தொண்டை தொற்றுகள் ஏன் வருகின்றன? அதற்கு என்ன செய்யலாம்...

தொண்டை வலி, கரகரப்பு, தொண்டை வீக்கம் போன்ற அனைத்தையுமே தொண்டைப் புண் என்று பொதுவாகக் கூறலாம். உண்மையில் இது தொண்டைப் பகுதியில் உண்டாகும் அழற்சியாகும்.


 
 
சாதாரணமாக இது வைரஸ் தொற்றால் உண்டாவது. பெரும்பாலும் சாதாரண சளியை உண்டு பண்ணும் வைரஸ் கிருமியால்தான் அதிகமான தொண்டைப் புண் உண்டாகிறது. சில வேளைகளில் பேக்டீரியா கிருமிகளாலும் இது உண்டாகலாம்.
 
தொண்டை அழற்சி ஏற்பட ஸ்டெப்டோகோகஸ், ஹிமோபில்ஸ் ஆகிய பாக்டீரியாக்கள் தான் காரணம். அதுபோல, அடெனோவைரஸ், எப்ஸ்டின் - பார் ஆகிய வைரஸ்கள் காரணமாக உள்ளன. இந்த பாக்டீரியா, வைரஸ்கள், அடுத்தவரிடம் இருந்தும் தொற்றும்; சில காரணங்களாலும் தொற்றும். குடும்பத்தில் உள்ள யாருக்காவது டான்சிலிட்டிஸ் இருந்தால், மற்ற சிறு வயதினருக்கும் தொற்றும். அதனால், டம்ளர் உட்பட சில பொருட்களை ஒருவர், மற்றவருடன் பகிர்ந்துக் கொள்ளவே கூடாது.
 
குரல்வளையில் ஏற்படும் வைரஸ் தொற்று நோயில் தொண்டைக் கரகரப்பு, பேசுவதில் சிரமம், குரல் மாற்றம் போன்றவற்றோடு தொண்டை வலியும் சேர்ந்து வரலாம். தொண்டைப் புண் சிறு பிள்ளைகளுக்கு எளிதில் ஏற்படும் ஒரு நோயாகும். ஆனால் பெரியவரிடமும் இது பரவலாகக் காணப்படும்.
                                                                       
தொண்டைப் புண் அல்லது வலி எதனால் உண்டானது என்பதைப் பொருத்து அறிகுறிகள் மாறுபடலாம். அவை வருமாறு:
 
* வலி அல்லது அரிப்பு போன்ற உணர்வு
* உணவு  விழுங்கும்போதும் பேசும்போதும் வலி
* உலர்ந்த தொண்டை
* கழுத்துப் பகுதியில் கரலை உருண்டைகள்
* தொண்டைச் சதை வீக்கம்
* தொண்டைச் சதையில் சீழ் அல்லது வெள்ளைப் புள்ளிகள்
* குரல் கம்மிப்போதல்
 
வைரஸ் காரணமாக தொண்டைப் புண் உண்டானால் தானாக ஒரு வாரத்தில் குணமாகும். பேக்டீரியா காரணமாக இருந்தால் அதற்கு எண்டிபையாட்டிக் தேவைப்படும். ஓய்வும், நிறைய நீர் பருகுவதும் நல்லது. உப்பு கலந்த சுடுநீரில் வாய் கொப்பளிப்பது நல்லது. கிருமிகளைக் கொல்லும் வாயில் இட்டு சப்பும் மருந்துகளும், தொண்டை கொப்பளிக்கும் மருந்துகளும் பயன்படுத்தலாம். ஒவ்வாமையை உண்டுபண்ணுபவற்றைத் தவிர்ப்பது நல்லது.
 
தடுப்பு முறைகள்:
 
தொண்டைப் புண்ணை உண்டுபண்ணக்கூடிய கிருமிகள் எளிதில் தோற்றும் தன்மைகொண்டவை. தொண்டைப் புண் பரவலாக குழந்தைகளுக்கு வரலாம் என்பதால் அவர்களுக்கு சில சுகாதாரமான பழக்கவழக்கங்களைச் சொல்லித்தரவேண்டும்.
 
1. கைகளை நன்றாக கழுவவேண்டும் ​ குறிப்பாக கழிவறை சென்றபின், உணவு உண்ணும் முன், இருமிய தும்மிய பின்.
 
2. அடுத்தவர் குடித்த குவளையில் பகிர்ந்து குடிக்கக்கூடாது.
 
3. கண்டதையும் வாயில் வைத்து சப்பக்கூடாது.
 
4. பிறர் பயன்படுத்தும் கைபேசியையும், தொலைகாட்சியை இயக்கம் கைக்கருவியையும் கையில் எடுத்து விளையாடக்கூடாது. அதில்கூட கிருமிகள் இருக்கலாம் - முன்பு பயன்படுத்தியவருக்கு கிருமித் தொற்று இருந்தால்.
 
5. இருமும்போதும் தும்மும்போதும் மெல்லிய காகிதத்தைப் பயன்படுத்தி உடன் குப்பைத் தொட்டியில் போட்டுவிடவேண்டும்.
 
6. நிறைய நீர் பருக வேண்டும்.
 
7. காய்கறிகள் பழங்கள் உண்ணும் பழக்கத்தைக் கடைப்பிடிப்பது நல்லது. அவை உடலின் எதிர்ப்புச் சக்தியை உயர்த்தி கிருமிகள் தொற்றைத் தவிர்க்கும்.

வெப்துனியாவைப் படிக்கவும்