தரமான கல்வி கிடைப்பதற்கும், ஜாதக அமைப்பிற்கும் தொடர்புள்ளதா?

திங்கள், 21 டிசம்பர் 2009 (17:52 IST)
ஒரு சிலர் ஏழைக் குடும்பத்தில் பிறந்தாலும், மிகவும் கஷ்டப்பட்டு மேற்படிப்பை முடித்து விடுகின்றனர். ஆனால் செல்வந்தர் குடும்பத்தில் பிறந்தாலும் சிலர் 5ஆம் வகுப்பைக் கூட தாண்டாமல் பள்ளியை விட்டு வெளியேறி விடுகின்றனர். தரமான கல்வி கிடைப்பதற்கு ஏதாவது ஒரு வகையில் ஜாதக அமைப்பு காரணமாகிறதா?

பதில்: ஒருவரது ஜாதகத்தில் வாக்கு ஸ்தானம் (2ஆம் இடம்) நன்றாக இருந்தால் ஏழ்மை நிலையிலும் அவருக்கு தரமான கல்வி கிடைக்கும். இதனை அனுபவ ரீதியாக பலர் தங்கள் வாழ்க்கையில் பார்த்திருக்க முடியும். உதாரணமாக, ஏழ்மை நிலையில் உள்ள மாணவனின் கல்வி தடைபடாமல் தொடர, அவனது வகுப்பு ஆசிரியரே கல்விக்கான செலவுகளை ஏற்றுக் கொள்வார்.

ஜோதிடத்தைப் பொறுத்தவரை 2ஆம் இடம் வாக்கு ஸ்தானத்தை மட்டுமின்றி ஆரம்பக் கல்வியையும் குறிக்கிறது. அதற்கு அடுத்தபடியாக 4ஆம் இடம் உயர் கல்வியையும், 9ஆம் இடம் மேல்நிலைக் கல்வியையும் (கல்லூரி, பல்கலைக்கழகம்) குறிக்கிறது.

இதுமட்டுமின்றி 5ஆம் இடம்தான் மனதைக் குறிக்கிறது. படிக்கும் பாடங்களை ஒருவர் நன்றாக மனதில் பதியவைத்துக் கொள்வதற்கு உதவுவது இந்த 5ஆம் இடம். ஒருவருக்கு 5ஆம் இடம் சிறப்பாக இருந்தால்தான் கல்வியில் ஈடுபாடு அதிகரிக்கும். நினைவாற்றல் நன்றாக இருக்கும். தேர்விலும் அதிக மதிப்பெண் பெற முடியும்.

படிக்கும் காலத்தில் ராகு தசை, ஏழரைச் சனி, அஷ்டமச் சனி வந்தால் அந்த மாணவர், மாணவியின் வாழ்வில் சூறாவளி வீசத் துவங்கிவிடும். எனவே, பெற்றோர் தங்களின் வாரிசுக்கு ராகு தசை நடக்கும் காலத்தில் அவர்கள் மீது படிப்பைத் திணிக்காமல், அவர்களின் பிரச்சனைகளை, இடையூறுகளைப் புரிந்து கொண்டு கல்வி புகட்ட வேண்டும். சில மாணவ, மாணவிகளுக்கு பாலியல் சித்ரவதைகள் கூட ஏற்படலாம்.

ஒருவருக்கு தரமான கல்வி கிடைப்பதை சாதாரண விடயமாக கருதக் கூடாது. அதற்கு கிரகங்களின் ஒத்துழைப்பு மிக மிக அவசியம். பிறக்கும் போது உள்ள கிரக அமைப்பு, தற்கால் கிரக நிலைகள் ஆகிய இரண்டும் சிறப்பாக இருந்தால் மாநிலத்தில் முதல் மதிப்பெண் பெறும் மாணவராகத் திகழ முடியும்.

வெப்துனியாவைப் படிக்கவும்