பூகம்பம் எப்போது ஏற்படும்?

புதன், 25 ஆகஸ்ட் 2010 (20:39 IST)
தமிழ்.வெப்துனியா.காம்: நிலநடுக்கத்தை முன்னறிதல் என்பது உலகம் முழுவதும் முக்கியமான தேவையாகியுள்ளது. ஏனென்றால், எப்பொழுது ஏற்படும், அதற்கான முன்னேற்பாடு, தடுப்பு நடவடிக்கை, மக்களை வெளியேற்றுவது போன்ற அடிப்படையில், இது குறித்து ஆய்வு வேங்கடநாதன், மழைராஜ் போன்றவர்களெல்லாம் ஆய்வு கொண்டிருக்கிறார்கள்.

நிலநடுக்கத்தைப் பொறுத்தவரையில் கிரகங்களெல்லாம் ஒரு குறிப்பிட்ட பாதையில் ஒன்றாக வரும் போதுதான் நிலநடுக்கம் ஏற்படுகிறது என்று நிரூபணம் செய்து முனைவர் பட்டமும் பெற்றார் என்.வேங்கடநாதன் என்ற ஆய்வாளர். அவர்தான் இந்தோனேஷியாவின் ஒரு அங்கமான சுமத்ரா தீவிற்கு அருகில் நடந்த பூகம்பத்தை முன்கணித்துக் கூறிய ஒரே விஞ்ஞானி. இந்த நிலநடுக்கம் ஒரு குறிப்பிட்ட இடத்தில் ஏற்படும், அதற்கான சாத்தியக் கூறுகள் உள்ளது என்று சொல்லும் போது கிரகங்களைக் குறிப்பிடுகிறார்கள். அப்படியானால் கிரகங்களுக்கும், நிலங்களில் நடக்கக்கூடிய நிகழ்வுகளுக்கும் இருக்கக்கூடிய உறவுகளை எப்படி நாம் அறிந்துகொள்வது. எப்படி அது சாத்தியமாகும் என்பதை ஜோதிட ரீதியாக விளக்கவும்?

ஜோதிட ரத்னா முனைவர் க.ப.வித்யாதரன்: சாதாரணமாகப் பார்த்தோமோனால், செவ்வாய்தான் பூமிக்காரகன் என்று நாம் சொல்கிறோம். இந்த செவ்வாய் என்பது பூமிக்கு அதிபதியாக வருகிறார். செவ்வாயுடைய ஆற்றலுக்கு எதிர் ஆற்றலாக வரக்கூடியவர் சனி பகவான். செவ்வாய், சனி பார்வை, அதாவது செவ்வாய், சனி ஒன்று சேர்ந்தாலோ, நேருக்கு நேர் பார்த்துக் கொண்டாலோ, அதாவது சமசப்தமமாக 180 டிகிரியில் ஒன்றை ஒன்றை பார்த்துக் கொண்டாலோ அல்லது செவ்வாய், சனி ஒரே நட்சத்திரத்தில் சென்றுக் கொண்டிருந்தாலோ - ஒரே டிகிரியில் - நிலநடுக்கங்கள் நிகழ்ந்திருக்கிறது.

