ஐபிஎல்-ல் இந்திய வீரர்கள் மட்டுமா? நோ சான்ஸ் – அடம் பிடிக்கும் சி எஸ் கே !

வியாழன், 14 மே 2020 (07:39 IST)
இந்திய வீரர்களை மட்டும் வைத்துக் கொண்டு ஐபிஎல் தொடரை நடத்தலாம் என்ற யோசனையை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மறுத்துள்ளதாக சொல்லப்படுகிறது.

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக இந்த ஆண்டு மார்ச் 29ஆம் தேதி நடக்க இருந்த ஐபிஎல் போட்டி காலவரையின்றி ஒத்தி வைக்கப்பட்டுள்ளன. ஒருவேளை ஆஸ்திரேலியாவில் நடக்க இருக்கும் டி 20 உலகக்கோப்பை தொடர் ரத்தாகும் பட்சத்தில் அப்போது இந்தியாவில் ஐபிஎல் தொடரை நடத்தலாம் என சொல்லப்படுகிறது. அப்படியே நடத்த முயற்சி செய்தாலும் வெளிநாட்டு வீரர்கள் இந்தியாவுக்கு வர வாய்ப்பில்லை என்று கூறப்படுகிறது.

இந்த நிலையில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் தலைமை செயல் அதிகாரி ரஞ்சித் பர்தாகுர் என்பவர் ஒரு புதிய யோசனையை கொடுத்துள்ளார். இதன்படி இந்த ஆண்டு நடைபெறும் ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் வெளிநாட்டு வீரர்கள் கலந்து கொள்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதால் இந்திய வீரர்களை மட்டுமே வைத்து ஐபிஎல் போட்டிகளை நடத்தலாம் என்றும், அவ்வாறு நடத்தினால் அது உண்மையான இந்தியன் பிரிமியர் லீக் தொடராக இருக்கும் என்றும் கூறியுள்ளார். இதே யோசனையை இந்திய அணியின் முன்னாள் வீரர் கம்பீரும் தெரிவித்துள்ளார்.

ஆனால் இதற்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மறுப்பு தெரிவித்துள்ளதாக சொல்லப்படுகிறது. இதுகுறித்து வெளியான செய்தியில் ‘இந்திய வீரர்களை மட்டும் வைத்துக் கொண்டு ஐ.பி.எல்., தொடரில் விளையாட எங்கள் அணிக்கு விருப்பம் இல்லை. அப்படி நடந்தால் பி.சி.சி.ஐ., சார்பில் நடத்தப்படும் உள்ளூர் தொடரான சையது முஷ்தாக் அலி டிராபி தொடரைப் போல, ஐ.பி.எல் தொடரும் ஆகிவிடும்.’ எனத் தெரிவித்துள்தாக சொல்லப்படுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்