மன அழுத்தத்திற்கான மாமருந்தை இழந்தோம் – அரசியல் தலைவர்கள் அஞ்சலி!

வெள்ளி, 25 செப்டம்பர் 2020 (14:39 IST)
இந்திய சினிமாவின் தன்னிகரற்ற பாடகரான எஸ்.பி.பாலசுப்ரமணியம் இழப்பு குறித்து அரசியல் தலைவர் அஞ்சலி செலுத்தியுள்ளனர்.

இந்திய சினிமாவின் மிகப்பெரும் பாடகரான எஸ்.பி.பாலசுப்ரமணியம் உடல்நலக்குறைவால் இன்று காலமான செய்தி பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

எஸ்பிபியின் இழப்பிற்கு அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். ட்விட்டரில் இரங்கல் தெரிவித்துள்ள திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் “பாடும் நிலா எஸ்.பி.பாலசுப்ரமணியம் அவர்களின் மறைவை கோடிக்கணக்கான ரசிகர்கள் தம் சொந்தக் குடும்பத்தில் ஏற்பட்ட இழப்பாகவே கருதுகிறோம். மன அழுத்தத்துக்கு இயற்கையான மாமருந்து அவர்! தம்பி சரணுக்கும் குடும்பத்தினருக்கும் எனது ஆறுதல்! இனிய குரலால் என்றென்றும் உயிர்த்திருப்பார் எஸ்.பி.பி!” என்று தெரிவித்துள்ளார்.

டாக்டர் ராமதாஸ் “இந்தியாவின் புகழ்பெற்ற பாடகர் மற்றும் இசையமைப்பாளர் எஸ்.பி. பாலசுப்பிரமணியன் உடல்நலக் குறைவால் இன்று காலமானார் என்ற செய்தியறிந்து பெரும் அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன்.

அவர் மறைந்தாலும் அவரது பாடல்கள் ஒலிக்கும் வரை அவர் மக்களிடம் வாழ்ந்து கொண்டிருப்பார். அவரை இழந்து வாடும் குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் உலகம் முழுவதுமுள்ள ரசிகர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் “எஸ்.பி.பாலசுப்ரமணியம் அவர்கள் மறைந்தாலும், கானக்குரல் கொண்டு அவர் பாடிய பாடல்கள் என்றுமே மறையாது ஒலித்துக்கொண்டே இருக்கும்” என தெரிவித்துள்ளார்.

திரைப்பட நடிகரும், மக்கள் நீதி மய்ய தலைவருமான கமல்ஹாசன் “அன்னைய்யா S.P.B அவர்களின் குரலின் நிழல் பதிப்பாக பல காலம் வாழ்ந்தது எனக்கு வாய்த்த பேறு. ஏழு தலைமுறைக்கும் அவர் புகழ் வாழும்.” என தெரிவித்துள்ளார்.

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா “பெரும் இசை மேதையும், பிண்ணனி பாடகருமான பத்மபூஷன் எஸ்.பி.பாலசுப்ரமணியம் அவர்கள் மறைந்த செய்தி ஆழ்ந்த துயரத்தை ஏற்படுத்தியுள்ளது. அவருடைய அற்புதமான பாடல்களாலும், இசையாலும் என்றென்றும் அவர் நம்முடன் இருப்பார். எனது ஆழ்ந்த இரங்கல்களை அவரது குடும்பத்தினருக்கு தெரிவித்துக் கொள்கிறேன். ஓம் சாந்தி” என்று பதிவிட்டுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்