இலங்கை அருகே இந்திய மீன்பிடி படகு மூழ்கிய இடம் தெரிந்தது: 2 உடல்கள் மீட்பு

புதன், 20 ஜனவரி 2021 (23:30 IST)
யாழ்ப்பாணம் - நெடுந்தீவு கடற்பரப்பில், இலங்கை கடற்படை படகுடன் மோதி விபத்துக்குள்ளான இந்திய மீன்பிடிப் படகு மற்றும் அதில் இருந்த மீனவர்களை தேடும் பணிகள் 2வது நாளாக இன்றும் நடக்கிறது.
 
யாழ்ப்பாணம் - நெடுந்தீவு கடற்பரப்பில் விபத்துக்குள்ளான இந்திய மீனவப் படகிலிருந்து இரு சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
 
இலங்கை கடற்படை ஊடகப் பேச்சாளர் கேப்டன் இந்திக்க டி சில்வா, பிபிசி தமிழுக்கு இதனைக் கூறினார்.
 
அந்த படகு மூழ்கிய இடம் தெரிந்ததாகவும், அது ஆழ்கடலுக்குள் முழுமையாக மூழ்கியுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார். இந்த படகில் நான்கு பேர் இருந்திருக்கலாம் என இலங்கை கடற்படை சந்தேகிக்கின்றது எனவும் எஞ்சிய இரண்டு பேரையும் தாம் தொடர்ந்து தேடி வருவதாகவும் அவர் கூறுகின்றார்.
 
யாழ் போதனா வைத்தியசாலையில் பரிசோதனைக்காக உடல்கள் ஒப்படைக்கவுள்ளது என்று இலங்கை கடற்படை பிபிசி தமிழுக்கு தெரிவித்துள்ளது.
 
உயிரிழந்த நிலையில், இரண்டு பேரின் சடலங்கள்
இலங்கை கடற்படையின் சுழியோடிகளின் உதவியுடன் இன்று (20) மதியம், கடலுக்குள் மூழ்கி விபத்துக்குள்ளான படகை தாம் கண்டுபிடித்ததாக கடற்படை ஊடகப் பேச்சாளர் கூறினார். அதனைத் தொடர்ந்து, கடலுக்குள் மூழ்கிய படகுக்குள் கடற்படையின் சுழியோடிகள் சென்று, மீட்புப் பணிகளை முன்னெடுத்துள்ளனர். இதன்போது, கடலுக்குள் மூழ்கிய படகில் உயிரிழந்த நிலையில், இரண்டு பேரின் சடலங்களை தாம் கண்டெடுத்ததாக கடற்படை பேச்சாளர் தெரிவிக்கின்றார்.
 
கடலில் மூழ்கிய இந்திய மீனவர்களை தேடும் பணி
 
அத்துடன், விபத்துக்குள்ளாகி மூழ்கும் படகை தேடும் பணிக்காக கடற்படைக்கு சொந்தமான படகுகளும் மற்றும் கப்பலொன்றும் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.
 
இலங்கை கடற்பரப்புக்குள் நேற்று முன்தினம் (ஜனவரி 18) இரவு சட்டவிரோதமாக நுழைந்த, 50க்கும் அதிகமான இந்திய மீன்பிடி படகுகள் யாழ்ப்பாணம் - நெடுந்தீவை அண்மித்த கடற்பரப்பில் மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்ததாக இலங்கை கடற்படை குறிப்பிடுகிறது.
 
இதன்போது, சட்டவிரோதமாக நாட்டுக்குள் நுழைந்த இந்திய மீனவர்களை கைதுசெய்யும் நடவடிக்கைகளை இலங்கை கடற்படை முன்னெடுத்ததாக கடற்படை ஊடகப் பேச்சாளர் கூறுகிறார்.
 
இதையடுத்து, இலங்கை கடற்பரப்பிலிருந்து இந்திய படகுகள் தப்பிச் சென்ற வேளையில், ஒரு படகு மட்டும் இலங்கை கடற்படையின் படகை மோதி சேதப்படுத்தியதாக அவர் குறிப்பிடுகின்றார்.
 
'இருளில் தாக்கிவிட்டு தப்பிய இந்திய மீன்பிடி படகு கடலில் மூழ்கியது' - இலங்கை கடற்படை
"பிரபாகரனை நந்திக் கடலிலிருந்து நாய் போல இழுத்து வந்தேன்": கோட்டாபய பேச்சு
இந்திய படகுகள், இலங்கை கடற்படையிடமிருந்து தப்பிப்பதற்காக வழமையாகவே தமது படகை சேதப்படுத்துவதாகவும் அவர் கூறினார்.
 
இவ்வாறு நேற்று முன்தினமும் தமது படகை சேதப்படுத்தி, தப்பிச் செல்ல முயற்சித்த வேளையில், எதிர்பாராத விதமாக இந்திய படகு கடலில் கவிழ்ந்ததாக கடற்படை பேச்சாளர் இந்திக்க டி சில்வா கூறுகிறார்.
 
கடலில் மூழ்கிய இந்திய மீனவர்களை தேடும் பணி
 
விபத்துக்குள்ளான படகில் எத்தனை பேர் பயணித்தார்கள் என்பது தமக்கு தெரியாது என்றும் இந்திக்க டிசில்வா கூறினார்.
 
எனினும், இந்தியாவிலிருந்து மீன்பிடி நடவடிக்கைகளுக்காக சென்ற 4 மீனவர்கள், நாடு திரும்பவில்லை என இந்திய அதிகாரிகள் தம்மிடம் கூறியதாக கடற்படை பேச்சாளர் கேப்டன் இந்திக்க டி சில்வா கூறுகிறார்.
 
இந்திய அதிகாரிகளின் தகவல்களுக்கு அமைய, விபத்துக்குள்ளான படகில் 4 மீனவர்கள் இருந்திருக்கலாம் என அவர் சந்தேகம் வெளியிடுகின்றார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்