கடந்த சனிக்கிழமை எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அரசு மீது நம்பிக்கை வாக்கெடுப்பு நடந்தது. இந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் சட்டசபை விதிகள் மீறப்பட்டுள்ளதாக பலரும் புகார்கள் கூறி வருகின்றனர். எதிர்க்கட்சியான திமுக ஆளுநரையே சந்தித்து முறையிட்டுள்ளது. இந்த நிலையில் எம்.எல்.ஏ.க்களுக்கு மதுவை கொடுத்து மூளை செயல்படாத வண்ணம் வாக்கெடுப்பு நடந்துள்ளது என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அரசு சசிகலாவின் பினாமி அரசு. சேகர் ரெட்டியின் ஊழல் பண பரிமாற்றத்தில் எடப்பாடியார் நெருக்கமானவர் என்று கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி அவர் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் உள்ளன. கடந்த 11 நாட்கள் சென்னையில் உள்ள ஒரு ரிசார்ட்டில் எம்.எல்.ஏ.க்கள் அடைத்து வைக்கப்பட்டு, அவர்களுக்கு தொடர்ந்து மது அளிக்கப்பட்டு மூளை செயல்படாத வண்ணம் சட்டசபைக்கு அழைத்து வரப்பட்டு வாக்கெடுப்பு நடந்துள்ளது என்றார்.