உங்களுக்கு கார் பரிசா குடுக்குறோம் சார்! – போலீஸுக்கே விபூதி அடிக்க பார்த்த மோசடி கும்பல்!

வியாழன், 19 நவம்பர் 2020 (08:35 IST)
ராமநாதபுரம் மாவட்டத்தில் காவல்துறை அதிகாரி ஒருவருக்கு கார் பரிசு விழுந்திருப்பதாக பணம் மோசடி செய்ய கும்பல் ஒன்று முயன்றது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தில் மளிகை கடை நடத்தி வருபவர் குரு. ஆன்லைன் தளங்களில் அடிக்கடி பொருள் வாங்கும் குரு கொரோனா காலத்தில் பல்வேறு விலை உயர்ந்த பொருட்களையும் ஆன்லைனில் வாங்கி வந்துள்ளார். இதை நோட்டமிட்ட மோசடி கும்பல் ஒன்று குருவுக்கு கால் செய்துள்ளது.

அதில் பேசிய பெண் “தாங்கள் ஆன்லைனில் அதிகமாக விலை உயர்ந்த பொருட்கள் வாங்கியதற்காக உங்களுக்கு 6 லட்சம் மதிப்புள்ள கார் பரிசாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த கார் உங்கள் வீட்டிற்கே கொண்டு வந்து டெலிவரி செய்யப்படும். காருக்கு சாலை வரி, சேவை வரி உள்ளிட்டவற்றிற்காக ரூ.6 ஆயிரம் மட்டும் கட்ட வேண்டும். அது தொடர்பான வங்கி விவரங்களை உங்களுக்கு மெசேஜில் அனுப்புகிறோம்” என கூறியுள்ளார்.

ஆரம்பத்தில் அதை நம்பினாலும், பிறகு ரூ.6 ஆயிரம் கேட்பதால் யோசித்த குரு இது குறித்து தனது நண்பரும், கேணிக்கரை காவல் அதிகாரியுமான குகனேஸ்வரன் என்பவரிடம் இதுகுறித்து கூறியுள்ளார். கால் வந்த எண்ணுக்கு தொடர்பு கொண்டு விவரங்கள் கேட்டுள்ளார் குகனேஸ்வரன். அதற்கு குகனேஸ்வரனுக்கும் பரிசுகள் விழுந்திருப்பதாக கூறி ரூ.6 ஆயிரம் கேட்டுள்ளார்கள். உடனே குகனேஸ்வரன் தான் ஒரு போலீஸ் அதிகாரி என சொல்லவும் அழைப்பை துண்டித்துள்ளனர்.

இதனையடுத்து குரு அளித்த புகாரின் பேரில் அந்த மொபைல் எண்ணை ட்ரேஸ் செய்து மோசடி கும்பலை பிடிக்கும் முயற்சியில் போலீஸார் ஈடுபட்டுள்ளனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்