தமிழ்.வெப்துனியா.காம்: புதிதாக பதவியேற்றுள்ள முதல்வர் ஜெயலலிதா, தமிழனப் பிரச்சனைகளில் சில உறுதிகளையெல்லாம் அளித்துள்ளார். அதை அவர் நிறைவேற்றுவதற்கான சாத்தியம் உள்ளதா? தமிழனப் பிரச்சனையில் முன்னேற்றம் இருக்குமா?
ஜோதிட ரத்னா முனைவர் க.ப.வித்யாதரன்: இலங்கை ஜாதகத்தை எடுத்துக்கொண்டால் விருச்சிக ராசியில் வருகிறது. அந்த நாட்டை ஆள்பவருக்கும் விருச்சிக ராசி. டிசம்பர் மாதத்தில் இருந்து விருச்சிக ராசிக்கு ஏழரைச் சனி துவங்குகிறது. அப்படியிருக்கும் போது, இலங்கையில் அரசியல் மாற்றங்கள், தலைமை வகிப்பவர்களுக்கு ஆபத்துகள், கடுமையாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஒரு தீர்வு வருவதற்கான வாய்ப்புகள் நிறைய உள்ளது.
2012இல் நிறைய விஷயங்களை ஈழத்தில் எதிர்பார்க்கலாம். ஐ.நா.வின் குரல் சாதகமாக அமையவும் வாய்ப்பு உள்ளது. அந்த நாட்டிற்கு ஏழரைச் சனி தொடங்க உள்ளதால், அந்த நாடு சில ஆபத்துகளை சந்திக்க நேரிடும். அந்த மக்களும் ஆபத்துகளை சந்திக்க வேண்டிவரும். ஏற்கனவே ஆபத்துகளை சந்தித்துள்ள தமிழன மக்களுக்கு ஒரு தீர்வு கிடைக்கும். இவர்களுக்கு அந்த நாட்டில் ஆதரவு இல்லையென்றாலும், உலகெங்கிலும் ஆதரவுக் குரல் அதிகரிக்கும். அதன் மூலம் மீண்டும் ஒரு நல்ல நிலைமை தமிழனப் பகுதிகளில் உருவாவதற்கு வாய்ப்புகள் இருக்கிறது.
தற்போது தமிழகத் தலைமைப் பொறுப்பேற்றுள்ள முதல்வர் ஜெயலலிதா அவர்கள் சொன்ன சில விஷயங்களை செய்வதற்கு வாய்ப்பு உள்ளது. ஏனென்றால் அவருக்கு ராகு திசை முடியும் தருவாயில் உள்ளது. அது முடியும் தருவாயில் உள்ளதால், வெகுவாக பாதிக்கப்பட்ட, படுகொலைக்கு உள்ளாக்கப்பட்ட மக்களுக்காக குரல் கொடுப்பார்கள். அந்த முயற்சிகளிலும் அவர் வெற்றி அடைவார். அதற்கான வாய்ப்புகள் உள்ளது.