திபெத் பிரச்சனை: சீனாவை எதிர்க்க இந்தியாவுக்கு வாய்ப்பாகுமா?

வெள்ளி, 25 செப்டம்பர் 2020 (13:00 IST)
இமயமலை சிகரத்தில் மனிதர்கள் வாழ்வதற்கு சிரமமான சூழல் உள்ள உயரமான இடங்களில், நீடித்து வரும் மோதல் காரணமாக, இந்திய - சீன ராணுவத்தினர் அங்கு நேருக்கு நேர் எதிர்கொண்டு நிற்கின்றனர்.

திபெத்திய பிரச்சனையை பெரிதாக்கி, பதற்றத்தை ராஜ தந்திரமாக அதிகரிக்கலாம் என்று இந்திய அரசை, தேசிய ஊடகங்கள் வலியுறுத்தி வருகின்றன.
 
சீனாவின் ஆக்கிரமிப்பு அணுகுமுறையால், எப்போதும் பாதிக்கப்பட்ட நிலையிலேயே இருந்து வந்த இந்தியா, திபெத் குறித்த விஷயத்தில் ஊடகங்களின் அழைப்பை கவனத்தில் கொள்வது குறித்து இன்னும் வெளிப்படையாக எதையும் அறிவிக்கவில்லை.
 
ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு கவுன்சிலில் இடம் பெறுவதற்கு இந்தியா மேற்கொண்டு வரும் முயற்சிகளுக்கு, சீனா தொடர்ந்து முட்டுக்கட்டை போட்டு  வருகிறது.
 
பாகிஸ்தானில் பதுங்கி வாழும் தீவிரவாத குழு தலைவர்களுக்கு எதிராக இந்தியா மேற்கொள்ளும் நடவடிக்கைகளுக்கு சீனா திரும்பத் திரும்ப தடைகளை ஏற்படுத்தி வருகிறது.
 
பாகிஸ்தான் நிர்வாகத்தில் உள்ள காஷ்மீர் பகுதியில் சீனா கட்டமைப்புப் பணிகளை மேற்கொண்டு வருகிறது. இந்தியாவுக்கு எதிரான ராஜீய உறவுகளில் மேலாதிக்கம் செலுத்தும் வகையில், சீனா நடந்து கொள்கிறது என்பதற்கு இவையெல்லாம் குறிப்பிடத்தக்க உதாரணங்களாக உள்ளன.
 
இவ்வளவு பிரச்சனைகள் இருந்தாலும், சீனா மேற்கொண்ட ராணுவ நடவடிக்கையால் உருவான திபெத் பிரச்சனை, எளிதில் வசப்படக் கூடிய கனியைப் போல இந்தியாவுக்கு உள்ளது என்று இந்திய ஊடகங்களும் நிபுணர்களும் கூறுகின்றனர். இரு நாடுகளுக்கும் இடையிலான உறவு இதனால் ஏற்கெனவே  பாதிக்கப்பட்டுள்ளது.

திபெத் குறித்து இந்தியாவின் உறுதியற்ற நிலைப்பாடு
 
திபெத்திய மக்கள் ஏராளமானோருக்கு இந்தியா அடைக்கலம் கொடுத்துள்ளது. அந்த மக்களின் மதகுருவான தலாய் லாமாவும் இந்தியாவில் இருக்கிறார். சீனாவின்  அந்த ஆக்கிரமிப்பு நடவடிக்கை குறித்து, நீண்டகாலமாக இந்தியா மௌனம் காத்து வருகிறது.
 
இரு நாடுகளுக்கும் இடையில் மாறுபட்ட கருத்து அதிகரிப்பு மற்றும் சமன்நிலையற்ற ராணுவ பலம் அதிகரிப்பு என்ற வரலாற்றுக்கு இடையில் திபெத் இரு  கருத்துகளைக் கொண்டதாக இருக்கிறது.
 
திபெத்தை சீனா இணைத்துக் கொண்டதை பிரிட்டிஷ் அரசின் ஆலோசனையின்படி 1950-ல் இந்தியாவின் முதலாவது பிரதமர் ஜவாஹர்லால் நேரு ஏற்றுக்கொண்டார்  என்று பாஜக ஆதரவு வெளிநாட்டுக் கொள்கை நிபுணர் சேஷாத்ரி சாரி கூறினார். திபெத்தின் சுதந்திரத்தை அங்கீகரிப்பது உகந்ததாக இருக்காது என்று அப்போது  பிரிட்டிஷ் அரசு மதிப்பிட்டது.
 
``ராணுவ பலம் குறைவாக இருந்த சமயத்தில், இந்தியாவின் பாதுகாப்பை உறுதி செய்வது மட்டும் தான் நேருவின் கவலைக்குரிய விஷயமாக இருந்தது. திபெத்  மீது சீனா உரிமை கோருவதை ஏற்றுக் கொண்டு, சீனாவுடன் நட்பை வளர்ப்பது தான் அவருக்கான வாய்ப்பாக இருந்தது'' என்று ThePrint செய்தி  இணையதளத்தில், சாரி எழுதிய கட்டுரையில் கூறியுள்ளார்.
 
