’தீபாவளி வரலாற்றை தோற்றவர்கள் எழுத வேண்டும்’ - புது சர்ச்சை

லெனின் அகத்தியநாடன்

வெள்ளி, 28 அக்டோபர் 2016 (14:34 IST)
வரலாறானது வென்றவர்கள் எழுதியதாக இருந்தால் தோற்றவர்கள் வேறொரு வரலாறு எழுதுவார்கள். அதுபோல இதிகாசங்களும் புராணங்களும் வென்றவர்கள் எழுதியதாக இருந்தால் தோற்றவர்கள் அதை மறுவாசிப்பு செய்வார்கள்.
 

 
ராவணனின் - சூர்ப்பனகையின் - சம்பூகனின் நோக்கிலிருந்து ஏன் ராமாயணத்தை பார்க்கக் கூடாது? விதுரரின் - கர்ணனின் - ஏகலைவனின் நோக்கிலிருந்து ஏன் மகாபாரதத்தைப் பார்க்க கூடாது? மகிஷாசுரனின் நோக்கிலிருந்து ஏன் தேவிபுராணத்தை பார்க்க கூடாது? நிச்சயம் பார்க்க வேண்டும். அப்போதுதான் கடந்த காலத்தின் முழு உருவமும் எழுந்து நிற்கும்.
 
அப்படித்தான் தீபாவளி பற்றிய புராணத்தை நரகாசுரன் நோக்கிலிருந்தும் பார்க்கவேண்டும். சொல்லப்போனால் சமணர் நோக்கிலிருந்தும் பார்க்க வேண்டும். மகாவீரர் காலமானதையே தீபவரிசை வைத்து இப்போதும் நினைவு கூர்கிறார்கள் அவர்கள். மகாவீரரைத்தான் நரகாசுரன் என்று கதை கட்டி விட்டார்களோ வருணாசிரம மதத்தினர்?
 
இப்படி கேள்விகள் கேட்க வேண்டும். அதுவும் தீபாவளி நேரத்தில் கேட்பது விவாதத்தை கிளப்பும். என்ன, சாதாரண இந்துக்களின் மனம் நோகாதபடி இவற்றை கேட்க வேண்டும். நமது நோக்கம் அவர்களை வென்றெடுப்பதுதானே தவிர சங்பரிவாரத்தின் பக்கம் தள்ளி விடுவதல்ல.
 
வடஇந்தியாவில் இந்த கேள்விகளை அறிவு ஜீவிகள் எழுப்பாததால்தான் ஆர்எஸ்எஸ் வருணாசிரமவாதிகள் அதிக ஆட்டம் போடுகிறார்கள். தமிழகமோ சித்தர் காலந்தொட்டு பாவேந்தர் காலம்வரை இவற்றை எழுப்பியே வந்திருக்கிறது. அந்த முற்போக்கு தமிழ் மரபை முன்னெடுத்துச் செல்வோம்.
 
நன்றி : பேராசிரியர் அருணன்

வெப்துனியாவைப் படிக்கவும்