்டிகள் தொடங்கவுள்ள நிலையில் அவரது கருத்துக்கள் வந்துள்ளன.
 
அதேவேளை தற்போது ஊக்கமருந்து பயன்பாட்டுக்கு எதிராக தற்போது போராடிவரும் அமைப்புகளின் நேர்மையை சந்தேகிக்க முடியாது எனவும் சபாஸ்ட்டியன் கோ தெரிவித்துள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்