குருவும், தட்சிணா மூர்த்தியும் ஒரே அவதாரம் அல்ல என்று கூறப்படுகிறதே?

திங்கள், 23 பிப்ரவரி 2009 (18:50 IST)
ஜோதிட ரத்னா க.ப.வித்யாதரன்:

குருவும், தட்சிணா மூர்த்தியும் ஒருவரே என்று ஒரு தரப்பினர் கூறுகின்றனர். ஆனால் இருவரும் வேறு வேறு என்று மற்றொரு தரப்பினர் கூறுகிறார்கள். இவற்றில் எது உண்மை?

நவகிரகங்கள் என்பவை இறைவனின் தூதுவர்கள் என்றுதான் கூற முடியும். உதிக்கும் போது விதிக்கப்பட்டதை நிறைவேற்றுவதே இவர்களின் கடமை.

தட்சிணா மூர்த்தி என்பது சிவபெருமனின் ஞான வடிவம். நான்கு மறைகளையும் கற்றறிந்து உபதேசம் செய்யக் கூடிய அவதாரம் தட்சிணா மூர்த்தி.

தட்சிணா மூர்த்தி என்பது சிவன். ஆனால் குரு என்பவர் நவக்கிரக தெய்வம். எனவே தட்சிணா மூர்த்திக்கும், குருவுக்கும் நிறைய இடைவெளி உண்டு. ஞானத்திற்கும், மோனத்திற்கும் உரியவர் குரு என்று கூறுவர். அதே அம்சத்தில் குருவையும் தாண்டி வரக்கூடியவர்தான் தட்சிணா மூர்த்தி. எனவே அவருக்கு கீழ்தான் குரு வருவார். தட்சிணா மூர்த்திக்கும், குருவுக்கும் ஏகப்பட்ட வித்தியாசங்கள் உண்டு.

webdunia photoFILE
குரு நவக்கிரகங்களில் முதன்மை வழிபாட்டுக்கு உரியவர். குருவை வணங்கி விட்டு எந்தக் காரியத்தையும் துவங்க வேண்டும் என்று சான்றோர்கள் கூறுவர். குருவருள் இருந்தால்தான் திருவருள் கிடைக்கும் என்ற மொழியில் வழக்கில் உள்ளது. குருவின் அருள் இருந்தால்தான் தெய்வ அருளைப் பெற முடியும் என்பதே இதன் பொருள்.

குருவை வழிபட வியாழக்கிழமை உகந்த தினம் என்று கூறப்படுகிறது. ஆனால் அதே தினத்தில்தான் தட்சிணா மூர்த்தியையும் வழிபடுகிறோம். இது சரியா?

தட்சிணா மூர்த்தி வேத வடிவாக, ஞான வடிவாக காட்சியளிக்கிறார். குருவும் வேதங்களுக்கு அதிபதியாக விளங்குகிறார். எனவே, வியாழக்கிழமையில் தட்சிணா மூர்த்தியையும் வணங்கலாம், குருவையும் வணங்கலாம்.

குரு நவகிரகங்களில் ஒருவர். தட்சிணா மூர்த்தி இறைவனின் நேரடி அவதாரத்தில் ஒருவர். எனவே குருவை விட அதிக மதிப்புக்கும், மரியாதைக்கும் உரியவர் தட்சிணா மூர்த்திதான் என்பதில் சந்தேகமில்லை.

குருவுக்கான ஸ்தோத்திரங்கள்/மந்திரங்களைக் கூறி தட்சிணா மூர்த்தியை வழிபடுவதில் தவறில்லையா?

தட்சிணா மூர்த்தியையும் குருநாதர் ஆக ஏற்றுக் கொள்வதால், குருவின் ஸ்தோத்திரங்களைக் கூறி தட்சிணா மூர்த்தியை வழிபடுவதில் தவறில்லை.

இதேபோல் மஞ்சள் ஆடை, கொண்டைக் கடலை ஆகியவற்றைக் கொண்டும் தட்சிணா மூர்த்தியை வழிபடலாம். ஏனென்றால் வேதங்களுக்கு உரிய நிறம் மஞ்சள்.