ராம நவமி விரதம் இருக்கும் முறைகள் என்ன...?

திருமாலின் அவதாரங்களில் சிறப்புமிக்கதாகவும், அறம் நிறைந்ததாகவும் உள்ளது ராமாவதாரம்.


மனிதன் நீதிமுறைகள், இப்படித்தான் வாழ வேண்டும் என்ற ஒழுக்க  நியதிகள் மற்றும் ஆன்மிக லட்சியங்கள் குறித்து உறுதியான கொள்கையுடன் விளங்க வேண்டும் என்பதை எடுத்துரைப்பதற்காக மண்ணில் அவதரித்தார் ஸ்ரீராமர். அவர் அவதரித்த நாள் ராமநவமி என்று கொண்டாடப்படுகிறது. 
 
ராம நாமம் எல்லையற்ற ஆன்ம சக்தியை வழங்கக்கூடியது. `ரா' என வாய் திறந்து உச்சரிக்கும்போது நமது பாவங்கெல்லாம் வெளியேறி விடுகின்றன என்றும், `ம'  என உச்சரிக்க நம் உதடுகள் மூடும்போது அந்தப் பாவங்கள் மீண்டும் வராமல் தடுக்கப்படுவதாகவும் சொல்வர்.
 
விரதம் இருக்கும் முறை:
 
ராமநவமி அன்று அதிகாலையில் குளித்து, வீட்டை தூய்மைப்படுத்த வேண்டும். பூஜை அறையில் ராமர் படத்தை வைத்து, அதற்கு குங்குமம், சந்தனம் இட்டு, துளசிமாலை அணிவிக்க வேண்டும். பின் பழம், வெற்றிலை, பூ வைத்து ஸ்ரீராம நாமத்தை சொல்லி அர்ச்சனை செய்ய வேண்டும். வழிபாட்டின் போது நைவேத்தியமாக சாதம், பஞ்சாமிர்தம், பானகம், பாயாசம், வடை போன்ற வற்றை படைக்கலாம். ராமநவமி அன்றைய தினம் முழுவதும் உண்ணாமல் இருந்து விரதம் கடைப்பிடிக்க வேண்டும். ராமரை பற்றிய நூல்களை படித்தும், அவரது துதியை பாராயணம் செய்வதுமாக இருப்பது நன்மை அளிக்கும்.
 
அன்றைய தினம் ராமர் கோவில் களில் நடைபெறும் பட்டாபிஷேகத்தை கண்டுகளிக்கலாம். அர்ச்சனை முடிந்தபின் நைவேத்தியமான சர்க்கரை பொங்கலை  குழந்தைகளுக்கு கொடுக்க வேண்டும். காலையில் உணவு எதுவும் சாப்பிடாமல் ராமநவமி விரதம் இருந்து, ராமபிரானை வணங்கி வழிபடுபவர்களுக்கு  ஆஞ்சநேயரின் அருட்பார்வை கிட்டும்.
 
குடும்பத்தை விட்டு பிரிந்தவர்கள் ஒன்று சேருவார்கள். லட்சுமி கடாட்சம் கிடைக்கும். பகைவர்கள் நண்பர்களாக மாறி வருவார்கள். வியாதிகள் நீங்கும். தொலைந்து போன பொருட்கள் கிடைக்கும். குழந்தை இல்லாதவர்களுக்கு குழந்தை பிறக்கும். குடும்பநலம் பெருகி வறுமையும், பிணியும் அகலும். நாடிய பொருட்கள் கைகூடும்.
 
ஸ்ரீராமஜெயம் என்ற எழுத்தை 108 முறை, 1008 முறை எழுத தொடங்கலாம். ஸ்ரீராம என்ற நாமத்தை மூன்று முறை அடுத்தடுத்தவாறு உச்சரிக்க வேண்டும். இந்த பேராற்றல் வாய்ந்த மந்திரத்தால் ஆணவம் அழிந்து அன்பும், அறிவும் உண்டாகும். மனதில் அமைதியும், மகிழ்ச்சியும் விளையும்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்