வெடித்து சிதறிய திருவாதிரை நட்சத்திரம்? – நம்மால் பார்க்க முடியுமா?

ஞாயிறு, 23 பிப்ரவரி 2020 (16:13 IST)
இந்திய சோதிட குறிப்புகளில் முக்கிய நட்சத்திரமாக காணப்படும் திருவாதிரை நட்சத்திரம் வெடித்து விட்டதாக வெளியாகியுள்ள தகவல்கள்தான் தற்போது இணையத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகின்றன.

திருவாதிரை என்றழைக்கப்படும் இந்த நட்சத்திரத்திற்கு விஞ்ஞானிகள் அளித்துள்ள பெயர் பெட்டல்க்யூஸ் (Betelgeuse). ஓரியன் நட்சத்திரக் குடும்பத்தில் உள்ள இந்த நட்சத்திரத்தை பிக் ரெட் ஜியண்ட் என்றும் அழைப்பார்கள். விண்வெளியில் காணப்படும் மிக ஒளிரக்கூடிய நட்சத்திரங்களில் ஒன்றான திருவாதிரை சூரியனை விட பல மடங்கு பெரியதாகும். சமீப நாட்களில் திருவாதிரையின் ஒளி மங்கி வருவதை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். எரிந்து அணைந்த நிலையில் இருந்த திருவாதிரை ஒளி மங்குவது சூப்பர்நோவா எனப்படும் நட்சத்திர வெடிப்புக்கு அறிகுறி என விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

இந்த சூப்பர்நோவா இன்னும் பல்லாயிரக்கணக்கான ஆண்டுகள் கழித்து நடைபெறும் என்று கூறப்பட்ட நிலையில் தற்போது சில ஆண்டுகளிலேயே நிகழப்போவதாக விஞ்ஞானிகள் கூறியுள்ளனர். சொல்லப்போனால் சூப்பர்நோவா என்னும் நட்சத்திர வெடிப்பு ஏற்கனவே நடந்து விட்டதாகதான் சில விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

பல பில்லியன் தூரத்திற்கு அப்பால் உள்ள திருவாதிரையின் ஒளி பூமியை வந்தடைய ஆயிரம் ஆண்டுகள் ஆகும் என உத்தேசமாக கூறப்படுகிறது. அப்படி கணக்கிட்டால் இப்போது திருவாதிரை ஒளி இழந்திருப்பதை நாம் பார்ப்பது ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே நடந்துவிட்டது. அதாவது தஞ்சை பெரிய கோவிலை சோழர்கள் கட்டிக்கொண்டிருக்கும் காலத்திலேயே இது நிக்ழந்திருக்கும். அதை இப்போதுதான் நம்மால் காண முடிகிறது என விஞ்ஞானிகள் விளக்கமளித்துள்ளனர். இந்நிலையில் திருவாதிரை ஏற்கனவே வெடித்து சூப்பர் நோவாவாக மாறியிருந்தால் இன்னும் சில நாட்களில் கொஞ்சம் கொஞ்சமாக திருவாதிரை இருந்த பகுதியில் ஒளி அதிகரித்து பிரகாசமடைய தொடங்கும்.

சூப்பர்நோவா வெடிப்பு ஏற்பட்டால் திருவாதிரை வெளியிடும் ஒளியானது பூமியில் மற்றொரு சந்திரனுக்கு நிகராக இருக்கும் எனவும், காலையிலும் கூட அந்த ஒளியை காண முடியும் எனக் கூறப்படுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்