இதுக்கு எதுக்கு ஆளுங்கட்சி, எதிர்கட்சி? - கடுப்பாகும் ராமதாஸ்

Webdunia
செவ்வாய், 21 ஜூன் 2016 (14:32 IST)
கலைஞரை கருணாநிதி என்று அழைப்பதற்காக அதிமுகவை மக்கள் ஆளுங்கட்சியாக்கவில்லை. அதேபோல், கலைஞரின் பெயர் உரிமைக்கு போராடுவதற்காக திமுகவை எதிர்க்கட்சியாக்கவில்லை என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.
 

 
இது குறித்து ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், "தமிழக சட்டப்பேரவையில் விவாதங்கள் என்ற பெயரில் நடைபெறும் மோதல்களும், தனிநபர் தாக்குதல்களும் மிகுந்த கவலையளிக்கின்றன. இவற்றையெல்லாம் பார்க்கும்போது இதற்காகத் தான் இரண்டு கட்சியினரையும் சட்டப்பேரவைக்கு மக்கள் அனுப்பி வைத்தார்களா? என்ற வினா எழுகிறது.
 
தமிழ்நாட்டின் 15வது சட்டப்பேரவை கடந்த மே மாதம் 25ம் தேதி முதல்முறையாகக் கூடியது. அதைத் தொடர்ந்து உறுப்பினர்கள் பதவியேற்பு, சட்டப்பேரவைத் தலைவர் தேர்வு, ஆளுநர் உரை உள்ளிட்ட வழக்கமான நடைமுறைகள் முடிவடைந்த பின்னர் நேற்று தான் முதன்முறையாக அவையில் விவாதங்கள் தொடங்கின. முதல் நாள் விவாதத்தில் அனல் பறந்திருந்தால் அது மகிழ்ச்சியளிப்பதாக இருந்திருக்கும்.
 
ஆனால், முதல் நாள் விவாதத்தில் அவலங்கள் நிறைந்திருந்தது தான் கவலையளிக்கிறது. ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்தைத் தொடங்கி வைத்துப் பேசிய அதிமுக உறுப்பினர் செம்மலை, திமுக தலைவர் கலைஞர் மீது அடுக்கடுக்காக புகார்களைக் கூறியதுடன், கலைஞரை கருணாநிதி என்று அழைத்ததால் திமுகவினர் ஆத்திரமடைந்து அமளியில் ஈடுபட்டனர். மற்றொரு தருணத்தில் கச்சத்தீவை இலங்கைக்கு தாரை வார்த்தது யார்? என்பது பற்றி இரு கட்சி தலைவர்களும் நடத்திய வார்த்தை வீச்சுகள் அவைக்கு மரியாதை சேர்ப்பதாக இல்லை.
 
திமுக தலைவர் கலைஞர் 5 முறை முதலமைச்சராக இருந்தவர். 13வது முறையாக சட்டப்பேரவை உறுப்பினராக உள்ளார். அந்த அடிப்படையில் விவாதத்தை தொடங்கி வைத்து பேசிய முன்னாள் அமைச்சர் செம்மலை, அவரை கலைஞர் என்றோ, திமுக தலைவர் என்றோ, முன்னாள் முதலமைச்சர் என்றோ கூறியிருந்திருக்கலாம். ஆனால், செம்மலை அவ்வாறு கூறவில்லை. அது மரபுப்படி தவறு என்றாலும், விதிப்படி தவறு இல்லை.
 
சட்டப்பேரவை நிகழ்வுகளுக்கு வழிகாட்டுபவை விதிகளும், மரபுகளும். விதிகள் பின்பற்றப்பட வேண்டும். ஆனால், மரபுகளை கடைபிடிக்க வேண்டும் என்பதற்கு எந்தக் கட்டாயமும் இல்லை. இன்னும் கேட்டால் கடந்த 25 ஆண்டுகளில் அதிமுக ஆட்சியின் போது திமுக தலைவரை கருணாநிதி என்றும், திமுக ஆட்சியிலிருக்கும் போது அதிமுக பொதுச் செயலாளரை ஜெயலலிதா என்றும் அழைப்பதுதான் பெரும்பாலான நேரங்களில் வழக்கமாக இருந்திருக்கிறது.
 
எதிர்க்கட்சி வரிசையில் உள்ள மூத்த தலைவர்களை மரியாதை கருதி பெயர்க் குறிப்பிடாமல் அவரது பதவியைக் குறிப்பிட்டு அழைக்க வேண்டும் என்ற மரபு மிகமிக அரிதாகவே கடைபிடிக்கப்பட்டுள்ளது. இதற்கெல்லாம் மேலாக ஒரு கட்சியின் தலைவரை பெயர் கூறி அழைத்தார்கள் என்பது அமளி கிளப்ப வேண்டிய விஷயமா? என்ற வினாவும் எழுகிறது.
 
