தமிழ்.வெப்துனியா.காம்: சமீபத்தில் வந்த தகவல்படி, நமது நாட்டில் தனி மனித தண்ணீர் பற்றாக்குறைக்கான அபாயம் இருக்கிறது என்று சொல்லியிருக்கிறார்கள். தண்ணீர் இல்லையேல் வறட்சி என்ற நிலைதான். விவசாயத்தை நம்பி இருக்கக்கூடிய இந்தியாவில் ஏற்பட்டால் அது மிகப்பெரிய ஆபத்தாக இருக்கும். ஆனால் உங்களுடைய ஜோதிடத்தினுடைய பார்வையில் தண்ணீரைப் பொறுத்து இந்தியாவினுடைய எதிர்காலம் எப்படி இருக்கும்.
ஜோதிட ரத்னா முனைவர் க.ப.வித்யாதரன்: இந்தியாவின் எதிர்காலத்தைப் பார்க்கும் போது தண்ணீர்ப் பற்றாக்குறை இப்போதைக்கு இல்லை. மாறாக, நீர்வளம் பெருகும். அதில் மாற்றமில்லை. நிலவளம் குறைவதற்கான வாய்ப்புகளும், நிலங்கள் சுருங்குவதற்கான வாய்ப்புகளும் உண்டு. விளை நிலங்கள் வீட்டு மனைகளாவது, விளை நிலங்கள் தரிசு நிலங்களாவது, ஆறுகளில் மணல் எடுப்பதால் ஆற்றுப் படுகைகளில் பாதிக்கப்படுவது, நீரோட்டம் இல்லாமல் நீர் முடங்கிப் போவது, தேங்கிப் போவதால் சில நிலங்கள் பாதிப்படுவது, நிலச்சரிவுகள் போன்று இந்த வருடத்தில் மிகக் கடுமையாக இருக்கும். அதற்கான சாத்தியக்கூறுகள் நிறைய இருக்கிறது.
தவிர, அடுத்தடுத்த அபாயங்கள் இந்தியாவிற்கு உள்ளது. இந்தியாவினுயைட இயற்கைச் சொத்துக்கள், இயற்கை வளங்கள் படிப்படியாக குறைந்துகொண்டே வருகிறது. கிரக அமைப்புகள் அப்படித்தான் சில தாக்கங்களை உண்டு பண்ணக்கூடிய அளவில் வந்துக் கொண்டிருக்கிறது.
மேஷம் பூமிக்காரகன் செவ்வாயுடைய வீடு. அதில்தான் குரு வந்து உட்காருகிறார். குரு நின்ற இடம் நாஸ்தி, பார்த்த இடம் ஆஸ்தி என்று சொல்வார்கள். அதனால் குரு உட்காரும் இடத்தை விட அவர் பார்வை படும் இடம்தான் செம்மையடையும். உட்காரும் இடம் பூமிக்காரகனுடைய வீடு. அரசாட்சி செய்யக்கூடிய இடம் மேஷம். இதற்கடுத்து, காவல்துறை, இராணுவம் இதற்கெல்லாம் உரிய இடமும் மேஷம். காவல்துறையில் நிறைய களையெடுப்புகள் நடக்கும். அதே நேரத்தில் காவல் துறை நவீனமாகும். இராணுவம் செழிப்படையும். ஆனால் இராணுவ ரகசியங்கள் வெளியில் கசியும்.
குரு உட்காரும் இடத்தில் பிரச்சனைகளையும் உண்டாக்குவார். அங்கு இருக்கக்கூடிய குறைபாடுகளையும் வெளியில் கொண்டு வருவார். அதனால் பூமியில் உட்காருவதால், இயற்கை வளங்கள் இதுபோன்று சுருங்கும். பூமிக்கு ஆபத்துகள், அடுத்தடுத்து நிலநடுக்கங்கள், நிலச்சரிவுகள் போன்று சந்திக்கக்கூடிய சூழல் இருக்கிறது.