டெல்லியில் நடந்த அதிசயம்: செயலிழந்த இதயம், மீண்டும் செயல்பட்ட ”மெடிக்கல் மிராக்கல்”

வியாழன், 11 ஜூலை 2019 (11:57 IST)
டெல்லியில் தனியார் இதய சிகிச்சை மையத்தில், செயற்கை இதயம் பொருத்திய சில மாதங்களுக்குப் பிறகு, உண்மையான இதயம் மீண்டும் செயல்பட்ட அதிசயம் நிகழ்ந்துள்ளது.

உலகில் பல இடங்களில், உயிரிழந்தவர்க்கு திடீரென உயிர் வருவது, கல்லறையில் புதைக்கச் சென்ற போது, உயிர் வருவது போன்ற பல சம்பவங்களை நாம் செய்திதாள்களில் படித்து வருகிறாம். இது போன்ற விநோதங்களுக்கு நமக்கு விடையே தெரியாது. 

இதனைத் தொடர்ந்து தற்போது டெல்லியில் ஒருவருக்கு செயற்கை இதயம் பொருத்தப்பட்ட நிலையில், 18 மாதங்கள் கழித்து மீண்டும் உண்மையான இதயம் செயல்பட்ட சம்பவம் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஈராக் நாட்டை சேர்ந்த வணிகர் ஹனி ஜாவத் என்பவர், ஒன்றரை வருடங்களுக்கு முன்பு, இதயம் பலவீனமடைந்து டெல்லியில் உள்ள ஒரு தனியார் இதய சிகிச்சை மையத்துக்கு வந்தார். அவரை பரிசோதனை செய்த டாக்டர் அஜய் கவுல், இதயம் செயலிழந்து வருவதாகவும், தற்போது மாற்று இதயம் கிடைக்க தாமதமாகி வருவதால், செயற்கை இதயத்தை பொருத்தலாம் எனவும் கூறினார். அதற்கு அந்த வணிகரும் சம்மதித்தார்.

பின்னர் வெற்றிகரமாக செயற்கை இதயம் பொருத்தப்பட்டது. அறுவை சிகிச்சையை தொடர்ந்து அவரை பரிசோதனை செய்ததில், செயற்கை இதயம் முழுமையாக செயல்பட்டு வருவதாகவும், உண்மையான இதயம் செயலிழந்து ஓய்வில் உள்ளதாகவும் தெரிய வந்தது.

அதன் பின்பு சில மாதங்கள் கழித்து, அவரை பரிசோதனை செய்த போது, அதிசயத்தக்க வகையில் அவரது உண்மையான இதயம் மீண்டும் இயல்பாக செயல்பட்டுக் கொண்டிருப்பதாக தெரியவந்தது. இதனை மீண்டும் உறுதி செய்யும் வகையில், மருத்துவர் அஜய் கவுலின் தலைமையில், மருத்துவ குழு ஒன்று ஹனி ஜவாத்தை மேலும் தீவிரமாக பரிசோதனை செய்தனர். அந்த பரிசோதனையில் உண்மையான இதயம் நன்றாக செயல்பட்டு வருவதாகவும், செயற்கை இதயத்தின் செயல்பாடு தானாக குறைந்து வருவதாகவும் தெரிய வந்தது.

அதன் பின்பு ஹனி ஜவாத்தின் செயற்கை இதயம், அறுவை சிகிச்சை இல்லாமல், புதிய தொழில்நுட்பத்தால் அகற்றப்பட்டது. இப்போது அவரது இதயம் நன்றாக செயல்பட்டு வருகிறது.

இந்த விநோதம், மருத்துவர்கள் வட்டாரத்தில் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் ஹனி ஜவாத், இதனை தன்னுடைய மறுபிறப்பு என்று மகிழ்ச்சியாகத் தெரிவித்துள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்