நாக வழிபாடும், நாக தோஷமும்

திங்கள், 31 அக்டோபர் 2011 (17:45 IST)
FILE
தமிழ்.வெப்துனியா.காம்: நாகம்மா, நாகராஜன் வழிபாட்டின் அடிப்படை என்ன? இது தமிழ்நாட்டை விட கேரளத்தில் மிக அதிகமாக இருக்கிறதே.

ஜோதிட ரத்னா க.ப.வித்யாதரன்: இந்த வழிபாடு கேரளத்தில் ஆதியில் இருந்தே அதிகமாக இருக்கிறது. சேர, சோழ, பாண்டியர் காலத்தை எடுத்துக்கொண்டால் இப்படிப்பட்ட வழிபாடு சேர நாட்டில்தான் அதிகமாக இருந்தது. சேரர்கள் நாட்டில் இந்த வழிபாடு ஏன் அதிகமாக இருக்கிறது என்று பார்க்கப்போனால், அவர்கள் குறுக்கில்தான் அதிகம் சென்றிருக்கிறார்கள். எனவே காவல் தெய்வங்கள், எல்லை தெய்வங்கள், வன தேவைதைகள் ஆகியவற்றிற்கு அதிக முக்கியத்துவம் கொடுத்துள்ளார்கள். கேரளத்தில் தடுக்கி விழுந்தால் பகவதியம்மன் கோயிலைக் காணலாம். பிள்ளையார் கோயில்களை விட அதிகமாக பகவதி அம்மன் கோயில்கள் இருக்கும். இப்படியான உக்கிரமான தேவைகள் அங்கு அதிகம்.

இதுபோலவே நாகத்தையும் அவர்கள் அதிகம் வழிபடுகிறார்கள். இங்கேயும் நாகாத்தம்மன், முப்பாத்தம்மன், திருவேற்காடு கருமாரியம்மன் என்று வழிபடுகிறோம். இவையாவும் நாக தேவதைகள், நாக கன்னிகள்தான். சில சமூகத்தில் பார்த்தீர்களானால் முதலில் பிறப்பது ஆண் பிள்ளையாக இருந்தால் அதற்கு நாகராஜன் என்றும், பெண் பிள்ளையாக இருந்தால் நாக கன்னி அல்லது நாகம்மா என்று பெயர் சூட்டுவார்கள். பிறந்த 13வது நாள் பெயர் சூட்டும் விழா நடத்தும்போது, குழந்தையின் காதில் நாகராஜா, நாகராஜா, நாகராஜா என்று மூன்று முறை கூறுவார்கள், இதுபோல் பெண் குழந்தையாக இருந்தால் மூன்று முறை நாகம்மா என்று கூறுவார்கள். அது அவர்களின் குல வழக்கமாகும்.

FILE
சேர நாட்டில் மற்றொன்றையும் நீங்கள் பார்க்கலாம். அங்கு புற்றுகள் அதிகம், எனவே புற்றாங்கண் வழிபாடு அதிகமாக இருக்கும். பாம்புகள் அதிகம் வாழும் இடங்களில் அது நம்மைத் தீண்டிவிடாமல் இருக்க வேண்டும் என்பதற்காகவும் இந்த வழிபாடு செய்யப்படுகிறது. கை கூப்பி அதனை வணங்குவதால் அது நம்மைத் தீண்டாது என்ற நம்பிக்கை அங்கு நீண்ட காலமாகவே உள்ளது.

தமிழ்நாட்டில் கூட பல சமூகங்களில் நாகத்தம்மன் குல தெய்வமாக இருப்பதைப் பார்க்கிறோம். எனக்குத் தெரிந்த ஒரு பெரிய பண்ணையார் இருந்தார். 100, 120 ஏக்கர் நிலம் இருந்தது. நல்ல விளைச்சல் இருந்தது. ஒரு நாள் அவர் நல்ல பாம்பு ஒன்றை அடிக்க வேண்டியதாகிவிட்டது, அடித்துக் கொன்றுவிட்டார். அதன் பிறகு ஏழெட்டு ஆண்டுகள் அவருடைய நிலத்தில் விளைச்சலே இல்லாமல் போய்விட்டது. அவரும் என்னென்மோவெல்லாம் செய்து பார்த்துவிட்டார், வேளாண் பட்டதாரிகளையெல்லாம் அழைத்துவந்து மண் பரிசோதனையெல்லாம் செய்துபார்த்துவிட்டார், விளைச்சல் இல்லை. இதை ஒரு ஆய்வாக நான் பார்த்தேன். அதற்குக் காரணம் நாக தோஷமே என்று புரிந்துகொண்டேன். அந்தக் குடும்பம் கொஞ்சம் கொஞ்சமாக நைந்து போய்விட்டதைக் கண்டேன்.

இங்கு, சென்னைக்கு அருகே மிஞ்சூர் இருக்கிறதல்லவா, அங்கு ஒருவர் செங்கல் சூளை வைத்திருந்தார். தனது சூளைக்குட்பட்ட பகுதியில் இருந்த புற்றுக்கண் ஒன்றை அழித்துவிட்டார். அங்கு பணி செய்துக்கொண்டிருந்த தொழிலாளர்கள் தங்கியிருந்த கீற்றுக் கொட்டைகையில் இரவு நேரங்களில் அது குறுக்கே நெடுக்கே செல்கிறது என்று கூறி, புற்றுக்கண்ணை அழித்துவிட்டார். அவருக்கு ஒரு குழந்தை பிறந்தது, அதன் கண்கள் அப்படியே பாம்பின் கண்ணைக் கொண்டிருந்தது. பாம்பு மாதிரியே வளைந்து நெளிந்து நடக்கும், அதைப்போலவே நக்கித்தான் எதையும் குடித்தது. பாம்பிற்கு இருந்ததுபோல் அதன் நாக்கும் சிறிது பிளவு பட்டே இருந்தது. இரண்டு வயதுகள் ஆன நிலையில் அது மரணமடைந்துவிட்டது. இப்படியெல்லாம் பல நிகழ்வுகளைப் பார்த்துவிட்டோம்.

இருளர்கள் இருக்கிறார்களே, அவர்களின் தொழிலே பாம்புகளைப் பிடிப்பதும், கொன்று போட்டுவிட்டு, அதன் தோலை எடுத்து விற்பதும்தான், அவர்களை இந்த தோஷம் தாக்கவில்லையா என்று கேட்டார்கள். அவர்களையும் தாக்குகிறது. செங்கல்பட்டிற்கு அப்பால் ஒரு இருளர் குடியிருப்பு உள்ளது. அங்கு தலைகட்டு ஆக இருந்த ஒருவரைச் சந்திக்கும்போது அவர் நாகதோஷம் தங்களையும் தாக்குகிறது என்று ஒப்புக்கொண்டார். தனக்கு 12 பிள்ளைகள் பிறந்ததாகவும், கடைசி பிள்ளைதான் தங்கியதாகவும் கூறினார்.

ஒன்றன்பின் ஒன்றாக 11 பிள்ளைகள் பிறந்து பிறந்த இறந்துவிட்ட நிலையில், அங்குள்ள புற்றாங்கண்ணிற்குச் சென்று, இதற்குமேல் எந்த நாகத்தையும் பிடிக்க மாட்டேன் என்று சபதம் செய்துவிட்டு வந்த பிறகுதான் தனக்குப் பிறந்து 12வது குழந்தை இன்று வரை வாழ்கிறது என்று கூறினார்.

எனவே நாக வழிபாடு, தோஷம் ஆகியன எல்லா இடத்திலும் உணரப்பட்ட ஒன்றாக உள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்