வேலூரில் இருந்து 25 லட்சம் லிட்டர் தண்ணீர் மட்டுமே வருகிறது – ரயில்வேத் துறை அலட்சியம் !

புதன், 17 ஜூலை 2019 (10:37 IST)
வேலூர் ஜோலார் பேட்டையில் இருந்து சென்னைக்கு தினசரி 25 லட்சம் தண்ணீர் மட்டுமே கொண்டு வரப்படுகிறது எனக் குடிநீர் வடிகால் வாரியம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் குறிப்பாக சென்னையில் கடந்த சில மாதங்களாக மழை பொய்த்து போனதால் கடுமையான தண்ணீர்ப்பஞ்சம் நிலவி வருகிறது. தண்ணீர் பிரச்சனை காரணமாக பல ஓட்டல்கள் மூடப்பட்டுள்ளதாகவும், ஒருசில ஓட்டல்களில் மதிய சாப்பாடு நிறுத்தப்பட்டுள்ளதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது. தண்ணீர் பிரச்சனைப் பற்றி அதிகாரிகளுடன் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஆலோசனை நடத்தினார். இதில் ’தமிழகத்துக்கு சீராக தண்ணீர் விநியோகம் செய்வதற்காக கூடுதலாக 200 கோடி ரூபாய் ஒதுக்க உத்தரவிட்டுள்ளார். மேலும் சென்னைக்குக் வேலூர் மாவட்டம் ஜோலார்பேட்டையில் இருந்து தினமும் ரயில் மூலம் சுமார் 10 மில்லியன் லிட்டர் குடி தண்ணீரைக் கொண்டுவருவதற்காக தனியாக 65 கோடி ரூபாய் ஒதுக்கியுள்ளார்’ என அறிக்கை மூலம் வெளியிட்டுள்ளனர்.

இதற்காக அதிகாரிகள் கடந்த சில வாரங்களாக வேலூரில் ஆய்வுப்பணிகளை மேற்கொண்டு வந்தனர். ஆய்வுப்பணிகள் முடிந்ததை அடுத்து மேட்டுசக்கரகுப்பம் பகுதியில் உள்ள ஒகேனக்கல் கூட்டு குடிநீர் நீர்த்தேக்க தொட்டியில் நிரப்பி அங்கிருந்து ரயில்வே நிலையத்துக்கு குழாய் மூலம் கொண்டு வந்து அங்கிருந்து சென்னைக்குக் கொண்டு வர திட்டமிடப்பட்டது. இதனையடுத்து கடந்த 12 ஆம் தேதி முதல் முறையாக சென்னைக்கு தண்ணீர் கொண்டுவரப்பட்டது. அதையடுத்து தினமும் ஒரு ரயில் மூலம் 25 லட்சம் தண்ணீர் மட்டுமேக் கொண்டுவரப்படுகிறது.

இந்நிலையில் சென்னைக்கு வேலூரில் இருந்து தினமும் 25 லட்சம் லிட்டர் தண்ணீர் மட்டுமே வருவதாக குடிநீர் வடிகால் வாரியம் அறிவித்துள்ளது. தினமும் ஒரு ரயில் மட்டுமே இயக்கப்படுவதால் இலக்கான 1 கோடி லிட்டர் தண்ணீரைக் கொண்டுவர முடியவில்லை என அதிகாரிகள் கூறுவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்