தனியொருவனுக்கு உணவில்லையெனில்…! – அமைதிக்கான நோபல் பரிசு அறிவிப்பு!

வெள்ளி, 9 அக்டோபர் 2020 (15:02 IST)
இந்த ஆண்டிற்கான நோபல் பரிசு வழங்கப்பட்டு வரும் நிலையில் உலக அமைதிக்கான நோபல் பரிசு உணவு வழங்கும் அமைப்பு ஒன்றிற்கு வழங்கப்பட்டுள்ளது.

உலக அளவில் புகழ்பெற்ற நோபர் விருது வழங்கும் விழா தற்போது நடைபெற்று வருகிறது. இயற்பியல், மருத்துவம், வேதியியல், இலக்கியம் ஆகியவற்றிற்கு நோபல் பரிசு வழங்கப்பட்ட நிலையில் இன்று உலக அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டுள்ளது.

உலகம் முழுவதும் ஏழை மக்களுக்கு உணவு அளிப்பதற்காக தீவிரமாக செயல்பட்டு வரும் உலக உணவு திட்ட அமைப்பிற்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டுள்ளது. கடந்த 58 ஆண்டுகளுக்கும் மேலாக செயல்பட்டு வரும் இந்த தன்னார்வலர்களை கொண்ட அமைப்பு உலகம் முழுவதும் ஏழை நாடுகள், போர் நடைபெறும் நாடுகளில் பசியால் வாடும் மக்களுக்கு உணவு அளிப்பதையே நோக்கமாக கொண்டு செயல்பட்டு வருகின்றது.

தற்போதைய கொரோனா காலத்திலும் மக்கள் பலர் உணவின்றி வாடுவதற்கு எதிராக போராடி பலரின் பசியை போக்கியதால் அமைதிக்கான நோபல் பரிசு இந்த அமைப்புக்கு சிறந்த அங்கீகாரமாக கருதப்படுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்