அடுத்தடுத்த தசாப்தங்களில், சீனாவுடன் இந்தியாவின் உறவு நெருக்கமானது. திபெத்திய தலைமயுடன் ஈடுபாடு கொள்வதை அடுத்தடுத்த அரசுகள் குறைத்துக்  கொண்டன - குறைந்தபட்சம் வெளிப்படையாக திபெத்திய தலைமையுடன் அதிக தொடர்பில் இல்லை.
 
சீனாவின் உணர்வுகளைப் புண்படுத்தக் கூடாது என்பதற்காக, 2018ல் பிரதமர் நரேந்திர மோதி தலைமையிலான அரசு, திபெத் தொடர்பான செயல்பாடுகளில்  பங்கேற்க வேண்டாம் என்று மூத்த அரசியல்வாதிகள் மற்றும் அரசு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டது.
 
அதேசமயத்தில், தலாய் லாமா புகலிடம் தேடி வந்து 60 ஆண்டுகள் ஆனதை ஒட்டிய நிகழ்ச்சி வேறு இடத்திற்கு மாற்றப்பட்டது. புதுடெல்லியில் நடைபெறுவதாக  இருந்த அந்த நிகழ்ச்சியை ஹிமாச்சல பிரதேசத்தில் உள்ள தர்மசாலாவுக்கு மாற்றப்பட்டது.
 
அந்நிகழ்ச்சியில் கலந்து கொள்ளுமாறு வந்த அழைப்புகளை ஆளும் பாஜக மற்றும் எதிர்க்கட்சியான காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் பலரும்  நிராகரித்துவிட்டனர்.
 
திபெத் விஷயத்தில் சீனாவை எதிர்த்து செயல்படத் தவறிவிட்டதாக காங்கிரஸ் கட்சியின் நேரு முதல், அடுத்து வந்த பாஜக பிரதமர்கள் அட்டல் பிஹாரி  வாஜ்பேயி, நரேந்திர மோதி உள்ளிட்டோர் மீது சீன விவகாரங்கள் குறித்த இந்திய நிபுணர் பிரம்ம செல்லானே குற்றஞ்சாட்டுகிறார்.
 
``1954ல் திபெத்தில் தனக்கு இருந்த எல்லைப்புற உரிமைகளை, ஆக்கிரமிப்பு செய்த சீனாவுக்கு நேரு விட்டுக் கொடுத்தார். திபெத் சீனாவின் ஒரு பகுதி என்று 2003-ல்  வாஜ்பேயி முறைப்படி அங்கீகாரம் அளித்தார். தலாய் லாமா மற்றும் வெளிநாட்டில் உள்ள திபெத்திய அரசாங்கத்துடனான அதிகாரப்பூர்வமான அனைத்து  உறவுகளையும் மோதி முறித்துக் கொண்டார்'' என்று செல்லானே ட்விட்டர் பதிவில் கூறியுள்ளார்.
 
திபெத் கொள்கையை நெருக்குவதற்கான கோரிக்கை
சீனாவுக்கு எதிராக அதிக உறுதியுடன் நடவடிக்கை எடுத்து வரும் இந்தியாவுக்கு, இப்போது திபெத் பிரச்சினை ஒரு திருப்புமுனையாக இருக்கும் என்று முன்னணி  இந்திய ஊடகங்கள் கூறியுள்ளன.
 
உதாரணமாக பிரபல இந்தி பத்திரிகை டைனிக் ஜாக்ரன் செப்டம்பர் 6 ஆம் தேதி, அமெரிக்க பாணியைப் பின்பற்றி திபெத் விவகாரத்தில் சீனாவுக்கு இந்தியா சவால்  விடுக்க வேண்டும் என்று கூறியுள்ளது. ``சர்வதேச அரங்குகளில் இந்தப் பிரச்சனையை எழுப்பி, திபெத்தில் இருந்து சீனா வெளியேற வேண்டும் என்று இந்தியா  கோருவதற்கான சரியான தருணம் இது.
 
அமைதி மற்றும் நட்பு குறித்து புரிந்து கொள்ளும் நிலையில் சீனா இல்லை என்பதால், முரட்டுத்தனமான சீனாவுக்கு எதிராக வலுவான ராஜீய ரீதியிலான  செயல்பாடு தேவை'' என்றும் அந்தப் பத்திரிகை கூறியுள்ளது.
 
ரிபப்ளிக் டி.வி., இந்தியா டுடே டெலிவிஷன் போன்ற பிரபல இந்திய செய்திச் சேனல்களும் இதே மாதிரி கருத்தை வெளியிட்டுள்ளன. வெளிநாட்டில் உள்ள  திபெத்திய அரசின் தலைவராக இருக்கும் லாப்சங் சங்கேவின் நேர்காணல்கள் ஒளிபரப்பு செய்யப்பட்டன.
 
