எனக்கு விருப்பமான பாடலை தனியாக பாடி காட்டினீர்கள். அந்த நாளை மறக்கவே மாட்டேன் – எஸ் பி பிக்கு தினேஷ் கார்த்திக் இரங்கல்!

சனி, 26 செப்டம்பர் 2020 (10:46 IST)
பாடகர் எஸ் பி பாலசுப்ரமணியத்த்துக்கு தமிழகத்தைச் சேர்ந்த கிரிக்கெட் வீரர் தினேஷ் கார்த்திக் தனது இரங்கலை டிவிட்டரில் தெரிவித்துள்ளார்.

எஸ் பி பாலசுப்ரமண்யத்தின் மறைவை ஒட்டி அவருக்கு உலகம் முழுவதும் இருந்து கோடானுகோடி ரசிகர்கள் தங்கள் இரங்கலையும் அஞ்சலியையும் செலுத்தி வருகின்றனர். இந்நிலையில் ஐபிஎல் போட்டிகளில் விளையாடுவதற்காக துபாய் சென்றுள்ள தமிழகத்தைச் சேர்ந்த கிரிக்கெட் வீரர் தினேஷ் கார்த்திக் டிவிட்டர் வாயிலாக தனது அஞ்சலியை செலுத்தியுள்ளார்.

அதில் ‘எனக்கு மிகவும் பிடித்த கலைஞர் இறந்துவிட்டார். எஸ்.பி.பியை நான் கலைஞர் என்றுதான் குறிப்பிடுவேன். இந்திய சினிமா உலகில் சிறந்த, பன்முகத்தன்மை கொண்ட பாடகர் நீங்கள். இந்த உலகம் எப்போதும் உங்களை நினைவில் வைத்து கொள்ளும். நான் உங்கள் வீட்டிற்கு வந்த போது, நீங்கள் எனக்காக எனக்கு விருப்பமான பாடலை தனியாக பாடி காட்டினீர்கள். அந்த நாளை மறக்கவே மாட்டேன். எனக்கு அதேபோல் உங்களிடமிருந்து மீண்டும் ஒரு முறை பாட்டு கேட்க வேண்டும் என ஆசை. ஆனால் அந்த ஆசை மட்டும் வாழ்நாள் முழுக்க எனக்கு நிறைவேறாத கனவாக இருக்க போகிறது. நீங்கள் இப்போது எங்களை விட்டு சென்றுவிட்டீர்கள். உங்கள் ஆன்மா சாந்தி அடைய வேண்டுகிறேன்’ எனக் கூறியுள்ளார்.
 

 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்