இதுவரை நிகழ்ந்துள்ள நிலநடுக்கங்களையெல்லாம் நாம் ஆராய்ச்சி செய்து பார்க்கும் போது, செவ்வாய், சனி பார்வை, செவ்வாய், சனி சேர்க்கை இதெல்லாம் இருந்திருக்கிறது. இதுமட்டுமல்லாமல், செவ்வாய், சனி நேர்ந்திருந்து ராகுவோ, கேதுவோ கூட இருந்திருந்தால் அதனுடைய பாதிப்பு மிகக் கடுமையாக இருக்கும். ரிக்டர் அளவுகோலில் மிக அதிகமாக பதிவானதெல்லாம் அந்த மாதிரியான காலகட்டங்களில் இருந்திருக்கிறது. இப்பொழுது கூட, ஜூலை 21ஆம் தேதியிலிருந்து வரும் செப்டம்பர் 6ஆம் தேதி வரைக்கும் சனியும், செவ்வாயும் ஒரே வீட்டில் இருக்கிறார்கள். இதெல்லாம் நிலநடுக்கத்திற்கான அறிகுறிகள். வெவ்வேறு துருவங்களான இந்த இரண்டு கிரகங்களும் சேர்ந்திருந்தாலும், குரு பார்த்துக் கொண்டிருக்கிறார். குரு பார்த்துக் கொண்டிருப்பதால், அதிகமான அளவில் இல்லாமல் கொஞ்சம் மிதமான நிலநடுக்கங்கள் ஏற்படும். இதுபோல செப்டம்பர் 6 வரை இருக்கும்.

இதேபோல, நாம் பார்த்த வகையில், ஒவ்வொரு பகுதியையும் ஆராய்ச்சி செய்யலாம். உதாரணத்திற்கு சென்னையில் கோடம்பாக்கம் ரிஷப ராசி, வில்லிவாக்கம் மிதுன ராசி, அதன்பிறகு மயிலாப்பூர், பெசன்ட் நகர் இதெல்லாம் கடக ராசி. இப்படி அங்கிருக்கக்கூடிய நில அமைப்புகள், பயன்பாட்டில் இருக்கக் கூடிய அலுவலகங்கள், நிறுவனங்கள் இதையெல்லாம் அடிப்படையாகக் கொண்டு ஒவ்வொரு கிரகம் ஆள்கிறது என்றும், இந்த ஏரியா இந்த ராசிக்குரியது என்று ஆராய்ந்து பிரிக்க வேண்டும். அப்படி பிரித்துவிட்டு இந்த மாநிலத்தில் இந்த மாவட்டத்தில் இந்த நகரத்தில் நிலநடுக்கம் நடக்கும் என்று துல்லியமாகச் சொல்லலாம். இதற்காக நாம் நிறைய ஆய்வு செய்ய வேண்டியுள்ளது. எந்தப் பகுதியில் நடக்கும். எந்தக் காலகட்டத்தில் நடக்கும் என்று ஆய்வு செய்ய வேண்டும்.

செவ்வாய் முருகனுடைய ஆதிக்கம். சனி, செவ்வாய் பார்வை, சேர்க்கை இருந்தபோதுதான் கடுமையான கார்கில் போர் வந்தது. அதில் உயிரிழந்த வீரர்களுடைய பெயர்களைப் பார்த்தீர்களானால் பெரும்பாலும் சுப்பிரமணி, சரவணன், வேல் முருகன் இந்த மாதிரியான பெயர்கள் உள்ளவர்கள்தான் அதிகமான இறந்தார்கள். இந்த சனியும், செவ்வாயும் பார்க்கும் போதும், சேரும் போதும் ராணுவ வீரர்கள் உயிரிழப்பு, எல்லைப் பதற்றம், அண்டை நாடுகளுடன் போர், அறிவிக்கப்படாத யுத்தம் - 10 மணி நேரத் துப்பாக்கிச் சண்டை நடந்தது - தீவிரவாதிகள் தாக்குதல்கள் இந்த மாதிரியெல்லாம் உண்டு. சனி இரும்பு சாலைகளுக்கு உரிய கிரகம். அதாவது ரயில்வே டிராக் இந்த மாதிரி. செவ்வாய், சூரியன் சனியைப் பார்த்தாலோ, சேரும் போதெல்லாம் தண்டவாளத்தில் விரிசல், ரயில் விபத்துகள் இதையெல்லாம் பார்க்கிறோம்.

