தாயகம் திரும்ப முடியாமல் இருக்கும் இந்தியர்களுக்கு வைரமுத்து கூறிய ஆறுதல்

வெள்ளி, 17 ஏப்ரல் 2020 (12:36 IST)
கொரோனா வைரஸ் காரணமாக உலகம் முழுவதும் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளதால் வெளிநாட்டில் சிக்கியிருக்கும் ஏராளமான இந்தியர்கள் தாய்நாடு திரும்ப முடியாமல், வந்த நாட்டிலும் இருக்க முடியாமல் பெரும் திண்டாட்டத்தில் உள்ளனர். கொரோனா வைரஸ் பிரச்சனை முடிந்தபின்னர் தான் அவர்கள் தாயகம் திரும்ப முடியும் என்ற நிலை உள்ளது. இந்த நிலையில் அவ்வாறு தாய்நாடு திரும்ப முடியாமல் தவிக்கும் இந்தியர்கள், தமிழர்களுக்கு சமீபத்தில் ரஜினிகாந்த் ஆறுதலுடன் கூடிய தமிழ்ப்புத்தாண்டு வாழ்த்து தெரிவித்த நிலையில் தற்போது கவிஞர் வைரமுத்துவும் இதுகுறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியதாவது:
 
கடல் கடந்து தவிக்கும் இந்திய சொந்தங்களே, தமிழ் ரத்தங்களே, தொழிலாளர்களின் தோழர்களே.. வணக்கம். நாடு பிரிந்து, வீடு பிரிந்து ஊர் பிரிந்து உறவு பிரிந்து கடல் கடந்து நீங்கள் உழைக்க சென்றீர்கள். உங்கள் வேர்வையால் அந்தந்த நாட்டை வளப்படுத்தினீர்கள். ஆனால் இப்போது சூழ்நிலைக் கைதிகளாய் துயரப்படுகிறீர்கள். அது உங்கள் பிழையல்ல, அந்தந்த நாட்டின் அரசுகளின் பிழையல்ல. இது காலத்தில் பிழை. 
 
இயற்கை மனிதனுக்கு எதிராய் தொடுத்திருக்கும் போரில் நாமும் சிக்கி கொண்டிருக்கின்றோம். இதை பொறுமையால் வெல்வோம். கட்டுப்பாட்டால் வெல்வோம். சகிப்புத் தன்மையால் வெல்வோம். அந்தந்த நாட்டு சட்டங்களை நீங்கள் மதிக்க வேண்டும். இந்தியர்களின் பெருமையை நீங்கள் அங்கே உயர்த்த வேண்டும். தமிழர்களின் சகிப்புத்தன்மைக்கு நீங்கள் சாட்சியாக திகழவேண்டும். பொறுமையாக இருந்தால் எதையும் வெல்லலாம். தண்ணீரைக் கூட சல்லடையில் அள்ளலாம். அது பனிக்கட்டி ஆகும் வரை பொறுத்திருந்தால்.
 
நீங்கள் எல்லாம் தாய் நாட்டுக்கு திரும்பி வர வேண்டும் என்று வீடு தவிக்கிறது. பெற்றோர்கள் தவிக்கின்றார்கள், உங்கள் உறவுகள் தவிக்கின்றார்கள், உங்கள் நட்பு தவிக்கிறது. உங்கள் காதலி உங்களுக்காக காத்திருக்கிறாள் கண்ணீரோடு. வந்து சேருங்கள் விரைவில் வருவீர்கள். அதுவரையில் பொறுமையை கட்டிக் காப்பது உங்கள் கடமை என்று நான் நினைக்கின்றேன். வளைகுடா நாடுகளில் மட்டும் 28 லட்சம் இந்தியர்கள் தவித்துக் கொண்டிருக்கிறார்கள்., சிங்கப்பூரில் மட்டும் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட இந்தியர்கள் குறிப்பாக தமிழர்கள் துயர்ப்பட்டு கிடக்கிறார்கள். இரண்டு நாடுகளின் அரசுகளும் ஒரு பொருத்தமான காலத்தை உங்களை மீட்டெடுக்கும் என்ற நம்பிக்கை எங்களுக்கு இருக்கிறது நாங்கள் உங்களுக்காக போராடிக் கொண்டிருக்கிறோம் அருள்கூர்ந்து அமைதி காக்க வேண்டும். அன்பு கொண்டு பொறுமை காக்க வேண்டும். வெல்வது நிச்சயம். நீங்கள் தாயகம் வருவது சத்தியம்.
 
இவ்வாறு கவியரசு வைரமுத்து கூறியுள்ளார்.

தாயகம் மீள முடியாமல்
கடல் கடந்து கண்ணீர் வடிக்கும்
தொழிலாளர் தோழர்களுக்கு...https://t.co/1VVsDabIM0

— வைரமுத்து (@vairamuthu) April 17, 2020

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்