என்.ஜி.கேவிலிருந்து சூர்யாவை காப்பாற்றிய காப்பான்: திரை விமர்சனம்

Arun Prasath

வெள்ளி, 20 செப்டம்பர் 2019 (14:20 IST)
நடிகர் சூர்யா, நடித்து கே.வி,ஆனந்த் இயக்கத்தில் உருவான, காப்பான் திரைப்படம் இன்று வெளியாகியுள்ள நிலையில் இந்த திரைப்படம் வெற்றி பெருமா? மக்களிடம் வரவேற்பு பெற்றுள்ளதா என்பதை குறித்து பார்க்கலாம்.

நடிகர் சூர்யாவின் கடந்த சில திரைப்படங்கள் மக்களிடம் சரி்யான வரவேற்பை பெறாத நிலையில், மிகுந்த எதிர்பார்ப்புடன் உருவான காப்பான் திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. இந்த திரைப்படத்தின் முக்கிய கதாப்பாத்திரங்களாக மோகன் லால், ஆர்யா, போமன் இரானி மற்றும் கதாநாயகியாக ஷாயிஷாஆகியோர் நடித்துள்ளனர். அயன், கோ, கவண் ஆகிய வெற்றித் திரைப்படங்களை இயக்கிய கே.வி. ஆனந்த், இந்த திரைப்படத்தையும் இயக்கியுள்ளார். பெரும் எதிர்பார்ப்புடன் வெளிவந்திருக்கும் காப்பான் திரைப்படத்தின் விமர்சனத்தை இனி பாக்கலாம்.

படத்தின் தொடக்கத்திலேயே நாட்டின் பிரதமர் மோகன் லாலை கொள்வதற்கு ஒரு திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இதை தொடர்ந்து சூர்யா பல நாச வேலைகளை செய்கிறார். கடந்த கே.வி.ஆனந்த் திரைப்படங்களின் பாணியை போல் இந்த திரைப்படத்திலும், மோகன் லாலை காப்பாற்றவே சூர்யா பல நாச வேலைகளை செய்வது தெரிய வருகிறது. மேலும் அவர் ஒரு ரகசிய உளவாளி எனவும் தெரிய வருகிறது. பிறகு பிரதமரின் பாதுகாப்பு படையில் சூர்யா சேர்கிறார். அதை தொடர்ந்து பிரதமரின் உயிருக்கு பலரும் குறி வைக்கின்றனர். அவர்களிடமிருந்து சூர்யா, மோகன் லாலை காப்பாற்றினாரா? இல்லையா? என்பதே காப்பான் திரைப்படத்தின் கிளைமேக்ஸ்.

ரகசிய உளவாளியாக நடித்திருக்கும் சூர்யா, படம் முழுவதும் துடிதுடிப்புடன் இருக்கிறார். முக்கியமாக பிரதமர் மோகன் லாலை காப்பாற்றும் காட்சிகளிலும் சண்டை காட்சிகளிலும் மிளிர்கிறார்.

எந்த கதாப்பாத்திரத்திலும் கச்சிதமாக பொருந்தும் மோகன் லால் இதில் தேசிய கட்சி தலைவர்கள் போல் உடை அணிந்து, நம்முடைய தற்போதைய பிரதமரை நம் கண்முன் கொண்டு வருகிறார். பொதுவாக இவர் பேசும் தமிழ் வசனங்களில் மலையாள வாசனை கலந்திருந்தாலும், அவரின் வசனங்களுக்கு திரையரங்குகளில் கைத்தட்டல் அள்ளுகிறது. பிரதமர் மோகன் லாலின் மகனாக நடித்திருக்கும் நடிகர் ஆர்யாவின் நடிப்பு சில இடங்களில் மட்டும் கவர்ந்திழுகிறது. பிரதமரின் செக்ரேடரியாக வரும் ஷாயிஷா தன்னுடைய கதாப்பாத்திரத்தில் சிறப்பாகவே நடித்துள்ளார்.

ஹாரீஸ் ஜெயராஜின் இசையில் பாடல்கள் துள்ளல் ரகமாக இருந்தாலும்,  திரைக்கதைக்கு சம்பந்தமில்லாத இடங்களில் வருவது பார்வையாளர்களை உச்சுக்கொட்ட வைக்கிறது. ஒளிப்பதிவாளர் எம்.எஸ்.பிரபு காட்சிகளை கச்சிதமாக படமாக்கியுள்ளார். ஆண்டனியின் படத்தொகுப்பு திரைக்கதையை விறுவிறுப்பாக கொண்டு செல்வதற்கு உதவுகிறது.

பட்டுக்கோட்டை பிரபாகரின் விவசாயிகள் குறித்த வசனங்கள் புதுமையாக இல்லையென்றாலும் பல மாஸ் வசனங்கள் ரசிகர்களின் கைத்தட்டல்களை அள்ளுகிறது.

வழக்கமான கே.வி,ஆனந்த் திரைப்படங்களில் வரும் டிவிஸ்டுகளை போல இந்த திரைப்படத்திலும் டிவிஸ்டுகள் இருந்தாலும், பார்வையாளர்களுக்கு முன்னமே தெரிந்துவிடுவது போல் அமைந்திருப்பது திரைப்படத்தின் பெரிய சறுக்கல் எனலாம். திரைப்படத்தில் பல லாஜிக் குறைகள் இருந்தாலும், ரசிகர்களுக்கு இந்த திரைப்படம் விருந்தாகவே அமைந்திருக்கிறது. முக்கியமாக என்.ஜி.கே திரைப்படத்தின் தோல்வியிலிருந்து  சூர்யாவை காப்பான் காப்பாற்றியுள்ளது என்றே கூறலாம்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்