சிலைகளைத் திருடுபவர்கள் பாதிக்கப்படாதது ஏன்?

சனி, 24 செப்டம்பர் 2011 (20:20 IST)
த‌மி‌ழ்.வெ‌ப்து‌னியா.கா‌ம்: சிவன் கோயில் இருக்கும் இடத்தில் உள்ள மரங்களில் இருந்து விழும் கனிகளைக் கூட எடுக்கக் கூடாது என்று பயந்து ஒதுங்கிக்கொள்வார்கள். சிவன் சொத்து குல நாசம் என்றெல்லாம் கூட கூறுவார்கள். ஆனால் சில கும்பல்கள் கோயில் சிலைகளையெல்லாம் கடத்தி விற்று வருகிறார்களே அவர்கள் பாதிக்கப்படாதது ஏன்?

ஜோ‌திட ர‌த்னா முனைவ‌ர் க.ப.‌வி‌த்யாதர‌ன்: பாதிக்கப்படவில்லை என்று சொல்ல முடியாது. பொதுவாக, சிவன் சொத்து குல நாசம் என்பதை நாங்களெல்லாம் நிறைய பார்த்திருக்கிறோம். என்னுடைய தாத்தா குறிப்பிட்டு சிலரையெல்லாம் சொல்வார். சாமிக்கு 10 ரூபாய் செலவு செய்துவிட்டு 100 ரூபாய் செலவு செய்ததாகக் கணக்கு எழுதுகிறான். இவனெல்லாம் தேறமாட்டான் என்று சொல்லுவார்.

இதில் மற்றொரு விஷயமும் இருக்கிறது. வஞ்சித்தார் வாழ்ந்தாலும், வஞ்சித்தார் வாரிசுகள் வாழ்வதில்லை என்றுதான் என்னுடைய தாத்தா அடிக்கடி சொல்வார். அதாவது வஞ்சித்தார் வேண்டுமானாலும் அப்படி இப்படி வாழ்ந்துவிட்டுப் போகலாம். ஆனால் வஞ்சித்தாருடைய வாரிசுகள் வாழ்வதில்லை. பொறுத்திருந்து பார்த்தால் தெரியும்.

சிவனை வணங்கிவிட்டு, அர்த்தனாரீஸ்வரரிடம் வந்து நான் ஒன்றுமே எடுத்துக்கொள்ளவில்லை என்று கையைத் தட்டிவிட்டு வருவது எதற்கு என்றால், நான் ஒன்றும் எடுத்துக்கொள்ளவில்லை சிவனே என்று சொல்லிவிட்டு வருகிறோம் என்றுதான் அர்த்தம்.

பெருமாளை அலங்காரப் பிரியன் என்று சொல்கிறோம். அதாவது பெருமாள் நிறைய ஆபரணங்கள் அணிந்துகொண்டு அலங்காரத்துடன் காட்சி அளிக்கிறார். ஆனால் சிவன் அபிஷேகப் பிரியர். என்னுடைய தாத்தார் சொல்வார், சிவனுக்கு ஒன்றுமே வேண்டாம், ஒரு டம்ளர் தண்ணியும் அதில் இரண்டு பச்சை இலைகளைப் போட்டால் போதும், ஒன்றுமே தேவையில்லை. அதாவது ஆவுடையார் லிங்கம் இருக்கிறாரென்றால், அபிஷேகத்திற்கு பால், தேன், மோர் எல்லாம் தேவையில்லை, தண்ணீர் விட்டால் போதும். இயற்கையான, சுத்தமான நீர் இருந்தால் போதும். அதற்கு அடுத்ததுதான் பச்சை இலை, அதாவது வில்வ இலை இருந்தால் போதும். அபிஷேகம் முடிந்துவிட்டது.

சிவன் என்பவர் எளிமைக்கு எடுத்துக்காட்டாக இருக்கக் கூடிய ஒரு அவதாரப் புருஷன். அவரே சிவ சிவா என்று இருக்கும் போது அவரிடம் இருந்தே உருவிக்கொண்டு வந்தால் அதைவிட மோசம் என்று சொல்வார்கள்.

அதனால், இதுபோன்று தவறு செய்தவர்கள் பிள்ளைகள் ஊமையாகப் பிறந்துப் பார்த்திருக்கிறோம். அவர்களுடைய சொத்தை வேறொருவர் எடுத்துப் போவது, கொள்ளையடிக்கப்படுவது என்று நிறைய பார்த்திருக்கிறோம். அதனால் ஒன்றும் நடக்காது என்று சொல்ல முடியாது. நிச்சயம் பாதிப்பு இருக்கும். மாற்றம் இல்லை.

வெப்துனியாவைப் படிக்கவும்