ஆர்.கே.நகர் தொகுதியில் தினகரன் ரூ.122 கோடி செலவு - ஓ.பி.எஸ் அணி புகார்

புதன், 5 ஏப்ரல் 2017 (14:05 IST)
ஆர்.கே.நகர் தொகுதியில் தினகரன் தரப்பினர் ஓட்டுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் ஆகியவற்றை வழங்கி வருவதாக ஓ.பி.எஸ் அணியினர் குற்றம் சாட்டி வருகின்றனர்.


 

 
ஓட்டுக்கு ரூ.4 ஆயிரம் பணம்,  ஆன்லைன் ஷாப்பிங், அரசு பேருந்தில் பணப் பட்டுவாடா, மளிகை பில் கட்டுவது, பாத்திரக்கடை மூலம் பரிசுப் பொருட்கள் என பல்வேறு யுக்திகளை பின்பற்றி தினகரன் தரப்பு ஆர்.கே.நகர் தொகுதி மக்களுக்கு பணத்தை வாரி இறைத்து வருவதாக குற்றச்சாட்டுகள் எழுந்து வருகிறது.
 
மேலும், திமுக, பாஜக உள்ளிட்ட கட்சிகளும் தேர்தல் கமிஷனில் இது குறித்து புகார் அளித்துள்ளனர்.
 
இந்நிலையில் இதுபற்றி கருத்து தெரிவித்துள்ள ஓ.பி.எஸ் அணியை சேர்ந்த முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி “ எப்படியாவது வெற்றி பெற வேண்டும் என்பதற்காக தினகரன், ஆர்.கே.நகர் தொகுதியில் பணப்பட்டுவாடாவை செய்து வருகிறார். இதுவரை அவர் ரூ.122 கோடி வரை செலவு செய்துள்ளார்.
 
அவர்களின் ஆட்சி என்பதால், பணப்பட்டுவாடா செய்யும் நபர்களை பிடிக்கும் போலீசார், போகும் வழியிலேயே அவர்களை இறக்கி விட்டு சென்று விடுகின்றனர். சசிகலா குடும்பத்தை விரட்டி விட்டால் தமிழகத்தில் அதிமுக ஆட்சி நீண்ட வருடத்திற்கு ஆட்சி செய்யும்” என அவர் புகார் கூறியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்