முருங்கை கீரையில் உள்ள அற்புத சத்துக்களும் பயன்களும் !!

மாலைக் கண் தீர, இரத்தம் விருத்தியாக முருங்கை கீரையை வதக்கியோ, கூட்டு கீரையாக கடைந்தோ சாப்பிட்டு வந்தால் கண் நோய்கள் முக்கியமாக மாலைக்  கண் நோய் வராமல் தடுக்கலாம். இரும்புச் சத்து மிகுதியாக உள்ளது.

முருங்கை கீரையில் கால்சியம், இரும்புச் சத்து, வைட்டமின் பி, பி2, வைட்டமின் சி சத்துகள் மிகுதியாக உள்ளன. முருங்கை பூவைப் பருப்புடன்சேர்த்து சமைத்து சாப்பிட உடல் பலம் பெறும். முருங்கை காயை எந்த வகையிலாவது சமைத்து தொடர்ந்து சாப்பிட சளி குறையும்.
 
முருங்கைக்கீரை மட்டுமின்றி, முருங்கைப்பூவும் மருந்தாகப் பரிந்துரைக்கப்படுவதுண்டு. முருங்கைப்பூவை பொடிமாஸ் மாதிரி செய்து சாப்பிடலாம். அரைவேக்காடு  வேக வைத்த பாசிப்பருப்புடன், முருங்கைப்பூவையும் பொடியாக நறுக்கிய வெங்காயமும் சேர்த்து சமைத்து சாப்பிடுவது குழந்தையின்மைப் பிரச்னை தீர உதவும்.  கர்ப்பப்பைகோளாறுகளை சரி செய்யும்.
 
முருங்கைக் கீரையில் தயிரில் இருப்பதைவிட 2 மடங்கு அதிக புரதமும், ஆரஞ்சுப் பழத்தில் உள்ளதைப் போல 7 மடங்கு அதிக வைட்டமின் சி யும், 
வாழைப்பழத்தில் உள்ளதைவிட 3 மடங்கு அதிக பொட்டாசியமும், கேரட்டில் உள்ளதைப்  போல 4 மடங்கு அதிக வைட்டமின் ஏவும், பாலில் உள்ளதைவிட 4 மடங்கு அதிக கால்சியமும் உள்ளது.
 
மற்ற கீரைகளைப் போல அல்லாமல் காய்ந்த முருங்கை இலைகளிலும் ஊட்டச்சத்துகள் அப்படியே இருப்பதுதான் இதன் இன்னொரு மகத்துவம்.
 
முருங்கை இலையினுடைய பொடியானது இதய ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகின்றது. இது மிக முக்கியமாக ரத்தத்தில் உள்ள கொழுப்புகளைக் குறைக்க 
உதவுகின்றது.
 
முருங்கை இலையில் உள்ள பாக்டீரீயா மற்றும் பூஞ்சை எதிர்ப்பு சக்தியானது,  உங்களுடைய சருமத்தில் உண்டாகின்ற தொற்றுக்கள், பாக்டீரியாவினால் உண்டாகும் பிரச்சினைகள் போன்றவற்றில் இருந்து உங்களைக் காப்பாற்ற உதவுகிறது. இது சிறுநீர்ப் பாதையில் ஏற்படுகின்ற தொற்றுக்களைப் போக்கவும்  உதவுகிறது.
 
முருங்கையின் மூலம் கிடைக்கிற புரதமானது முட்டை, பால் மற்றும் இறைச்சியில் கிடைக்கக்கூடிய புரதத்துக்கு இணையானது. மனிதர்களுக்குத் தேவையான 20 அமினோ அமிலங்களில் 18 இந்தக் கீரையில் உள்ளது. 
 
மனித உடலால் தயாரிக்கப்பட இயலாத 8 அத்தியாவசிய அமினோ அமிலங்கள் இறைச்சியில் மட்டுமே கிடைக்கும். அந்த 8 அமிலங்களையும் கொண்ட ஒரே சைவ  உணவு முருங்கைக்கீரை.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்