தமிழ்.வெப்துனியா.காம்: வீட்டில் செல்லப் பிராணிகளாக நாய்களை வளர்ப்பதைப் போன்று பூனைகளையும் வளர்க்கலாமா? அவைகள் வீட்டில் குட்டி போடுவது நல்லதா?
ஜோதிட ரத்னா முனைவர் க.ப.வித்யாதரன்: செல்லப் பிராணிகள் என்று பார்க்கும் போது பூனையையும் வீட்டில் தாராளமாக வளர்க்கலாம். அது குட்டி ஈன்றி அதனைப் பராமரிப்பது என்பதும் நல்லதுதான். பழங்காலத்தில் பூனை இல்லாத வீடே இருக்காது. ஏனென்றால் எலி இல்லாத வீடும் இல்லாமல்தான் இருந்தது. அதனால் பூனையை வீட்டில் வளர்ப்பது ஒன்றும் தவறில்லை.
சாதாரணமாக, பூனை குறுக்கே போனால் சகுனத் தடை, காரியத் தடை என்று சொல்வார்கள். ஆனால், பொதுவாக பூனை இருப்பது நல்லது. ஏனென்றால் பூனைக்கென்று ஒரு தனி சக்தி உண்டு. நாய் மோப்ப சக்தியால், சில துர்தேவதைகளை நெருங்கவிடாமல் விரட்டக்கூடியது. அதைவிட அசாத்தியமான ஒரு ஆற்றல் பூனைக்கு உண்டு. அதிலும் கடுவண் பூனைக்கு அபார சக்தி உண்டு.
கடுவண் பூனை என்பது முழுக்க முழுக்க கரிய நிறத்தில் இருக்கும். கரும்பூனை எனப்படும் அதற்கு ஒரு தனி சக்தி உண்டு. இது, நிழல் உலக சக்திகள், துர்மரணம் அடைந்த ஜீவாத்மாக்கள், துன்புறுத்தி வேடிக்கை பார்க்கக்கூடிய சில ஆத்தமாக்கள் போன்றவற்றையெல்லாம் அது விரட்டக்கூடியது.
அதேபோல, பூனை இருக்கும் இடத்தில் பில்லி சூனியம் வைக்க முடியாது என்ற ஒரு கருத்தும் உண்டு. கரும்பூனை முகத்தில் விழித்தால் நல்லது நடக்கும் என்று சொல்லப்படுவதுண்டு. அதனால் பூனை வளர்த்தல் என்பது நல்லது. அது ஒரு பரிகாரம் போன்றதுதான்.