உலகக்கோப்பை 2019: கிரிக்கெட்டுடன் மோதும் மழை - வெல்லப்போவது யார்?

புதன், 12 ஜூன் 2019 (21:05 IST)
ஐசிசி 2019 உலககோப்பைத் தொடரில் மூன்று ஆட்டங்கள் மழையால் நிறுத்தப்பட்டது, அவ்வளவு நல்ல தொடக்கமாக தெரியவில்லை.
இலங்கை மற்றும் வங்கதேசத்திற்கு இடையேயான ஆட்டம் செவ்வாய்கிழமை அன்று பிரிஸ்டலில் நடக்கவிருந்தது. ஆனால் மழையின் காரணமாக இந்த ஆட்டம் நிறுத்தபட்டது. இது இந்த தொடரில் நிறுத்தபட்ட மூன்றாவது ஆட்டமாகும்.
 
இதற்கு முன்பு இலங்கை மற்றும் பாகிஸ்தானுக்கு இடையேயான பிரிஸ்டலில் நடைபெறவிருந்த ஆட்டமும் தென் ஆப்ரிக்கா மற்றும் மேற்கு இந்திய தீவுகள் அணிக்கு இடையேயான சௌதாம்ப்டனில் நடைபெறவிருந்த ஆட்டமும் சில ஓவர்களுக்கு பிறகு மழையின் காரணமாக நிறுத்தப்பட்டது.
 
இதற்கு முன்பு 1992 மற்றும் 2003ஆம் ஆண்டுகளில் உலகக்கோப்பைத் தொடரில் இரண்டு ஆட்டங்கள் நிறுத்தப்பட்டன. ஆனால் இந்த 2019 தொடர் மூன்று ஆட்டங்கள் நிறுத்தப்பட்டு ஒரு புதிய சாதனை படைத்துள்ளது.
 
இந்த வாரம் நடக்கவிருந்த இந்திய அணியின் பயிற்சி ஆட்டத்தையும் மழை பாதித்துள்ளது. இந்த வாரம் முழுவதும் மழை எதிர்பார்க்கப்படுவதால் ஜூன் 13 அன்று இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான ஆட்டமும் ஜூன் 16 அன்று மான்செஸ்டரில் நடக்கவிருக்கும் இந்தியா மற்றும் பாகிஸ்தானுக்கு இடையேயான ஆட்டமும் பாதிக்கபட வாய்ப்பு இருக்கிறது.
 
"தற்போது இங்கே மழை பெய்யும். இரண்டு மணி நேரத்திற்கு மழை அல்லது தூறல் விழும். பின்பு வெயில் வந்துவிடும். ஆனால் 3 ஆட்டங்கள் இதனால் ரத்து செய்யப்பட்டது இந்த உலகக்கோப்பை தொடருக்கு நல்லதாக தெரியவில்லை. இதற்காக நாம் அமைப்பாளர்களையும் குறை கூற முடியாது," என ஞாயிற்று கிழமை ஓவலில் நடைபெற்ற ஆட்டத்தை பார்க்க பாத்திலிருந்து லண்டன் வந்திருந்த கிரிக்கெட் ரசிகர் செந்தில்குமார் கூறியுள்ளார் .
 
"இந்திய அணியின் ஆட்டங்கள் இந்த வாரமே நடக்க வேண்டும் என வேண்டிக்கொள்கிறேன். இந்திய அணியின் தற்போதைய ஆட்ட நிலையை பார்த்தால் இன்னும் இரண்டு ஆட்டங்களில் அணி அரையிறுதிக்கு தகுதி பெற்றுவிடும். இங்கிலாந்து மற்றும் மேற்கு இந்திய தீவுகள் அணிகளுக்கு மட்டுமே இந்தியாவை நாக் அவுட் ஆட்டங்களில் நிறுத்தும் வாய்ப்பு சிறிது இருக்கிறது," எனவும் கூறினார்.
 
செவ்வாயன்று பிரிஸ்டல் மற்றும் நாட்டிங்காம் பகுதிகளில் மழை பெய்யும்போது லண்டனில் மேகம் இருண்டு காணப்பட்டது. லண்டனில் திங்கள் கிழமை முழுவதும் மழை பெய்தது.
 
தொடர் மழை மற்றும் மழையால் ரத்தான மூன்று ஆட்டங்களால் நகரத்தில் உலகக்கோப்பை தொடரின் ஆர்வம் குறைந்து வருகிறது. ஆசியர்களை தவிர வேறு யாரும் இந்த தொடரை பற்றி பேசவதை பார்க்க முடியவில்லை.
 
இந்தியாவைப் போல இங்குள்ளவர்கள் கிரிக்கெட் போட்டிகளைப் பார்ப்பதற்காக தொலைக்காட்சிப் பெட்டிகளை பார்த்துக்கொண்டே இருப்பதில்லை. இங்கிலாந்து இந்த தொடரில் சிறப்பாக விளையாண்டாலும் அது தொடரை வெல்லும் போட்டியாளர்களில் ஒருவராக இருந்தாலும் அங்கே நீண்டநாளாக இருக்கும் மக்களிடமிருந்து ஒரு பெரிய உற்சாகம் இல்லை.
 
