ஜாதகத்தைப் பார்த்து ஒருவர் ஆசிரியர் பணிக்கு தகுதியுள்ளவர் எனக் கூற முடியுமா?

திங்கள், 8 பிப்ரவரி 2010 (18:27 IST)
பொது வாழ்வில் ஆசிரியரையும், மருத்துவரையும் மிகவும் மரியாதைக்கு உரியவர்களாக மக்கள் கருதுகின்றனர். இதில் மருத்துவர்களை உருவாக்குவது கூட ஆசிரியர்கள்தான். தாய்-தந்தைக்கு அடுத்தபடியாக குருவை வணங்க வேண்டும் என சாஸ்திரத்தில் கூறப்பட்டுள்ளது.

இதுபோன்ற பல்வேறு சிறப்புகளை உடைய ஆசிரியராக ஒருவர் உருவெடுப்பதற்கும் அவரது ஜாதகத்திற்கும் ஏதாவது தொடர்பு உள்ளதா?

பதில்: ஒருவரை குருவின் ஸ்தானத்திற்கு உயர்த்துவது குருபகவான். பிறருக்கு கற்பிப்பவரை (கலை/கல்வி/தொழில்) ‘குர’ என்று அழைக்கிறோம். அந்த வகையில் ஒருவர் ஜாதகத்தில் குரு சிறப்பாக இருந்தால் அவர் ‘குர’ (ஆசிரியர்) ஸ்தானத்திற்கு உயரலாம்.

கல்வியறிவு பெறுவதிலும், அதனை உரிய தருணங்களில் வெளிப்படுத்துவதற்கும் புதன் காரணமாகிறார். எனவே ஒருவர் குருவின் ஸ்தானத்திற்கு உயர அவரது ஜாதகத்தில் புதனும் நன்றாக இருக்க வேண்டும்.

சமீபத்தில் என்னிடம் வந்த ஒருவரின் ஜாதகத்தைப் பார்த்ததில் அவர் ஆசிரியர் பணிக்கு சிறப்பான நபர் என்பது தெரியவந்தது. அந்த ஜாதகத்தையும் வாசகர்களின் பார்வைக்காக இணைத்துள்ளேன்.

WD
இந்த ஜாதகர் மீன லக்னம், கன்னி ராசியில் பிறந்தவர். மீனம் குருவின் வீடு, கன்னி புதனின் வீடு. புதன் கல்விக்கு உரியவர் என்றால் குரு கல்வி நிறுவனங்களுக்கு உரியவர்.

கல்விக்கு உரியவரும், கல்வி நிறுவனங்களுக்கு உரியவரும் இந்த ஜாதகத்தில் ஒரே வீட்டில் (கன்னி) அமர்ந்துள்ளனர். வித்யாகாரகன் புதன் சொந்த வீட்டில் இருப்பது கூடுதல் சிறப்பு.

கன்னி ராசியில் குரு, புதன், சனி, சந்திரன் ஆகிய 4 கிரகங்களும் இவரது ஜாதகத்தில் ஒன்றாக இருப்பதால் ஆய்வுப் படிப்புகள் (பிஹெச்.டி) மேற்கொள்ள இவருக்கு சிறப்பான வாய்ப்புகள் உள்ளது. கல்லூரி விரிவுரையாளர், பேராசிரியர் பணிக்கு செல்வதற்கும் அதிக வாய்ப்புகள் இருக்கிறது.

தற்சமயம் இவருக்கு ஏழரைச் சனியும் நடக்கிறது. பிறக்கும் போது இவருக்கு ஏழரைச் சனி நடைபெற்றதால், இந்த 2வது ஏழரைச் சனி அவருக்கு நன்மையே செய்யும். ஏழரைச் சனியில் பிறந்தவருக்கு ஏழரைச் சனியே ராஜயோகம் தரும் என்பது ஜோதிடப் பழமொழி. எனவே, தாய் வயிற்றில் கர்ப்பமாக இருந்த போதே இவருக்கு ஏழரைச் சனி துவங்கியதால் இப்போது 2வது சுற்று ஏழரைச் சனியில் ஏற்றம் காண்பார்.

வெப்துனியாவைப் படிக்கவும்