78 குண்டுகள் முழங்க காவல்துறை மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டார் விவேக்!

சனி, 17 ஏப்ரல் 2021 (18:24 IST)
தமிழ் சினிமாவின் முன்னணிக் கலைஞர்களில் ஒருவரான விவேக்கின் உடல் அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது. 
 
மாரடைப்புக் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நடிகர் விவேக் இன்று அதிகாலை சிகிச்சை பலனின்றி மரணமடைந்தார். அவரின் மரணம் அவரது ரசிகர்கள் மற்றும் திரையுலகினருக்கு பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. 
 
அவரது உடலுக்கு ரசிகர்கள் ,  நடிகைகள்,  தலைவர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் மரியாதையை செலுத்தி இரங்கல் தெரிவித்தனர். அரசு சம்மந்தப்பட்ட அனைத்து விழிப்புணர்வு விளம்பரங்களிலும் தாமாக முன் வந்து நடித்தவர் மற்றும் இளைஞர்கள் இடையே மரக்கன்றுகள் நடுவதை ஊக்குவித்தவர் எனப் பல்வேறு சமூக நோக்குள்ள செயல்பாடுகளில் தன்னை இணைத்துக்கொண்ட விவேக்கின் இறுதி சடங்குகள் அரசு மரியாதையோடு நடத்தப்பட வேண்டும் எனக் பலர் கோரிக்கை விடுத்தனர்.
 
அதைத்தொடர்ந்து தமிழக அரசு சார்பில் மறைந்த நடிகர் விவேக்கிற்கு காவல்துறை மரியாதை அளிப்பதற்கு தேர்தல் ஆணையத்திடம் அனுமதி தமிழக அரசு கேட்டது. அதற்கு தேர்தல் ஆணையம் அனுமதி வழங்க காவல்துறை சார்பில் நடிகர் விவேக்கின் கலை மற்றும் சமூக சேவையை கவுரவிக்கும் வகையில் அவரது உடலுக்கு  78 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் மேட்டுக்குப்பம் மின்மயானத்தில் அவரது உடல் அடக்கம் செய்யப்பட்டது. 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்