தமிழ்.வெப்துனியா.காம்: யாராவது ஒருவரைப் பார்க்கிறோம். அவரும் நம்மைப் பார்த்து சிரிக்கிறார். நாமும் அவரைப் பார்த்து சிரிக்கிறோம். முன்பின் அறிமுகமாவாதவர்கள்தான் இரண்டு பேரும். ஆனால் ஏற்கனவே அறிமுகமானவர்கள் போன்று சிரித்துக் கொண்டு, எங்கேயோ உங்களை பார்த்தது போல் உள்ளது என்று அன்யோன்யத்துடன் பழகுவது கிட்டத்தட்ட எல்லோருடைய வாழ்க்கையில் நடந்திருக்கிறது. நடந்தும் கொண்டும் இருக்கிறது. இது எதனால் ஏற்படுகிறது? ஜோதிட ரீதியாக எப்படிப் பார்ப்பீர்கள்?
ஜோதிட ரத்னா முனைவர் க.ப.வித்யாதரன்: இதுபற்றி ஆழமாக யோசித்திருக்கிறோம். உதாரணத்திற்கு ரிஷப ராசிக்காரர்களுக்கு அதே ரிஷப ராசிக்காரர்கள் மீது இனந்தெரியாத காதல் அவர்களிடத்தில் இருக்கும். சிக்னலில் வண்டி நிற்கும் போது கூட, சிலர் சிரிப்பார்கள், உங்களை எங்கேயோ பார்த்தது போல் இருக்கிறது என்பார்கள். இதுபோல ரிஷப ராசிக்கு மிதுனம், கன்னி, விருச்சிகம், மகரம், கும்பம், மீனம் போன்றவை நட்பு ராசிகள். இந்த நட்பு ராசிக்காரர்கள் எல்லாம் இதுபோன்ற உணர்வுகளில் பழகுவார்கள். முன்பின் தெரியாதவர்களாக இருப்பார்கள், ஆனால், உங்களைப் பார்த்ததும் என்னுடைய சகோதரனைப் போலவே இருக்கிறீர்கள். அவர் கூட உங்களைப் போலவே சிரிப்பார். திடீரென்று உங்களைப் பார்த்ததும் அவர் ஞாபகம் வந்துவிட்டது. இதெல்லாம் நம்முடைய ராசிக்கு நட்பு ராசிக்காரர்களுடன் இதுபோன்ற அனுபவங்களைக் கொடுக்கும்.
அதன்பிறகு, பூர்வ ஜென்மத் தொடர்பு என்று சொல்கிறோமே, அதாவது நம்மையும் அறியாமல் - கிராமங்களில் விட்டகுறை தொட்டகுறை என்று சொல்வார்கள் - சிலரைப் பார்க்கும் போது விருப்பும், சிலரைப் பார்க்கும் போது வெறுப்பும் உண்டாகும். சிலரை மிகவும் பெரிய மனிதர், நல்ல மனிதர், வாருங்கள் அவரைப் போய்ப் பார்க்கலாம் என்று அழைத்தால், எனக்கு ஒன்றும் அவர் மீது ஈடுபாடு கிடையாது, நீங்கள் வேண்டுமானால் போய் பார்த்துவிட்டு வாருங்கள் என்று சிலர் சொல்வார்கள். ஏதோ பூர்வ ஜென்மத் தொடர்பில் அவர்கள் இவர்களை பாதித்திருக்கலாம். அல்லது வேறு ஏதேனும் நிகழ்வுகள் நடந்திருக்கலாம். அதனால்தான் சிலரை சிலருக்கு பிடிக்காமலும், சிலரை சிலருக்கு பிடிக்கும் படியாகவும் வரும். இதெல்லாமே கிரகங்களுடைய ஆளுமைதான்.
