நார்வே கடலோரத்தில் ஒதுங்கிய குழந்தை சடலம்

திங்கள், 7 ஜூன் 2021 (23:34 IST)
நார்வே கடலோர பகுதியில் இந்த ஆண்டு தொடக்கத்தில் கரை ஒதுங்கிய 15 மாத குழந்தையின் சடலம் அடையாளம் காணப்பட்டுள்ளது.
 
ஆர்டின் என்ற அந்த குழந்தை, படகில் தனது குடும்பத்தாருடன் கடந்த ஆண்டு அக்டோபரில் வந்தபோது கடலில் மூழ்கி உயிர் விட்டதும் தெரிய வந்துள்ளது.
 
அந்த குழந்தையின் குர்திஷ் இரானிய குடும்பத்து உறவினர்கள், பிரான்ஸில் இருந்து பிரிட்டனுக்கு வருகை தர முற்பட்டுள்ளனர். அந்த குழந்தைக்கு என்ன ஆனது என்ற குழப்பமும் கவலையும் நிறைந்தவர்களாக அவர்கள் ஆர்டின் குறித்து விசாரித்தனர்.
 
தற்போது அந்த குழந்தையின் சடலம், இரானுக்கு விமானம் மூலம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
 
இந்த தகவலை நார்வே காவல்துறையினர் திங்கட்கிழமை உறுதிப்படுத்தினர். அந்த சடலத்துடன் இரண்டு அதிகாரிகளும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக அவர்கள் தெரிவித்தனர்.
 
"நார்வேயில் குழந்தை காணாமல் போனது தொடர்பான புகார்கள் ஏதுமில்லை. மேலும், எங்களை எந்த குடும்பமும் தொடர்பு கொண்டு பேசவில்லை," என்று நார்வே காவல்துறை புலனாய்வுப்பிரிவு தலைமை அதிகாரி கமில்லா ட்ஜெல்லி வாகே பிபிசியிடம் தெரிவித்தார்.
 
"அந்த குழந்தை அணிந்திருந்த நீல நிற உடை நார்வே ஆடை தயாரிப்பு நிறுவனங்களுடையது இல்லை என்பதால் அதை வைத்தே அந்த குழந்தை நார்வே நாட்டைச் சேர்ந்ததாக இருக்காது என முடிவுக்கு வந்தோம்," என்று அவர் மேலும் கூறினார்.
 
பின்னர் குழந்தையின் மரபணு மாதிரியும் அதன் குடும்ப உறுப்பினர்களின் மரபணு மாதிரியும் பரிசோதிக்கப்பட்டதில் இறந்து போனது ஆர்டின்தான் என உறுதிப்படுத்தினோம் என்றும் அந்த அதிகாரி குறிப்பிட்டார்.
 
"இதற்காக ஓஸ்லோ பல்கலைக்கழகத்தின் தடயவியல் துறை நிபுணர்கள் அழைக்கப்பட்டு இரு தரப்பு மரபணு மாதிரிகளை பரிசோதிக்க நடவடிக்கை எடுத்தனர்," என்று காவல்துறை செய்திக்குறிப்பிலும் கூறப்பட்டுள்ளது.
 
கடந்த ஆண்டு அக்டோபர் 27ஆம் தேதி, ஆங்கில கால்வாய் பகுதியில் ரசூல் இரான் நெஜாத் (35), மொஹம்மத் பனாஹி (35), அனிடா (9), ஆர்மின் (6) உள்ளிட்டோர் பயணம் செய்த படகு கடலில் மூழ்கியது. அந்த குடும்பத்தினர் மேற்கு இரானை சேர்ந்தவர்கள் என்றும் இராக்கை ஒட்டிய எல்லை பகுதியில் வாழ்ந்தவர்கள் என்பதும் தெரிய வந்தது.
 
உயிர் தப்பிய மேலும் 15 குடியேறிகள் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். பின்னர் அந்த படகு மூழ்கிய சம்பவம் தொடர்பான விசாரணையை துன்ரிக் காவல்துறையினர் மேற்கொண்டனர்.
 
இந்த நிலையில், குழந்தை ஆர்டின் தாயின் சகோதரி நிஹாயத்தின் இருப்பிடம் அறிந்து அவரை நார்வே காவல்துறையினர் தொடர்பு கொண்டு பேசினர்.
 
"ஒரு வழியாக குழந்தை ஆர்டினின் சடலமாவது கிடைத்தது," என்று அவர் பிபிசியிடம் கூறினார்.
 
