ஆமை புகுந்த வீடு உறுப்படாது என்கிறார்களே? அர்த்தம் என்ன?

சனி, 29 ஜனவரி 2011 (13:02 IST)
ஜோ‌திட ர‌த்னா முனைவ‌ர் க.ப‌.‌வி‌த்யாதர‌ன்: ஆமை என்பது ஒரு அவதாரம். தசாவதாரத்தில் ஒரு அவதாரம் ஆமை. ரமணர் போன்ற பெரிய சித்தர்களெல்லாம் ஆமை போல அடங்கியிரு என்பார்கள். ஐம்புலன்களும் ஆமை போல அடக்கமாக இருக்க வேண்டும். சலனமோ, சத்தமோ, ஆபத்தோ என்றால் தன்னுடைய உடல் உறுப்புகளை அந்த ஓட்டிற்குள் ஒடுக்கிக்கொள்ளும்.

அப்படிப்பட்ட ஆமை ஒரு இடத்திற்கு வருகிறதென்றால் அவர்கள் கொஞ்சம் ஒடுங்கப் போகிறார்கள் என்றுதான் அர்த்தம். தெய்வத்தினுடைய வருகை ஒடுங்கும். ஆயுள் ஒடுங்கும். இதுபோன்ற சில விஷயங்களும் ஒடுங்கும். அதற்காகத்தான் அதுபோலக் குறிப்பிடப்படுகிறது.

அதனால்தான் ஆமை புகுந்த வீடும், அமீனா புகுந்த வீடும் உறுப்படாது என்பார்கள். அமீனா என்பவர் நீதிமன்ற உத்தரவுப் படி வீட்டை காலி செய்பவர். இந்த இரண்டு பேருடைய வரவும் வீட்டிற்கு இருக்கக்கூடாது என்பார்கள். இதெல்லாம் ஒரு அறிகுறி என்று சொல்லலாம்.

3 மாதங்களுக்கு முன்பு திருவான்மியூரில் இருந்து ஒருவர் வந்திருந்தார். எங்க பக்கத்தில் ஆமையே கிடையாதுங்க. ஆனால், வீட்டிற்குள் ஆமை வந்துவிட்டது என்றார். நான் சொன்னேன், ஆமை வீட்டிற்கு வரக்கூடாது. உங்களுடைய பேரில் உள்ள சொத்துக்களையெல்லாம் வேறொருவர் பெயருக்கு மாற்றிவிடுங்கள் என்றேன். ஆமை வருகிறதென்றால், அது ஒரு அறிகுறி, அடையாளத்தைக் காட்டுகிறது. உனக்கு சில ஆபத்துகள் வரப்போகிறது. சரியாக நடந்துகொள் என்பதைக் காட்டுவதற்காகத்தான் இயற்கை காட்டுகிறது.

அதற்கு அவர், அதெல்லாம் ஒன்றுமில்லீங்க. இந்தக் காலத்தில் மனைவியையும் நம்ப முடியவில்லை, மகனையும் நம்ப முடியவில்லை என்று சொன்னார். அப்படியில்லீங்க, ஆமை புகுந்தால் செல்வங்கள் குறையும், சொத்துக்கள் விற்கும்படி ஆகும். கஷ்டங்களைக் கொடுக்கும். செளகரியத்தைக் கெடுக்கும் என்று சொன்னேன்.

சரி பார்க்கலாம் என்று சொல்லிவிட்டுப் போய்விட்டார். மீண்டும் இப்போது வந்தார். நீங்கள் எதை வைத்துச் சொன்னீர்கள் என்று தெரியவில்லை. இரண்டு வீட்டையும் விற்கும்படி ஆகிவிட்டது. ஒருத்தருக்கு கியாரண்டர் கையெழுத்துப் போட்டிருந்தேன். அவர் தலைமறைவாகிவிட்டார். அது பெரிய தொகை. அதுக்கு ஒரு வீட்டை விற்க வேண்டியதாகிவிட்டது. இன்னொன்று, மகனுடைய வியாபாரத்தில் பெரிய இழப்பு வந்து அதற்காக ஒரு வீட்டை விற்க வேண்டியதாயிற்று. தற்போது வாடகை வீட்டில்தான் இருக்கிறேன். இதெல்லாம் சுமார் 60 முதல் 65 நாட்களில் நடந்துவிட்டது என்று சொன்னார்.

இதுபோன்று சில இயற்கை இயக்கங்கள் காண்பிக்கும்.

வெப்துனியாவைப் படிக்கவும்