உதாரணத்திற்கு, புதன் திசை ஒருத்தருக்கு நடக்கிறதென்றால், அதே புதன் திசை நடக்கிறவர்கள், புதன் ராசிக்காரர்களுக்கு இவர்கள் பேசுவது, சொல்வதெல்லாம் பிடிக்கும். இதே புதன் திசை நடப்பவர்களுக்கு எதிர்ப்பான குரு, கேது, செவ்வாய் திசை நடப்பவர்களைப் பார்த்தால் பிடிக்காது. அவர்களுடைய கருத்துக்கள், சொல்லும் திறன் போன்று பிடிக்காமல் போகும்.
1993இல் ஒவ்வொரு கட்சித் தலைமையினுடைய ராசியை வைத்து யார் யார் அந்தக் கட்சியில் உறுப்பினர்களாக இருக்கிறார்கள், யார் தொண்டர்களாக இருக்கிறார்கள், யார் முக்கியப் பொறுப்பு வகிக்கிறார்கள் என்றும், மேலும் ரஜினிகாந்த், கமல் ராசிகளை அலசி, அவர்களுக்கு யார் ரசிகர்களாக இருக்கிறார்கள் என்று ஒரு பெரிய ஆய்வையே நடத்தினேன்.
ரஜினிகாந்த் மகர ராசி என்றால், அந்த மகரத்துடன் தொடர்புடைய ராசி, நட்பு ராசிக்காரர்கள்கதான் தீவிரமான ரசிகர்களாக இருக்கிறார்கள். அதற்கு எதிரான ராசிக்காரர்கள், இது ஒரு நடிப்பா என்று சொல்கிறவர்களாக இருக்கிறார்கள். இதேபோல, கமல் மீன ராசி, அவருடைய ரசிகர்களுடைய பட்டியலையும் எடுத்தோம். அதில் உள்ள மீன ராசிக்காரர்கள் 70 விழுக்காடு பேர் கமலை ஆதரிக்கிறார்கள். எதிர்ப்பு ராசியில் உள்ளவர்கள், படத்திற்காக இவ்வளவு கஷ்டப்படத் தேவையில்லை அவர் என்று சொல்பவர்களாக இருக்கிறார்கள்.
இதேபோல, தி.மு.க. தலைமை, அதிமுக தலைமை, இன்னும் பிற கட்சிகளுடைய தலைமையினுடைய ராசிகளை எடுத்து, அவர்களுக்கு தீவிரமான தொண்டர்களாகவும், அவர்களுக்குப் பக்கத்திலேயே இருக்கும் பொறுப்பாளர்களாக இருப்பவர்கள், தலைமைக்கு மிகவும் நெருக்கமானவர்கள் என்று பார்க்கும் போது, தலைமை ராசிக்கு நட்பு ராசியாக உள்ளவர்களாகத்தான் அவர்கள் இருக்கிறார்கள்.
இதெல்லாம் முழுமையாக கிரகங்களுடைய ஆளுமைதான். நம்மையும் அறியாமல் இயற்கை நம்மை ஆட்கொண்டிருக்கிறது. ஆனால் நாம் அதனை தொடர்புபடுத்தி பார்ப்பதே இல்லை. அப்படி தொடர்புபடுத்தி பார்த்தால் நமக்கு எல்லாமே தெரியவரும். அதனால் இதெல்லாமே பூர்வஜென்மத்தோடும், கிரகங்களுடைய பாசிடிப், நெகடிவ் வைப்ரேஷனோடும் தொடர்புடையது. இதை அடிப்படையாக வைத்துதான் சிலர் திடீரென்று நண்பராவதும், திடீரென்று எதிரியாவதும், நண்பனாக இருந்து எதிரியாவது, எதிரியாக இருந்து நண்பனாவது போன்று நடக்கும்.
சிலரெல்லாம் ஒரு திசையில் நெருங்கிய நண்பர்களாக இருப்பார்கள். அவர்களே வேறொரு திசை மாறும் போது, ஒரே இலையில் சாப்பிட்டவர்கள் கூட எதிரியாக மாறுவார்கள். இதெல்லாம் கிரகங்களுடைய ஆளுமைதான்.