குழந்தை ஆர்டினின் மற்றொரு அத்தை ஸ்விட்சர்லாந்தில் வசிக்கிறார். "ஆர்டினின் குடும்பம் ஒன்றிணைய வேண்டும் என்றுதான் நாங்கள் விரும்பினோம்.கடைசியில் அவனது உடல் மிச்சங்களைதான் எங்களால் பெற முடியும் போலிருக்கிறது. அவனது சடலத்தை எங்களிடம் ஒப்படைக்கக் கோரும் ஆவண நடைமுறைகளை விரைவாக மேற்கொள்வோம்," என்று கூறினார்.
 
ஆர்டின் குடும்பத்தோடு வந்த படகு மூழ்கும் தருணத்தில் மொஹம்மத் பனாஹியின் மனைவி அனுப்பியதாக அறியப்படும் குறுந்தகவல்களில் ஆங்கில கால்வாயை கடக்கும்போது நிலவும் ஆபத்தான நிலைமை பற்றி கூறியிருந்தார். ஆனால், அதை தவிர தங்களுக்கு வேறு வழியில்லை என்று அவர் குறிப்பிட்டிருந்தார்.
 
மேலும், "லாரிகள் மூலமாக வர வேண்டுமென்றால், அவ்வளவு பணம் எங்களிடம் கிடையாது," என்றும் மற்றொரு குறுந்தகவலில் அவர் குறிப்பிட்டிருந்தார்.
 
"எனது இதயத்தில் ஆயிரமாயிரம் துக்கம் உள்ளது. அவற்றை இரானிலேயே விட்டு விட்டு கடந்த காலத்தை மறப்பதற்காக புறப்பட்டுள்ளேன்," என்று மற்றொரு குறுந்தகவலில் மொஹம்மத் பனாஹி கூறியிருக்கிறார்.
 
துன்ரிக் பகுதியில் உள்ள அகதி முகாமில் ஆர்டினின் குடும்பத்துக்கு பக்கத்தில் வசித்தவரான பிலால் கஃப், அங்கிருந்து புறப்பட்டுச் செல்லும் முன்பு மூன்று, நாட்கள் நாட்கள் இந்த முகாமில்தான் அவர்கள் தங்கியிருந்தனர் என்றார்.
 
"குழந்தை ஆர்டின் மிகவும் சந்தோஷமாக இருப்பான்," என்று அவனுடன் தான் எடுத்துக் கொண்ட படங்களை நம்மிடையே காண்பித்தார் பிலால்.
 
 
குழந்தையின் மரணம் எங்களை துயரத்தில் ஆழ்த்தியிருக்கிறது. ஆனால், அழுவதைத் தவிர எங்களால் என்ன செய்ய முடியும்? என்று அவர் கண்ணீர் மல்க கேட்கிறார்.
 
உயிரைப் பணயம் வைத்து ஐரோப்பா செல்ல முயற்சி: கப்பல் மூழ்கி அகதிகள் நடுக்கடலில் பலி
டைடானிக் கப்பலில் இருந்து தப்பிப் பிழைத்த 6 சீனர்கள்: வரலாற்றில் மறைக்கப்பட்ட கதைகள்
ஒவ்வொரு ஆண்டும் ஐரோப்பாவுக்குள் நுழைவதற்காக ஆள் கடத்தல் கும்பல்கள் வலையில் சிக்குபவர்களில் ஆயிரக்கணக்கான இரானிய குர்திஷ் அகதிகள் தங்களின் உயிரை பணயம் வைத்து ஆபத்தான பயணங்களை மேற்கொள்கிறார்கள்.
 
நார்வே
 
இரானில் உள்ள குர்திஷ் பிராந்தியம் அரசியல் ஒடுக்குமுறை மற்றும் தீவிர பொருளாதார கவனிப்பின்மையால் பாதிக்கப்பட்டுள்ளது. இரண்டரை கோடி முதல் மூன்றரை கோடி வரை வாழும் குர்துக்கள், துர்க்கி, இராக், சிரியா, இரான், ஆர்மேனியா ஆகியவற்றின் எல்லை மலைகளில் வாழ்ந்து வருகிறார்கள்.
 
மத்திய கிழக்கில் மிகப்பெரிய நான்காவது இனவாத குழுவாக இவர்கள் அறியப்படுகிறார்கள். ஆனால், தங்களுக்கென நிலையான நாடு கூட இவர்களுக்கு இல்லை.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்