இந்த செவ்வாய் புரட்சிக்கும் உரிய கிரகம். அதே செவ்வாய்தான் சட்ட திட்டங்களுக்கும் உரிய கிரகம். இதுவேதான் காதலுக்கும் உரிய கிரகமாக மாறுகிறது. சனி செவ்வாயை தாக்கல் பண்ணும் போதெல்லாம் ஒரு பக்கம் தீவிரவாதிகளுடைய ஊருவல், தாக்குதல்கள், மற்றொருபுறம் அத்துமீறிய நுழைவு, எல்லையில் நடப்பது. அதன்பிறகு சட்ட மீறல்கள், தாக்குதல்கள் இதெல்லாம் இருந்து கொண்டிருக்கிறது.

இந்தியாவை எடுத்துக் கொள்ளும் போது, இந்தியா சனியின் ஆதிக்கம் பெற்ற ஒரு நாடு. இதனால் சனியுடன் செவ்வாய் சேரும் போது இந்தியாவில் ஆங்காங்கே கலவரங்கள் நடப்பதை நாம் பார்க்கிறோம். கொஞ்ச நாட்களாகப் பாருங்கள் நாடாளுமன்றம் ஸ்தம்பித்தது என்றெல்லாம் கூறுகிறார்கள். ஒரு நாட்டினுடைய ஆட்சி மன்றமே ஸ்தம்பிக்கிறது. இதெல்லாம் சனியும், செவ்வாயும் ஒன்றாக இருப்பதனால் ஏற்படக்கூடியது. இது வரும் செப்டம்பர் 6 வரைக்கும் இருக்கும். இந்த 6ஆம் தேதிக்குள்ளேயே பல இடங்களில் நிலநடுக்கங்கள், காவல்துறை, ராணுவத்தினர் உயிரிழப்பு, நக்சலைட்டுகள் பாதிப்பு இதெல்லாம் கொஞ்சம் இருக்கத்தான் செய்யும்.

கேள்வி: இதில் மற்றொரு கேள்வி எழுகிறது. நக்சலைட்டுகள் பாதிப்பு, தீவிரவாதம் உக்கிரமடைதல், தாக்குதல் அதிகரித்தல், ராணுவ வீரர்கள் உயிரிழப்பு எல்லாமே வருகிறது என்று வைத்துக் கொள்வோம். மாவோயிஸ்ட், நக்சலைட்டுகளுக்கு எதிரான நடவடிக்கைகள் அடுத்த 3 ஆண்டுகளில் முடித்துவிடுவேன் என்று உள்துறை அமைச்சர் சிதம்பரம் சொல்லியிருக்கிறார். இப்படி இவர் சொல்லியிருப்பது எந்த அளவிற்கு முடியும். எந்த அளவிற்கு இவருடைய எதிர்பார்ப்பிற்கு ஏற்ற மாதிரி கிரக நிலை இருக்கிறது.

வித்யாதரன்: இந்தியாவினுடைய ஜாதகம், அடுத்தடுத்து ஏற்படக்கூடிய பாதிப்புகள் இதையெல்லாம் பார்க்கும்போது அதற்கான சாத்தியக் கூறுகள் எதுவும் கிடையாது. ஏனென்றால், இந்தியா கடக ராசி. கடக ராசியின் 3வது வீட்டில் சனி இருக்கிறார். இதுவே ஒரு வலுவான இடம். ஆனால் இப்படி வலுவான இடத்தில் இருக்கும் போது அசம்பாவிதங்கள் நடக்கிறது. அடுத்த கடக ராசிக்கு 4வது வீட்டில் சனி வரப்போகிறது. அது 2011 டிசம்பர் மாதம் கடைசியில் மாறுகிறது. இப்படி 4வது வீட்டிற்கு வரும்போதெல்லாம் பாதிப்புகள் அதிகரிக்கும். குறைவதற்கான வாய்ப்புகள் இல்லை. அரசாங்கத்திற்கு சவாலான நிகழ்வுகள்தான் நிகழுமே தவிர, அவர்கள் சமாளித்து வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகள் ஒன்றும் இல்லை.

வெப்துனியாவைப் படிக்கவும்