‘கேட்’ தேர்வு மூலம் என்ஜினீயரிங் பட்டதாரிகளுக்கு மத்திய அரசு வேலை

திங்கள், 26 செப்டம்பர் 2016 (17:44 IST)
கேட் தேர்வின் அடிப்படையில் மத்திய அரசு நிறுவனங்களில் என்ஜினீயரிங் பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பு அறிவிப்புகள் வெளியாகத் தொடங்கி உள்ளன.

 
இந்திய எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு நிறுவனம்:
 
சுருக்கமான ஓ.என்.ஜி.சி. என அழைக்கப்படுகிறது. முன்னணி பொதுத்துறை நிறுவனமான இது ஆண்டுதோறும் ‘கேட்’ தேர்வின் அடிப்படையில் கணிசமான பணியிடங்களை நிரப்பி வருகிறது.

தற்போது 2017 கேட் தேர்வின் அடிப்படையில் ஏ.இ.இ., கெமிஸ்ட், ஜியாலஜிஸ்ட், ஜியோபிசிக்ஸ்ட், மெட்டீரியல் மேனேஜ்மென்ட் ஆபீசர், புரோகிராமிங் ஆபீசர், டிரான்ஸ்போர்ட் ஆபீசர் போன்ற பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. பணியிடங்களின் எண்ணிக்கை இன்னும் அறிவிக்கப்படவில்லை.
 
மெக்கானிக்கல், சிவில், எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ், டெலிகம்யூனிகேசன், இன்ஸ்ட்ருமென்டேசன், கெமிக்கல், புரொடக்சன், பெட்ரோலியம், மெட்டீரியல் போன்றவை சார்ந்த என்ஜினீயரிங் பிரிவுகள் மற்றும் அறிவியல் பிரிவுகளில் பட்டப்படிப்பு அல்லது முதுநிலை படிப்புகளை 60 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருப்பதுடன், கேட் தேர்வில் வெற்றி பெறுபவர்களுக்கு பணிகள் உள்ளன.
 
விண்ணப்பதாரர்கள் 1-1-2017 தேதியில் 30 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும். விருப்பம் உள்ளவர்கள் நடக்க இருக்கும் ‘கேட்’ தேர்வுக்கு விண்ணப்பிக்க வேண்டும். மார்ச்/ ஏப்ரல் 2017-ல் இதற்கான ஆன்லைன் விண்ணப்பம் திறக்கும். கேட் தேர்வில் பெறும் மதிப்பெண்கள் அடிப்படையில் தகுதியானவர்கள், நேர்காணலுக்கு அழைக்கப்பட்டு தேர்வு செய்யப்படுவார்கள்.
 
கேட் தேர்வுக்கு விண்ணப்பிக்க www.gate.iitr.ernet.in என்ற இணையதளத்தையும், ஓ.என்.ஜி.சி. பணிகளுக்கு விண்ணப்பிக்க www.ongcindia.com என்ற இணைய தளத்தையும் பார்க்கலாம். கேட் தேர்வுக்கு 4-10-2016-ந் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

வெப்துனியாவைப் படிக்கவும்