இந்தியாவிடம் இருந்தும், இந்திய மக்களிடம் இருந்தும் திபெத்திய மக்களுக்கு ``ஏராளமான'' ஆதரவு கிடைத்துள்ளது என்று, மற்றொரு ஆங்கில செய்திச் சேனலான  என்.டி.டி.வி. 24 X 7 -க்கு அளித்த பேட்டியில் சங்கே கூறியுளளார்.
 
திபெத் விவகாரம் தங்களின் ``முக்கியமான பிரச்சனைகளில்'' ஒன்று என சீனா கருதும் நிலையில், இந்தியாவும் அதை ``முக்கியப் பிரச்சனை'' என்ற அளவில்  அணுகி, சீன தரப்பில் இருந்து தீர்வை ஏற்படுத்த வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.
 
திபெத் பிரச்சனை இந்தியாவுக்கு சாதகமாகுமா?
 
சீனாவுக்கு எதிராக கடந்த சில மாதங்களில் பல பொருளாதார நடவடிக்கைகள் எடுத்துள்ள இந்தியா, திபெத் கொள்கையில் பெரிய மாற்றம் எதையும்  செய்யவில்லை.
 
திபெத்தியர்களைக் கொண்ட இந்திய சிறப்புப் படைப் பிரிவாக, ஸ்பெஷ்ல் ஃபிரான்டியர் ஃபோர்ஸ் எனப்படும் சிறப்பு எல்லைப்புற படை (எஸ்.எஃப்.எஃப்.) பிரிவை சீன  எல்லையில் இந்தியா நிறுத்தியிருப்பது அந்நாட்டுக்கான ``ராணுவ மற்றும் ராஜீய ரீதியிலான எச்சரிக்கை'' என்று சில ஊடகங்கள் கருதுகின்றன.
 
பாஜக மூத்த தலைவரான ராம் மாதவ், சீன எல்லையில் தற்செயலாக நடந்த வெடிவிபத்தில் உயிரிழந்ததாகச் சொல்லப்படும் எஸ்.எப்.எப். வீரரின் இறுதிச் சடங்கில்  செப்டம்பர் 7 ஆம் தேதி கலந்து கொண்டார் என்பதையும் இந்திய ஊடகங்கள் குறிப்பிடுகின்றன. இறுதிச் சடங்கில் மாதவ் கலந்து கொண்டது, சீனாவுக்கு உரிய  தகவலை தெரிவிப்பதற்கான அடையாளம் என சில ஊடகங்கள் கூறியுள்ளன.
 
``லடாக்கில் நமது எல்லையைப் பாதுகாக்கும் பணியில் உயிரிழந்த எஸ்.எப்.எப். கம்பெனி லீடர் நியிமா டென்ஜின் இறுதிச் சடங்கில் பங்கேற்று, மலர்வளையம்  வைத்து அஞ்சலி செலுத்தினேன். இதுபோன்ற தீரம் மிகுந்த வீரர்களின் தியாகங்கள் இந்திய - திபெத்திய எல்லையில் அமைதியை உருவாக்கட்டும். அதுதான் உயிர்த்  தியாகம் செய்தவர்களுக்கான உண்மையான அஞ்சலியாக இருக்கும்'' என்று அந்த பாஜக அரசியல்வாதி டிவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
 
பின்னர் மாதவ் அந்த டிவிட்டர் பதிவை நீக்கிவிட்டார், அதற்கான காரணம் தெரியவில்லை.
 
எல்லை விரிவாக்க நடவடிக்கைகளுக்காக சர்வதேச கருத்துகள் இருந்தபோதிலும் சீனா அதுபற்றி கவலைப்படவில்லை என்ற சமயத்தில், திபெத் பிரச்சினையை  எழுப்புவது சரியானதாக இருக்குமா என்பதில் மோதியின் அரசு இன்னும் முழுமையாக திருப்தி அடையவில்லை என்பதை, அரைமனதுடன் கூடிய செயல்பாடுகள்  காட்டுகின்றன.
 
சீனாவுடன் உறவு சுமுக நிலைக்கு வரும் என்ற எதிர்பார்ப்பு காரணமாக, திபெத் பிரச்சினையில் இந்தியா அமைதியாக இருக்கலாம். ஏனெனில் சீன செல்போன்  ஆப்கள் மீதான தடையை நீக்குவது எளிதாக இருக்கும். ஆனால் 70 ஆண்டுகளாக தொடர்ந்து கடைபிடித்து வரும் திபெத் கொள்கையை மாற்றிக் கொண்டால்,  குறுகிய காலத்திற்குள் அதை திரும்பப் பெறுவது சாத்தியமற்றுப் போய்விடும்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்