கடந்த 20 வருடங்களாக இங்கே கால்பந்துதான் அனைவரின் விருப்பத்திற்குரிய விளையாட்டாக இருந்து வருகிறது. ஒருவேளை இந்த போட்டியில் இங்கிலாந்து வெற்றி பெற்றால் மக்கள் மனதில் ஏதேனும் மாற்றம் ஏற்பட வாய்ப்புகள் இருப்பதாக கூறினார் ஆங்கில கிரிக்கெட் ரசிகர் டெரி.
 
இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரரான ஷிகர் தவான் கட்டை விரலில் காயம் ஏற்பட்டதால் 3 வாரங்களுக்கு ஓய்வில் இருப்பார் என்ற செய்தி வலம் வருவதால் , அவருக்கு பதிலாக அணியின் கேப்டன் விராட் கோலி யாரைத் தேர்ந்தெடுப்பார் என்ற விவாதம் பெருகி வருகிறது. சில செய்திகள் கே.எல் ராகுல் தொடக்க ஆட்டக்காரராக வருவார் எனவும் தினேஷ் கார்த்திக் நான்காவதாக களம் இறங்குவார் என அறிவிக்கிறது.
 
சென்ற ஆட்டத்தில் சிறப்பாக 100 ரன்களை எடுத்த ஷிகர் தவானுக்கு காயம் ஏற்பட்டது இந்திய ரசிகர்களை வருத்தத்திற்குள்ளாக்குகியது . இதனால் தவானுக்கு பதிலாக இந்திய அணிக்கு யார் வருவார் என்பது இந்திய கிரிக்கெட் ரசிகர்களின் தற்போதைய பேச்சாக இருக்கிறது.
 
ஷிகர் மற்றும் ரோஹித்தின் பார்ட்னெர்ஷிப் சிறந்தது ஆகும். இது இந்தியாவுக்கு கண்டிப்பாக ஓர் இழப்புதான். தவானுக்கு பதிலாக யார் வருகிறார் என்ற செய்தி இன்னும் வரவில்லை. அது ரிஷப் பந்த் ஆக மட்டுமே இருக்க முடியும் என இந்தியாவின் ஆட்டத்தை பார்த்த பார்தீப் கூறியுள்ளார்.
 
இந்த நேரத்தில் தவானுக்கு பதிலாக வேறு வீரரை பெறுவது அவ்வளவு சுலபம் இல்லை. கே.எல் ராகுல் தொடக்க ஆட்டக்காரராக ஒரு சிறந்த தேர்வாக இருக்க மாட்டார். அடுத்த சில ஆட்டங்கள் இந்தியாவுக்கு மிகவும் சிரமமானதே குறிப்பாக ரோஹித்துக்கு மிகவும் சிரமமாக இருக்கும் என இந்திய கிரிக்கெட் ரசிகர் கேசவ் கூறியுள்ளார்.
 
"நாட்டிங்காமில் மழை பெய்தாலும் சரி இல்லையென்றாலும் சரி. நாங்கள் மான்செஸ்டர் ஆட்டத்தை எதிர்பார்க்கிறோம். பாகிஸ்தானுடன் ஆட்டம் நடக்கும். இந்தியா தற்போது நல்ல நிலையில் இருக்கிறது. பும்ராவும் மற்ற பந்து வீச்சாளர்களும் பாகிஸ்தானின் பேட்மேன்களை திணற விடுவார்கள்," என்று உறுதியாக கூறினார் நவீன்.
 
மற்ற இடங்களிலிருந்து ஞாயிற்று கிழமை அன்று ஓவல் ஆட்டத்தை பார்க்க லண்டன் வந்த இந்திய ரசிகர்கள் கடைவீதிகளுக்கு சென்று மகிழ்ச்சியாக உள்ளனர் மற்றும் மான்செஸ்டர் ஆட்டத்தை பார்க்க உறுதியாக உள்ளனர்.
 
யஷ்வந்த் மற்றும் அவரின் நண்பர் உலகக்கோப்பையின் சில விளையாட்டுகளை பார்க்க வேண்டும் என இந்தியாவிலிருந்து வந்துள்ளனர்.புதன் அன்று நாட்டிங்காமில் ஆட்டம் நடக்கும் என எதிர்பார்த்து அங்கே செல்வதாக கூறினார்.
 
"ஓவலில் வெற்றி பெற்ற பின்னர் இரண்டு நாட்களாக கடைவீதிகளுக்கு சென்று சுற்றி பார்த்தோம். இந்த இங்கிலாந்து சுற்றுலாவை பாகிஸ்தானை வெற்றிபெற்றதோடு முடித்துகொள்ள விரும்புகிறோம்" என கூறினார் யஷ்வந்த்.
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்