தமிழ்நாட்டில் பரவலாக மழை பெய்ய வாய்ப்பு - மழைராஜ்
செவ்வாய், 24 ஜூலை 2012 (20:54 IST)
தற்போதைய வானிலை கணிப்பின்படி தென்மேற்கு வங்க கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகும் வாய்ப்புள்ளதால் ஜூலை 24 முதல் 28 வரை வட தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளும் தமிழகத்தின் பிற மாவட்டங்களில் பரவலாகவும் மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று மழை குறித்து ஆய்வு மேற்கொண்டு வரும் மழைராஜ் தெரிவித்துள்ளார்.
கடந்த ஜூலை 7 ம்தேதி வெப்துனியாவிற்கு அனுப்பிய கடிதத்தில் தெரிவித்ததுபோல் ஜூலை 17 ம்தேதி வரை தமிழகத்தில் மழை பெய்தது. மேலும் ஆந்திரா, கர்நாடகா, கேரளா ஆகிய பகுதிகளிலும் மழை பெய்து வருகிறது. மேலும் ஜூலை 22 முதல் 28 வரை மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவித்திருந்தேன். இரண்டு நாள் தாமதமாக 24ம் தேதி முதல் தென்மேற்கு பருவமழை இந்தியாவில் தீவிரமடைய வாய்ப்புள்ளது.
இந்த வருடம் தென்மேற்கு பருவமழை குறைவாக பெய்து வருவதால் விவசாயிகள் கலக்கத்தில் உள்ளனர். நான் ஏற்கனவே தெரிவித்ததுபோல் இந்த வருடம் அரபிக் கடல் பகுதியில் தொடர்ந்து பருவ மழைக்கான தாக்கம் குறைந்தே காணப்படுவதால் போதுமான மழை பெய்யவில்லை. ஆனாலும் நான் கணித்ததுபோல் குறிப்பிட்ட பகுதிகளில் பருவமழை தாக்கம் காணப்படுகிறது. அரபி கடல் பகுதியில் தென்மேற்கு பருவமழையின் தாக்கம் ஜூன், ஜூலையிலும், வங்க கடல் பகுதியில் தென்மேற்கு பருவமழையின் தாக்கம் ஆகஸ்ட், செப்டம்பரிலும் காணப்படும்.
இந்த வருடம் அரபி கடல் பகுதியில் தென்மேற்கு பருவமழையின் தாக்கம் குறைவாக காணப்பட்டதால்தான் இந்தியாவில் பருவமழை கடந்த இரண்டு மாதமாக தீவிரமடையாமல் அஸ்ஸாம் உள்ளிட்ட ஒரு சில மாநிலங்களில் மட்டும் மழை பெய்தது. மற்ற பகுதிகளில் மழையின் அளவு குறைவாக பெய்ய காரணமாக அமைந்துள்ளது. மேலும் தென்மேற்கு பருவமழையின் இனி வரும் நாட்களில் வங்க கடல் பகுதியில் பருவ மழை தீவிரமடைய வாய்ப்புள்ளதால் தமிழகத்தின் கடலூர், புதுச்சேரி முதல் ஒரிஸா வரை தென்மேற்கு பருவமழையின் தாக்கம் அதிகம் காணப்படும். ஜூலை கடைசி வாரத்திலிருந்து வங்க கடலின் கடலோர மாவட்டங்களில் பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளது. இதனால் கடந்த இரண்டு மாதமாக தென்மேற்கு பருவமழையில் காணப்பட்ட மந்தநிலை வங்க கடலில் ஏற்படும் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலைகளால் பெரும்பாலான இடங்களில் இயல்பைவிட கூடுதல் மழை பெய்ய வாய்ப்புள்ளது. குறிப்பாக வடக்கு ஆந்திரா உள்பட ஆந்திராவின் பெரும்பாலான மாவட்டங்களில் மிக பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளது.
கடந்த ஆண்டில் ஆந்திராவில் மழையின் தாக்கம் குறைவாவே காணப்பட்டது. இந்த ஆண்டில் சராசரியைவிட கூடுதல் மழையும், வடக்கு ஆந்திராவில் வரலாறு காணாத மழையும் பெய்ய வாய்ப்புள்ளது. ஆந்திராவில் மழை தீவிரமடையும் போது கர்நாடாகவிலும், வடக்கு கேரளா மற்றும் மத்திய கேரளாவிலும் பருவமழை தீவிரமடையும். கர்நாடாகவில் பெய்யும் பின் மழையின் காரணமாக மேட்டூர் அணைக்கு நீர் வரத்து அதிகரிக்கும். தெற்கு கேரளா, தென் தமிழகத்தின் கன்னியாகுமரி, திருநெல்வேலி, நாகர்கோயில், மதுரை, விருதுநகர் உள்பட தென் மாவட்டங்களில் சராசரியைவிட சற்று குறைவாகவே மழை பெய்ய வாய்ப்புள்ளது. ராமநாதபுரம், புதுகோட்டை, தஞ்சை, நாகை உள்ளிட்ட ஒரு சில இடங்களில் சராசரி மழை பெய்ய வாய்ப்புள்ளது.
வட இந்தியாவில் வடக்கு ஒரிஸா, வடக்கு சத்திஸ்கர், ஜார்க்கண்ட், பீகார் உள்பட ஒரு சில மாநிலங்களில் சராசரியைவிட சற்று குறைவாகவே பெய்ய வாய்ப்புள்து. அதே போல் வடமேற்கு மாநிலங்களிலும் மழையின் தாக்கம் சற்று குறைவாக காணப்படும். தென்மேற்கு பருவமழை காலத்தில் தென் தமிழகம் அதிக பலன்பெறுவது வாடிக்கை. ஆனால் இந்த வருடம் பெரும்பாலான தென் மாவட்டங்களில் பருவ மழை தீவிரமடைவதற்கான வாய்ப்புகள் குறைவாகவே காணப்படுகிறது.