நவராத்திரியின் போது கொலு ஏன் வைக்கப்படுகிறது தெரியுமா...?

நவராத்திரிக்கு என்று ஒரு தனிச்சிறப்பு உண்டு. ஸ்ரீராமநவமி, விநாயகர் சதுர்த்தி, கோகுலாஷ்டமி, வைகுண்ட ஏகாதசி, மஹாசிவராத்திரி என்று வருகின்ற விசேஷ  நாட்களில் அந்தந்த நாளுக்குரிய தெய்வங்களை மட்டும் பூஜை செய்கிறோம். 

ஆனால் இந்த நவராத்திரி நாட்களில் மட்டும் எல்லா கடவுளர்களின் திருவுருவங்களையும் பதுமைகளாக படிகளில் வைத்து பூஜை செய்கிறோம். 
 
மகிஷாசூரனை அழிக்க வேண்டி பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகிய மும்மூர்த்திகள், முப்பெருந்தேவியர், விநாயகர், சுப்ரமணியர், நவகிரஹங்கள், ஏனைய தேவர்கள்  மற்றும் உலகில் உள்ள அனைத்து ஜீவராசிகள் என அனைவரின் அம்சங்களிலிருந்தும் தோன்றிய ஒளிச்சக்தியானது ஒன்றிணைந்து அகில உலகத்தையும் காக்கும் தாயாக அம்பிகை உருவானாள் என்பதை வெளிப்படுத்தும் விதமாக புல், பூண்டு தாவரங்கள், நீரில் வாழ்பவை, ஊர்வன, பறப்பன, நிலவாழ் மிருகங்கள், மனிதர்கள், தேவர்கள், கடவுளர்கள் என வரிசையாக படிக்கட்டுகளில் பதுமைகளை வைத்து மத்தியில் நடுநாயகமாய் அம்பிகையின் பொம்மையையும் வைத்து வழிபடுகிறோம்.
 
ஆக ஒரு வருடத்தில் வருகின்ற மற்ற விசேஷ நாட்களில் அந்தந்த தேவதைகளைத் தனித்தனியாக பூஜிக்க இயலாதவர்கள் கூட இந்த நவராத்திரி நாட்களில் அம்பிகையை வழிபடுவதன் மூலம் எல்லா கடவுள்களையும் வழிபட்ட பலனை அடைய முடியும்.
 
தியான ஸ்லோகம்:
 
"யாசண்டீ மது கைடப ஆதி தைத்ய தனனீ யா மாஹிஷ உன்மூலினீ
யா தூம்ரேக்ஷண சண்ட முண்ட மதனீ யா ரக்தபீஜாசனீ
சக்தி: சும்ப நிசும்ப தைத்ய தனனீ யா சித்தி தாத்ரீ பரா
சாதேவீ நவகோடி மூர்த்தி ஸஹிதா மாம் பாது விச்வேஸ்வரீ"
 
என்ற அம்பிகையின் தியான ஸ்லோகத்தின் மூலம் மது - கைடபர், மகிஷாசூரன், தூம்ரலோசனன், சண்டன், முண்டன், ரக்தபீஜன், சும்பன், நிசும்பன் ஆகிய அசுரர்களை அழித்தவளும் ஒன்பது கோடி உருவங்களைத் தாங்கி தெய்வீகத் தன்மை பெற்றவளும், உலகத்தின் தாயாகவும் விளங்கும் சண்டி நம்மைக் காப்பாளாக  என்பதே இதன் பொருள்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்