தீபம் ஏற்ற வேண்டிய முறைகள் அவற்றின் பலன்கள் பற்றி தெரியுமா?

நாம் தினந்தோறும் காலையும், மாலையும் பூஜை அறையில் தீபம் ஏற்றி ஆண்டவனை வணங்குகிறோம். தினம் தீபம் ஏற்றும்  நம்மில் எத்தனை பேருக்குத் தீபம் ஏற்ற வேண்டிய முறைகள் பற்றியும், அவற்றின் பலன்கள் பற்றியும் தெரியும்?

 
தீபம் ஏற்றும்போது கிழக்குத் திசையில் உள்ள முகத்தை மட்டுமே ஏற்றினால் நம்மைத் தொடரும் துன்பங்கள் நீங்குவதுடன்  மக்களிடையே நன்மதிப்பும் கிடைக்கும். மேற்குத் திசையில் உள்ள முகத்தைமட்டும் ஏற்றினால் சகோதரர்களிடையே ஒற்றுமை  ஏற்படும்; கடன் தொல்லைகள் விலகும்.
 
சர்வ மங்களமும், பெரும் செல்வமும் வேண்டுவோர் வட திசையில் உள்ள முகத்தை ஏற்ற வேண்டும். தென் திசையில் உள்ள  முகத்தை ஒருபோதும் ஏற்றக்கூடாது. எதிர்பாராத தொல்லைகளும், கடன்களும் பாவங்களும் கூடும்.
 
திரிகளின் வகைகளும் அதன் பலன்களும்:
 
1. பஞ்சுத்திரி - சுகங்களைக் கூட்டும் தன்மை கொண்டதுதான் பஞ்சுத்திரி.
 
2. தாமரைத் தண்டு திரி - முற்பிறவியின் பாவங்களை அகற்றி செல்வத்தைத் தக்க வைத்துக் கொள்ள வேண்டுமென்றால்  தாமரைத் தண்டு திரி போட்டு விளக்கேற்ற வேண்டும்.
 
3. வாழைத்தண்டு திரி - மழலைப் பேறில்லையே என ஏங்குவோர் வாழைத்தண்டு திரி போட்டு விளக்கேற்ற வேண்டும்.
 
4. வெள்ளெருக்குப் பட்டைத் திரி - செய்வினைகள் நீங்கவும், நீடித்த ஆயுள் பெறவும் வெள்ளெருக்குப் பட்டைத் திரியில்  விளக்கேற்ற வேண்டும். முழுமுதற் கடவுளான கணேசப்பெருமானுக்கும் உகந்தது இது.
 
5. தம்பதிகள் மனமொத்து வாழவும், மகப்பேறு பெறவும் மஞ்சள் நிறங்கொண்ட புதிய திரிபோட்டு விளக்கேற்ற வேண்டும்.

வெப்துனியாவைப் படிக்கவும்