இவர்கள் அரச தாக்குதல் மற்றும் தொந்தரவுகளிலிருந்து தப்பியோடும் உண்மையான அகதிகள் அல்ல என்றும், இந்தியாவிலிருந்து கடந்த மாதம் படகில் வந்த பொருளாதாரக் குடியேறிகளாக இருக்கலாம் என்றும் கருதுவதாக ஆஸ்திரேலிய அரசு கூறுகிறது.
இது குறித்து ஆஸ்திரேலிய ஊடகம் ஒன்றிடம் பேசிய ஆஸ்திரேலியக் குடிவரவு அமைச்சர் ஸ்காட் மாரிசன், இவர்கள் அனைவரும் இந்தியாவின் புதுச்சேரிக்கு அருகில் இருந்து வந்தவர்கள் என்றும், இந்தியாவில் இவர்களுக்குப் பாதுகாப்பு பிரச்சினை ஒன்றும் இல்லை என்பதால், இவர்களைப் பொருளாதாரக் குடியேறிகளாகவே கருதவேண்டும் என்றும் கூறியிருக்கிறார்.
அமைச்சரின் இந்தக் கருத்து யூகத்தின் அடிப்படையில் அமைந்தது என்கிறார் ஆஸ்திரேலியத் தமிழர் பேரவையைச் சேர்ந்த பால விக்னேஸ்வரன். அகதிகள் பிரகடனத்தில் கையெழுத்திட்டுள்ள ஆஸ்திரேலிய அரசு, இந்த அகதிகளை முறையாக விசாரித்து முடிவெடுக்க வேண்டும், இந்தியாவை இதில் நுழைக்க வேண்டிய அவசியம் இல்லை என்கிறார்.