"மாயமான விமானம் விழுந்த இடத்தை கண்டுபிடித்துவிட்டோம்" - இந்தோனீசிய கடற்படை

ஞாயிறு, 10 ஜனவரி 2021 (14:39 IST)
இந்தோனீசியா தலைநகர் ஜகார்தாவிலிருந்து நேற்று (சனிக்கிழமை) புறப்பட்டு சில நிமிடங்களிலே மாயமாகி விபத்துக்குள்ளானதாக கருதப்படும் போயிங் 737 பயணிகள் விமானம் விழுந்ததாக தாங்கள் கருதும் இடத்தை கண்டறிந்துள்ளதாக அந்த நாட்டு அரசு தெரிவித்துள்ளது.

ஸ்ரீவிஜயா ஏர் விமான சேவையின் இந்த விமானம் அந்க நாட்டின் மேற்கு கேலிமாந்தன் மாகாணத்தில் உள்ள போன்டியானக் என்ற இடத்தை நோக்கி 62 பயணிகளுடன் சென்று கொண்டிருந்தபோது சனிக்கிழமையன்று திடீரென மாயமானது.

இந்த நிலையில், சம்பவ இடத்திற்கு கடற்படையை சேர்ந்த முக்குளிப்பு வீரர்களுடன் 10க்கும் மேற்பட்ட கப்பல்களும் அனுப்பப்பட்டுள்ளன.

கடலில் விழுந்து விபத்துக்குள்ளானதாக அஞ்சப்படும் விமானத்தின் சிதைவுகளாக நம்பும் பொருட்களை புலனாய்வாளர்கள் ஆய்வு செய்து வருகின்றனர்.

நேற்று நள்ளிரவு தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்த தேடுதல் பணி, தற்போது இன்று (ஞாற்றுக்கிழமை) அதிகாலை முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது.

விபத்துக்குள்ளானதாக கருதப்படும் இந்த விமானம் போயிங் 737 மேக்ஸ் ரக விமானம் அல்ல என்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. கடந்த 2019ஆம் ஆண்டு ஆண்டு மார்ச் மாதம் முதல் கடந்த மாதம் வரை பாதுகாப்பு காரணங்களுக்கான இந்த ரக விமானங்களின் பயன்பாடு நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.

நடந்தது என்ன?

இந்தோனீசியத் தலைநகர் ஜகார்த்தாவில் இருந்து 62 பேரோடு சனிக்கிழமை (ஜனவரி 9) பிற்பகல் புறப்பட்ட போயிங் 737 ரக பயணிகள் விமானம் கடலில் விழுந்துவிட்டதாக அஞ்சப்படுகிறது.

கிளம்பிய நான்கே நிமிடங்களில் இந்த விமானத்தின் தொடர்பு அறுந்தது.

ஸ்ரீ விஜயா ஏர் விமான சேவையின் இந்த விமானம் அதே நாட்டில் உள்ள மேற்கு கேலிமாந்தன் மாகாணத்தில் உள்ள போன்டியானக் என்ற இடத்தை நோக்கி சென்று கொண்டிருந்தது.

காணாமல் போன விமானத்தில் 50 பயணிகள், 12 ஊழியர்கள் இருந்ததாகவும், அவர்களில் 7 பேர் சிறார்கள், 3 பேர் குழந்தைகள் என்றும் இந்தோனீசிய போக்குவரத்து அமைச்சர் புடி கர்ய சுமாடி தெரிவித்தார்.

போர்னியா தீவின் மேற்குப் பகுதியில் உள்ள இந்த நகருக்கு செல்வதற்கான பயண நேரம் வழக்கமாக ஒன்றரை மணி நேரம்.

கிளம்பிய சிறிது நேரத்தில் கட்டுப்பாட்டு நிலையத்துடன் அந்த விமானத்தின் தொடர்பு அறுந்தது.

உள்ளூர் நேரப்படி பகல் 2:40 மணிக்கு (கிரீன்விச் சராசரி நேரம் -7:40) அந்த விமானத்தோடு கடைசி தொடர்பு மேற்கொள்ளப்பட்டது.

அந்த விமானம் பறந்துகொண்டிருந்த உயரம் திடீரென ஒரே நிமிடத்தில் 10 ஆயிரம் அடி குறைந்தது என்கிறது விமான கண்காணிப்பு இணைய தளமான Flightradar24.com.

தீவு வாசிகள் கூறுவது என்ன?

விமானம் காணாமல் போன இடத்துக்கு அருகே உள்ள ஒரு தீவினைச் சேர்ந்த பலர் விமானத்தின் பாகங்கள் போன்று தோன்றும் பொருள்களைப் பார்த்ததாக பிபிசி இந்தோனீசிய சேவையிடம் தெரிவித்துள்ளனர்.

தேடுதல், மீட்புப் பணிகள் நடந்து வருவதாக அந்நாட்டுப் போக்குவரத்து அமைச்சகம் தெரிவித்துள்ளது.

விமானம் குறித்த தகவல்களைப் பெற முயன்றுவருவதாக இந்தோனீசிய விமான சேவை நிறுவனமான ஸ்ரீவிஜயா ஏர் தெரிவித்துள்ளது. இது இந்தோனீசியாவுக்கு உள்ளேயும் தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்கும் குறைந்த கட்டண விமானங்களை இயக்கும் நிறுவனம் ஆகும்.

எந்த வகை விமானம்?

இந்த விமானம் போயிங் விமான நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டது என்றாலும், சமீப ஆண்டுகளில் அடுத்தடுத்த விபத்துகளால் சர்ச்சைக்குள்ளான 737 மேக்ஸ் ரகம் அல்ல.
பதிவுத் தகவல்களின் படி, 26 ஆண்டுகளாக இயங்கி வரும் இந்த விமானத்தின் மாடல் போயிங் 737-500.

2018ம் ஆண்டு அக்டோபர் மாதம் இன்னொரு இந்தோனீசிய விமான சேவை நிறுவனமான லயன் ஏர் நிறுவனத்துக்கு சொந்தமான போயிங் 737 மேக்ஸ் ரக விமானம் ஒன்று கடலில் விழுந்து 189 பேர் இறந்தனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்