குரு பெய‌ர்‌ச்‌சியா‌ல் ஏழை ம‌க்க‌ளி‌ன் வாழ்க்கை நிலை உயருமா?

வெள்ளி, 27 மே 2011 (19:14 IST)
தமிழ்.வெப்துனியா.காம்: நம் நாட்டில் உள்ள மிகவும் ஏழைகளான, அதாவது வறுமைக் கோட்டிற்கும் கீழ் உள்ள மக்களின் நிலையில், இந்த குருப் பெயர்ச்சியால் ஏதாவது முன்னேற்றம் இருக்குமா?

ஜோதிட ரத்னா முனைவர் க.ப.வித்யாதரன்: உண்டு. ஏனென்றால் செவ்வாய் உழைக்கும் வர்க்கத்திற்கும், ஆளும் வர்க்கத்திற்கும் இடையே உள்ள கிரகம். அதிகார வர்க்கத்தையும் தாண்டி கொஞ்சம் கம்யூனிச சிந்தனை உள்ள கிரகம் செவ்வாய். எல்லோர்க்கும் எல்லாமும் கிடைக்க வேண்டும் என்ற சிந்தனை உள்ள செவ்வாய் வீட்டில் குரு வந்து உட்கார்ந்திருப்பதால் சாதாரண மக்களுக்கும் சில வழி வகைகள் பிறக்கும். அவர்களுடைய சராசரி வருமானம் கொஞ்சம் உயர்வதற்கான சாத்தியக்கூறுகள் உண்டு.

அடுத்து, குரு மேஷத்தில் வருவதால் உழைக்காதவர்களையும் உழைக்க வைக்கும். அதற்கடுத்து, கீழ்த்தட்டு மக்களுக்கு நல்ல முன்னேற்றத்தைக் கொடுக்கும். தினக் கூலி அதிகரிப்பதற்கான வாய்ப்பு உள்ளது. அடுத்து, வேளாண் நிலங்கள் கொஞ்சம் செம்மையடைய வாய்ப்பு இருக்கிறது. கரம்பாக இருந்த நிலங்களும் மீண்டும் விளை நிலங்களாக மாறுவதற்கான சாத்தியக்கூறுகள் உண்டு.

அதனால் இந்த குரு மாற்றத்தைப் பொறுத்தவரையில், சாதாரண அடித்தட்டு ஏழை மக்களின் அடிப்படை வருமானம் உயர்வதற்கான சாத்தியக்கூறுகள் உண்டு.

வெப்துனியாவைப் படிக்கவும்