’கம்யூனிஸ்ட் கட்சியில் இணைவதாக நான் கூறவில்லை’ - ஜகா வாங்கும் சீமான்

சனி, 4 ஜூன் 2016 (17:10 IST)
தேர்தலுக்கு முன்பு மக்கள் நலக்கூட்டணியை விட குறைந்த வாக்குகள் பெற்றால் நாம் தமிழர் கட்சியை கலைத்துவிட்டு அவர்களுடன் இணைவதாக கூறவில்லை என்று நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார்.
 

 
நாம் தமிழர் கட்சியின் மாநில பொதுக்குழு கூட்டம் திருச்சியில் நடைபெற்றது. இதில் சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டு அனைத்து வேட்பாளர்கள் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இதில் அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் பங்கேற்றார்.
 
பின்பு செய்தியாளர்களிடத்தில் பேசிய சீமான், "கடந்த சட்டமன்ற தேர்தலில் நாம் தமிழர் கட்சி தனித்து போட்டியிட்டு 4½ லட்சம் வாக்குகளை பெற்றது. இந்த 4½ லட்சம் வாக்குகளும் தமிழகத்தில் நேர்மையான ஊழலற்ற ஆட்சிக்காக கிடைத்த வாக்குகளாகும். எங்கள் தூய அரசியலின் நம்பிக்கைக்கு கிடைத்த வாக்குகளாகும்.
 
இதை ஒரு தொடக்கமாக வைத்துக்கொண்டு 2021-ல் நல்லாட்சி அமைக்க பாடுபடுவோம். இந்த 5 ஆண்டு காலத்தை எங்கள் களமாக மாற்றுவோம். சட்டமன்ற தேர்தலை போலவே நடைபெறவுள்ள உள்ளாட்சி தேர்தலிலும் நாம் தமிழர் கட்சி தனித்தே போட்டியிடும்.
 
தேர்தலுக்கு முன்பு மக்கள் நலக்கூட்டணியை விட குறைந்த வாக்குகள் பெற்றால் நாம் தமிழர் கட்சியை கலைத்துவிட்டு அவர்களுடன் இணைவதாக கூறவில்லை. கம்யூனிஸ்டு கட்சியை விட அதிக வாக்குகள் பெற்று காட்டுவோம் என்றுதான் கூறினேன்.
 
அதேபோல அவர்கள் பெற்ற வாக்குகளை விட நாம் தமிழர் கட்சி 1.1 சதவீத வாக்குகளை அதிகம் பெற்றுள்ளது. தமிழகத்தில் மக்கள் அதிமுக, திமுகவை மட்டும்தான் மாற்று கட்சிகளாக நினைக்கிறார்கள் என்பதை தேர்தல் முடிவு காட்டுகிறது என்பது தவறு.
 
தேர்தலில் ஓட்டுக்கு ரூ.1000 கொடுத்தவர்கள் ஆளுங்கட்சி ஆகிவிட்டார்கள். ரூ.500 கொடுத்தவர்கள் எதிர்க்கட்சி ஆகிவிட்டார்கள். தமிழகத்தில் ஜெயலலிதா பெற்றது வெற்றியல்ல. கொல்கத்தாவில் மம்தா பானர்ஜி பெற்றதுதான் உண்மையான வெற்றியாகும்.
 
ராஜீவ் கொலையாளிகள் என்று குற்றம் சாட்டப்பட்டு கடந்த 25 ஆண்டுகளாக சிறையில் வாடும் 7 பேரையும் 173-வது பிரிவு என்ற தமிழக அரசுக்கு உள்ள சிறப்பு அதிகாரத்தை பயன்படுத்தி உடனடியாக விடுதலை செய்யவேண்டும்.
 
முதல்வர் ஜெயலலிதா ஈழத்தமிழர்களுக்கு இரட்டை குடியுரிமை பெற்றுத்தருவேன் என்று கூறுவதை நிறைவேற்ற மாட்டார். 5 முறை முதல்-அமைச்சராக இருந்தபோது இதை நிறை வேற்றாதது ஏன்? இந்த வாக்குறுதியை மட்டு மல்ல, மதுவிலக்கை அமல்படுத்துவேன் என்ற வாக்குறுதி உட்பட எதையும் நிறைவேற்ற போவதில்லை” என்று கூறியுள்ளார்.
 
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்....

வெப்துனியாவைப் படிக்கவும்