பேரறிஞர் அண்ணா அவர்கள் முதலமைச்சராக இருந்தபோது, அவருக்கும் எதிர்க்கட்சி வரிசையில் இருந்த வினாயகத்துக்கும் இடையே அடிக்கடி வார்த்தை மோதல் வெடிக்கும். ஆனால், அவை மரியாதை குறைவாக இருக்காது. அண்ணா உடல் நலம் பாதிக்கப்பட்டிருந்த போது, அவரை நோக்கி ஆவேசமாக பேசிய வினாயகம் அவர்கள், "உங்கள் நாட்கள் எண்ணப்படுகின்றன’’ என்றார்.
 
வினாயகம் அவர்கள் குறிப்பிட்ட வார்த்தைகள் அண்ணாவின் பதவிக்காலத்தை மட்டுமின்றி, அவரது வாழ்நாளையும் குறிப்பிடுபவை என்பதால் திமுக உறுப்பினர்கள் கொந்தளித்தனர். ஆனால், அவர்களை அமைதிப்படுத்திய அண்ணா அவர்கள்,‘‘ ஆமாம். ஆனால், எனது அடிகள் அளந்து வைக்கப்படுகின்றன’’ என்ற ஷேக்ஸ்பியரின் வார்த்தைகளை பக்குவமாக கூறி பதற்றத்தைத் தணித்தார்.
 
பேரறிஞர் அண்ணா அவர்களின் வழிவந்த திமுக உறுப்பினர்களும், அதிமுக உறுப்பினர்களும் சட்டப்பேரவையில் பேரறிஞர் அண்ணா அவர்களின் பெருந்தன்மையை கடைபிடித்திருந்தால் அவையில் அமைதி நிலவியிருந்திருக்கும்; நிச்சயம் அமளி ஏற்பட்டிருந்திருக்காது.
 
தமிழக வரலாற்றில் இதுவரை இல்லாத அளவுக்கு வலிமையான எதிர்க்கட்சி அமைந்திருப்பதால் சட்டப்பேரவையில் ஜனநாயகம் தழைக்கும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக இருந்தது. ஆனால்,  கலைஞருக்கு முன்வரிசையில் இடம், கலைஞரின் பெயரை யாரும் குறிப்பிடக்கூடாது உள்ளிட்டவற்றை தவிர வேறு பிரச்னைகளே தமிழகத்தில் இல்லை என்பது போன்ற தோற்றத்தை தான் சட்டப்பேரவை நிகழ்வுகள் காட்டுகின்றன.
 
வழக்கமாக சட்டப்பேரவையில் எதிர்க்கட்சி ஆவேசமாக செயல்பட்டாலும், ஆளுங்கட்சி அவர்களை அரவணைத்து செல்ல வேண்டும். ஆனால், அதிமுக, திமுக ஆகிய இரு கட்சிகளும்  தங்களின் செயல்திட்டத்தை நிலைநாட்டுவதிலேயே தீவிரமாக இருப்பதால் தமிழ்நாட்டு மக்களின் பிரச்னைகள் பின்னுக்குத் தள்ளப்பட்டிருக்கின்றன. இது தமிழக நலனுக்கு நல்லது அல்ல.
 
கலைஞரை கருணாநிதி என்று அழைப்பதற்காக அதிமுகவை மக்கள் ஆளுங்கட்சியாக்கவில்லை. அதேபோல், கலைஞரின் பெயர் உரிமைக்கு போராடுவதற்காக திமுகவை எதிர்க்கட்சியாக்கவில்லை. மக்களின் பிரச்னைகளை பேசுவதற்காகத் தான் இரு கட்சிகளுக்கு இந்த பொறுப்பை தமிழ்நாட்டு மக்கள் அளித்துள்ளனர்.
 
200 ரூபாய்க்கும், 300 ரூபாய்க்கும் விலைபோகாத படித்த வாக்காளர்கள் சட்டமன்ற நிகழ்வுகளை கவனிக்காமல் இருக்க மாட்டார்கள். எனவே, அவை நாகரீகத்தை காத்து, மக்கள் பிரச்னைகளை தீர்ப்பது குறித்து இரு கட்சிகளும் அவையில் விவாதிக்க முன்வர வேண்டும்" என்று கூறியுள்ளார்.
 
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்....
அடுத்த கட்டுரையில்